அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: சன்னாசி
காடு நாவலைப் படித்து முடித்தபின், புத்தகம் வந்து இரண்டு வருஷங்களானபின்னும் என்னத்தை எழுதுவது என்றுதான் தோன்றிக்கொண்டிருந்தது; இருந்தாலும் சரி வழக்கம்போல இதுவும் யாரேனுமொரு வருங்கால ‘இழக்கியல்வாலி’க்கு உதவக்கூடிய (நன்றி பெயரிலி)
அனுபவங்கள் என்ற ரீதியிலாவது தட்டிவைக்கலாமென்று ஒரு பதிவு. இதுவரை படித்திராமல், இனிமேல்தான் இப்புத்தகத்தைப் படிக்கப்போகிறவர்கள், அ ஆ இ ஈ உ என்று இருந்தும், அனைத்தும் அ வாகவோ ஆ வாகவோ இ யாகவோ தோன்றித் தொடக்கத்திலேயே வாசகனைக் காவுகேட்கும் ‘முன்னுரை’யைத் தயவுசெய்து தவிர்க்கவும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். காட்டுக்குள் போகாதவர்கள் (அல்லது குறைந்தபட்சக் காட்டனுபவமாவது உள்ளவர்கள்) கூடக் காட்டைப்பற்றிய புத்தகத்தைப்பற்றி எழுதலாமென்ற ஜனநாயகம் மீதான நம்பிக்கையில் நானும் குறைந்தபட்சம் தட்டிவைக்கிறேன். (சும்மாக் கலாய்த்தீர்களானால் ராஜேஷ்குமார் எத்தனை கொலைசெய்தார் என்ற கதாயுதத்தை எடுத்துவிடுவேன்
)
கிரிதரன் நாயர் ஒரு காண்ட்ராக்டர். மலைப்பகுதியில் நடக்கும் தனது மாமாவின் காண்ட்ராக்டுகளில் பயிற்சி பெறுவதிலிருந்து, பின்னர் தானே அவற்றை நடத்தும்வரையிலான பதின்ம வயதிலிருந்து கிட்டத்தட்ட மத்திம நாற்பது வயது வரையிலான அவரது வாழ்க்கையைக் காலவரிசையின்றி முன்னும் பின்னுமாகச் சொல்கிறது காடு. மனச்சிக்கல்களின் காடு என்று கொள்ளலாமென்று நினைக்கிறேன். இக் காலகட்டங்களில் கிரிதரன் சந்திக்கும் மனிதர்கள், அவர்களது சித்திரங்கள் என்று நீள்கிறது கதை. வழக்கம்போல, அனைத்துச் சித்திரங்களும் கருத்துக் கூறும் திறமைவாய்ந்தனவாகவே இருக்கின்றன. நீளநீள வாக்கியங்களிலோ, அல்லது நறுக்குத் தெறித்தாற்போல சில சொற்கள் மூலமோ, அல்லது நுணுக்கமான சில அசைவுகள் மூலமாகவோ தங்களது வார்ப்பின் இயங்கியலை வெகு நளினமான முறையில் நமக்கு உணர்த்திவிடக்கூடிய பாத்திரங்களே. தன் மாமா வீட்டு அல்சேஷன் நாயைக் குறிப்பிடவிரும்பும்போதுகூட கிரி, “நாய் ஜாதியிலே அது பிராமணனாக்கும். புத்திண்ணா புத்தி,,, அதுக்க புத்தியிருக்கே,,, பூட்டிய கதவை தாக்கோல் போட்டு தொறந்துபோடும். பாத்துக்கிடுங்க” என்று எறும்புக்கண்ணன் லட்சுமணன் சொன்னதைத்தான் நினைவுகூர்கிறான் (பக்.34). La Maga, Tamina, Jose Arcadio Buendia, Lebaziatnikov, Molly Bloom, Dr.Watson, Roberto della Griva, Jean Baptise Grenouille, Meursault, Eugenie Grandet என்று ஒரு உதாரணத்துக்குக் உருவக்கூடிய பிற கலாச்சாரப் பாத்திரங்களை உணர்ந்துகொள்ளமுடிகையில் கண்டன் புலையன், ஸ்தாணுநாதய்யர், ரெசாலம், வலிய பொற்றயில், குன்றேறிய பெருமாள் நாடார், எறும்புக்கண்ணன் லட்சுமணன் போன்ற குமரிமாவட்ட-கேரளப் பெயர்களை பேச்சுவழக்குகளை பாத்திரங்களை கால, இடச் சட்டகங்களுக்குள் பொருத்திப் படிக்கமுடிவது அவ்வளவு சிரமமாக இருக்குமா என்ன? கலாச்சார அந்நியத்துவத்தின் படிநிலைகள் பூகோள ரீதியில் ஐம்பது அறுபது கிலோமீட்டர் தூரங்களுக்கப்பாற்கூட வெகு வேறுபட்டதாக இருக்கும் பிரதேசத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை வெகு தெள்ளியதாக உணர்ந்திருக்கும் அதே நேரத்தில், கிளைத்துவரும் படைப்புக்களின் கலாச்சார மண்த்துவத்தை, அதன் வேர்ப்பிடிப்பின் ஆழத்தைக்கொண்டே மதிப்பிடவேண்டும்/தவிர்த்துக் குப்பைத்தொட்டியில் எறியவேண்டுமென்று (குறைந்தபட்சம் தேவைக்கேற்றவாறாவது) வலியுறுத்திய முந்தைய ‘பாலபாடங்களையும்’ யுலிஸஸின் ஐரிஷ் கலாச்சார பூத்தொட்டியாழ்வேர்களின் “அந்நியத்துவம்” குறித்து இதேயிடத்திலிருந்து வந்த எலிமெண்டரி ஸ்கூல் பாடங்களையும் இவ்விடத்தில் நினைவுகூரவேண்டியுள்ளது.
சங்கப்பாடல்களில் மனதைப் பறிகொடுத்து ஆழ்ந்தலையும் கிரிதரனின் அழகியல் உச்சத்துவம் நிர்ணயிக்கும் வார்ப்புரு, அவன் காண்ட்ராக்ட் பணி புரியும் காட்டிலுள்ள மலையன் ஜாதிப் பெண்ணைக் கண்டதும் அவளில் பொருந்தி உயிர்பெற்று, அவனது வாழ்வை ஸ்தம்பிக்க வைக்கிறது. அப்பெண்ணில் பிரதிபலித்துத் ததும்பி வழியும் காட்டின் அழகு மொத்தத்தையும், மலைத்தேன் ஏராளமாகக் குடித்துத் தலைக்கேறும் அதே கிறக்கத்துடன் பருகுகிறான் கிரிதரன். அந்த அழகியல் உணர்ச்சியின் எதிர்நிர்ணய மனோநிலை, பின்பு தான் திருமணம் செய்துகொள்ளும் பெண் வேணியை புத்தகத்தில் முதல்முறை பார்க்கும்போது “உள்ளேயிருந்து வேணி வந்தது. அதைப்போல ஒரு அசிங்கமான மனித உயிரை நான் பார்த்ததே இல்லை” (பக்.39) என்றும், “கரிய மெலிந்த உடல். புடைப்புக்களே இல்லாத சப்பை உடல். கடைசிவரை அவளில் எங்குமே சதை பிடிக்கவில்லை. உந்திய பற்கள். கண்களில் எக்கணமும் தயாராகக் கண்ணீர் ஊற்றுக்கள். சாதாரணப் பார்வையே ஆங்காரமும் துவேஷமும் தெறிப்பதாக இருக்கும். எனக்குத் தெரிந்து அவளுடன் பத்து வருடமாக நெருக்கமாக இருப்பவள் கோலம்மை மட்டும்தான். இருவருக்கும் பற்கள் வாய்க்கு வெளியே இருக்கும். புழக்கடைத் திண்ணையில் அமர்ந்து அந்தரங்கமாக அவர்கள் பேசுவது இரு வினோத விலங்குகள் முகம் உரசிக்கொள்வது போலிருக்கும்” (பக்.172) என்றாகவும், தான் குழப்பத்துடன் வெறுக்கும் தனது தாயின் பார்வையை “மச்சுப்பானைக்குள் பெருச்சாளியின் பார்வைபோல″ (பக்.432) என்றும் விவரிக்கிறது. காட்டுக்குள் காண்ட்ராக்ட் வேலைகளைக் கவனித்துக்கொள்ளச் செல்லும் கிரிக்கு சுவாரஸ்யமான மனிதர்கள் பலர் பரிச்சயமாகின்றனர்: ஒரு தேவாங்கைத் தன் பிள்ளைபோல் வளர்க்கும் மேஸ்திரி ரெசாலம் (வெகு நுட்பமான பாத்திரப்படைப்பு என்று ஏக்கி கொடுக்கும் மன ஆவேசத்தில் முன்னுரை பலிபோட்டுவிடுவதினாலோ என்னவோ, ஒரு கேரிகேச்சர் அளவுகூட இப்பாத்திரம் மனதில் ஒட்டவில்லை), கிறிஸ்துவத்தைத் தன் மண்மணம் நிறைந்த பகடியால், தர்க்கத்தால் அவ்வப்போது இடறிப்பார்க்கும் குட்டப்பன் (கடைசியில் விஷக்காய்ச்சல் ஆஸ்பத்திரியில் குட்டப்பன் ‘வாயடைத்துப் போவது’ இதைச் சமன் செய்துவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம்! வாஜ்’பேயி’களின் மதச்சார்பின்மை மாதிரி), ஓரினச்சேர்க்கை இரட்டையர்கள் ஆபேல்-ராபி
, எந்தவிதத்திலும் வாழ்க்கைத்தத்துவ ஞானம் குறைபடப் பெறாத சினேகம்மை, வந்துபோகும் ஏகப்பட்ட மாமிகள், பைபிளின் மற்றொரு பக்கமாகத் தானுமாகிப்போன மதமாற்றக் கிறிஸ்துவ ஸ்டீரியோடைப்பான குரிசு, எஞ்சினியர் மேனனின் ராட்சசக் காமுகி மனைவி, மற்றப்படி காட்டு தேவதை மலையத்தி என்று. இத்தனை பாத்திரங்களும் அவர்களது பேச்சிலும் புத்தகங்களினூடான நடமாட்டத்திலும் தங்களது ஊற்றுக்கண் ஒன்றே என்று திரும்பத்திரும்ப ஸ்தாபித்துக்கொண்டிருப்பதை வியந்து ரசிக்கமுடிந்தது. இத்தனை நேர்த்தியான, பிழையற்ற பாத்திரப்படைப்புக்களைக் காணும்போது நான்கு பக்கமும் உயர்ந்தெழும் அப்பழுக்கற்ற துல்லிய வெண்மைச் சுவர்களில் கண்கள் பிடுங்கி வெண்மையுடன் சேர்த்து அறையப்பட்டதுபோலத் தோன்றும் வாசக திகிலையும் மறுக்கமுடியவில்லை என்பதையும் இங்கே கூறிக்கொள்ளவேண்டும். உதாரணத்துக்கு கிறிஸ்துவப் பாதிரியாரொருவர் பற்றிய தனது விளக்கத்தில் சினேகம்மை “கோதம்பு நீரு செண்ணு வாங்கும். கேட்டுதா கொச்சேமான், நான் பதினஞ்சு நாளும் அவிய வேதக்கோயிலுக்குச் செண்ணு செபமும் பாட்டும் ஒக்கெ செய்தேன். பாதிரியாரு நல்ல தங்கப் பட்ட மனியன். பின்ன ஒரு பேச்சு பேசினா மெள்ளமாட்டு ரப்பர் நீட்டினா மாதிரி பேசுவாரு. சங்கதி நாம அறிஞ்சு பதிலும் சிந்திச்ச பிறவும் அவரு பேசி முடிச்சிருக்க மாட்டாரு. பாட்டும் கொள்ளாம். பின்ன நமக்கு செரிப்படாது” (பக்.349) என்று நிதானமாகக் கூறு கூறாக வார்த்தைகள்வழி பாதிரியை அலசிக் காயப்போடுவதுபோல அனைத்துப் பாத்திரங்களும் அலசிவிட முடிவதன் மதிநுட்பப் பேரூழியில் சிக்கிக்கொண்டு இண்டெலெக்சுவல் ஆற்றோட்டத்தில் பரிதவித்து மூச்சுத்திணறி நுட்பச்சிலாகிப்புச் சுழலில் உழல்வதும் சற்றுக் கஷ்டமான அனுபவம்தான்.
புத்தகத்தின் மைய இழையான காட்டின் வடிவத்தின் சித்திரிப்பில் உள்ள ஆற்றொழுக்கைக் கூறுபோடுவதும் வழக்கம்போலத் தன்னழகைத் தானே சிலாகித்துக்கொள்ளும் சில வார்த்தைகளே. ப்ரையன் லாரா தனது முன்னே அடியெடுத்துப் போட்ட கட்டையின் அழகைச் சிலாகித்துக்கொண்டே காலை க்ரீஸுக்கு வெளியே இழுக்கையில் இங்கிலாந்து விக்கெட்கீப்பர் ஸ்டூவர்ட் பொறுத்திருந்து பட்டென்று பெயில்ஸைத் தட்டிவிட்டு லாராவுக்கு ஆப்பறைந்த மாதிரி (அபத்த ஆட்ட கிரிக்கெட் ரசிகர்கள் அறிவர் இது என்ன என்பதை). தனிப்பட்ட வாசக அனுபவத்தில், எனக்குத் தெரிந்து ருஷ்டீயின் The Moor’s last sigh புத்தகத்தில் interregnum என்னும் வார்த்தை மூன்று முறைகள் மட்டும் வரும் (நினைவிலிருந்து கூறுகிறேன்). இரண்டாவது தடவை அவ்வார்த்தை வரும்போதே, அவ்வார்த்தை முதல்முறை தந்த அந்நியத்தனத்தின் புதிரின் புதுப்பரிச்சயத்தின் அளவுகடந்த ஆனந்தம், வெகு ஏமாற்றத்துடன் அடிபட்டுப் போவதுபோலிருந்தது. இங்கே காட்டின் அழகை ‘மிளா’ ‘அயனி மரம்’ ‘காந்தாரி மிளகு’ ‘கீறக்காதன்’ ‘கேறி’ (ஏறி என்பதன் மலையாள மரூஉ) என்னும் வார்த்தைகள் காலதேசவர்த்தமானமின்றி மூக்கில், காதில், தொப்புளில், புருவத்தில் இன்னபிற இடங்களில் என்று ஒரே நேரத்தில் அடிக்கப்பட்ட வெள்ளி வளையங்களோடு குலுங்க நடந்துவரும் செயற்கையான அதிநவப் பிரக்ருதி போல, காட்டினோரங்களிலிருந்து ஊடுருவும் வாகனக் கரும்புகை போல ஊடுருவி, காட்டின் சித்திரத்தை நிலைநிறுத்த உதவும் முளைகள் என்றதையும் தாண்டி, இந்த வார்த்தைப்பெருக்கம் என்ற சின்ன விஷயம், காட்டின் உருவத்தைக் கலைத்துப்போடுவதைத் தவிர்ப்பது அவ்வளவாக ஒன்றும் சிரமமாயிருந்திராதென்றே நினைக்கிறேன். யானைச் சாணி காய்ந்து சிற்றோடைகளில் மிதப்பதும், குச்சியால் கிரி கிளறி அவற்றுள்ளிருந்து எறும்புகள் ஆற்றோட்டத்தின் எதிர்த்திசையில் போவதுமென, “எருமைக் கண்ணுக்கு ஸ்த்ரீ லட்சணம் உண்டு கேட்டுதா” (பக்.115), ஓரினச்சேர்க்கையாளர்கள் ராபி-ஆபேலைப்பற்றிக் கூறுகையில் அவர்களது நடை ஒரு கத்தரிக்கோல் நடந்து செல்வதுபோலிருந்தது (பக்.257) என்று, காட்டின் திசையின்மையைக் காட்டிலிடப்படும் சாலைகள் சிதறடிப்பது (பக்.294) என்று சில நுட்பமான பார்வைகள். யானையொன்று காலைத்தூக்கி மிதிக்கும்போது கீழிருந்து பார்ப்பதுபோன்பதை விவரிக்கும் ஒரு சங்கப்பாடல்வரி, ஆஹா அழகாக ஒரு படிமம் விரியப்போகிறதென்று ஆர்வமூட்டிக்கொண்டு தயாராகும் அதே நேரம், அவ்வரியின் அழகைப்பற்றி வசனங்களில் சிலாகித்துக்கொள்ளவும் போதாக்குறைக்கு உரக்கப் பிரசங்கிக்கவும் தொடங்கிவிடுகிறார்கள் இஞ்சினியர் அய்யரும் கிரியும். பட்டென்று அக்கணத்தை ஒரு புகைப்படமெடுத்து ஆல்பமொன்றுக்குள் சொருகிவைத்தாற்போலிருந்தது. புத்தகத்தில் மிச்சமிருக்கும் சங்கப்பாடல்களும் தாம் எங்கிருந்து வந்தோமென்பதையும், என்ன contextல் எழுந்தோமென்பதையும் எப்படி இங்கே பொருந்துகிறோமென்பதையும் விலாவாரியாக நிதானமாக விளக்குவதை ஒரு தேர்ந்த தணிக்கையாளர் இன்னும் நன்றாகச் செதுக்கியிருக்கலாம். காட்டைப்பற்றிக் கூற ஆரம்பித்தபின் என்ன இண்ணும் காணோமிண்ணு பாத்தால் சற்றுக் காலம் கழித்து, எதிர்பார்த்தது கேறி வந்தே விடுகிறது: “காட்டைப்பற்றி யாரும் மலையாளத்தில் எழுதியதில்லை. ‘மார்த்தாண்ட வர்மா’ விலும் ‘தர்மராஜா’விலும் சி.வி.ராமன் பிள்ளை காடுகளைப்பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் சி.வி.ராமன்பிள்ளையின் நாவல்களே சொற்களின் காடு. முட்களையும் புதர்களையும் பிரித்துப் பிரித்து உள்ளே போகவேண்டும்.” (பக்.97)
. அவனாஷி (வாசகா, நீதான் அது), நோட் த போயிண்ட்.
குறிப்பிட நினைத்த இன்னொரு விஷயம் அன்ன போல உவம உருபுகளின்றிப் படிமங்கள்வழி மன எழுச்சியை உணர்த்த இயலாமல் பரிதாபகரமாகப் பாதியுடன் அறுந்து தொங்கும் வாக்கியங்களை. இதுபோன்ற கதைகளில் எழுத்தாளன் பாத்திரங்களின் தலைக்குள் நுழையவேண்டிய தருணங்களில் இதுவே முக்கியமான ஒன்றென்பது என் அபிப்ராயம் - பாத்திரங்களின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்படும் தருணத்தில் அல்ல. “நான் அன்று உணர்ந்தது என்ன? சொல்லின்மையில் நிரம்பிய ஒரு பரவசம். சொற்களால் அதை அள்ளமுடியாது” (பக்.121) “இந்த அனுபவத்தின் சந்நிதி முன் வரவே அவர்களால் முடியாது. வைரங்கள் புதைந்த மண்போல அவ்வனுபவங்களை அடக்கியபடி காவியங்கள் மௌனமாகக் கிடக்கின்றன.” (பக்.122), “நான் அவளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட உந்துதல் கொண்டேன். அந்த கருப்புப் பெண்ணை,,, ஆனால் என்ன சொல்ல? ஒரு மலைப்பெண்ணின் மார்புகளைப் பார்த்தேன். அவ்வளவுதான். அதை எப்படிச் சொல்வது,,,” (பக். 132), “விரல்கள் நன்றாகப் பதிந்திருந்தன. அந்தத் தடமருகே நின்றபோது தாங்கமுடியாத மன எழுச்சியில் நான் மயங்கிச் சரிந்து விழுவேன் என்று பட்டது” (பக்.165) என்றும், “திடீரென்று உருவான மன எழுச்சியால் என் உடல் வியர்த்துவிட்டது. வெகுநேரம் படபடவென்று இருந்தது” (பக்.409) என்றும், இதே ரீதியிலும் புத்தகம் முழுதும் விரவிக்கிடப்பது. “மன எழுச்சி” என்பது ஒரு சொற்றொடர். “அதைப் பார்த்ததும் எனக்கு என்னவோ போல் இருந்தது, மனசே நிலைகொள்ளவில்லை, பெரும் புளகாங்கிதம் அடைந்தேன், ஒரே இஷ்ஷா இருக்கு” போன்ற விகடன் குமுத escapist அரைவேக்காட்டுச் சொற்றொடர்களைத் தவிர்த்துதான், தவிர்க்கவேண்டிதான் இப்புத்தகங்களைப் படிப்பது. இங்கும் “மன எழுச்சி” என்பதோடு ஒரு பாத்திரத்தின் அனுபவம் அறுந்து தொங்குவது மிகவும் ஏமாற்றமளிக்கக்கூடிய ஒன்று. எங்கே எழுத்தாளன் நுழையவேண்டும் எங்கே நுழையக்கூடாது என்பதைத் தீர்மானிக்க வாசகனால் இயலாது, ஆனால் அப்படியொன்றை உருவாக்கிக்கொண்டு அதன்வழி தன் வாசக அனுபவத்தை அனுமானிப்பது தவறும் இல்லை, அப்படியொன்றின்றி வாக்கியங்கள் அறுந்து வீழ்வதை விமர்சித்து வசைபாடுவது தவறும் இல்லை, சொல்வது கிரிதான் - அவனால் அவ்வளவுதான் முடியும் என்பது பதிலும் இல்லை. அப்படிப் பார்க்கையில் இப்புத்தகத்தினுள் அறுந்து தொங்கும் வாக்கியங்களனைத்தையும் மாலையாகக் கட்டினால் பப்பனாவனுக்கு மூன்று வேளையும் ஆளுயர மாலை போடலாம். JJ’s theory of upheaval ஐத் தாண்டி வெளியே வர தாழ்மையுடன் விரும்பத்தான் முடியும். இத்தனை காலமாக ஜேஜே மூன்றடியால் உலகளந்த வாமனாவதாரம் மாதிரி மகாபலிச் சக்கரவர்த்திகளின் தலையில் தன் மனோஎழுச்சி யந்திரத்தால் இவ்வளவு அழுத்தமாக மிதித்து நசுக்கித் தேய்த்திருக்கிறானென்று நினைக்கையிலேயே மூச்சு முட்டுகிறது! காட்டினுள் அலையும் கிரியின் பாலுணர்வுகளும் வேட்கையும் காதலும் விரியாமல் அறுந்து தொங்குவதும், ஒரு அசௌகரியமான வேட்கையாக (அப்படிக் குறிக்க புத்தகம் முயன்றிருப்பதையும் தாண்டி - அது ஒரு சாக்கு அல்ல) மட்டும் முடிந்துபோவதும் கிட்டத்தட்ட இதே கதியில்தான் என்று நினைக்கிறேன். “குட்டப்பனின் நிர்வாணமான பின்பக்கத்தையும் அவன் தோளுக்குக் கீழே சினேகம்மையின் முகத்தையும் பார்த்தேன். வெளியே வந்துவிட்டேன்” (பக்.414) என்பது எந்தவொரு வகையிலும், “மன எழுச்சி ஏற்படுத்த இயலாத” சுஜாதாவின் பிரபலமான “அவள் ஒரு செயின் மட்டும் அணிந்திருந்தாள்” “அவள் ஒரு நெக்லஸ் மட்டும் அணிந்திருந்தாள்” ஸ்டைல் விவரிப்புக்களையோ, “சாக்ஸ் மட்டும் அணிந்திருந்து,,,” என்னும் மார்க்வெஸ்ஸின் மெர்சிடிஸுடனான, இன்னபிறருடனான சல்லாபங்கள் குறித்த அசட்டுப் பத்திரிகையியல் ரீதியான விவரணைகளையோ, நாயகன் படத்தில் “நீ ஒரு காதல் சங்கீதம்” பாட்டில் மணிரத்னம் காட்டும் கமல்ஹாசனின் வியர்த்த முதுகு, பொட்டு கலைந்து தோளுக்கு வெளியாகத் தெரியும் சரண்யாவின் தலையையோ தாண்டியதாகக்கூடத் தெரியவில்லை. ஏன் வேறெந்த மாதிரியும் கூறவில்லை என்று அபத்தமாகக் கேட்பதற்கல்ல இது - பொருத்தப்பட்ட இடத்தைப்பொறுத்து வாக்கியங்கள் முக்கியத்துவம் பெறுவதென்பது சில இடங்களில் வெற்று மாயையே, வீறிட்டு எழக்கூடிய சில வாக்கியங்களை எப்படி வெகு தட்டையாகவும் சொல்லமுடியும், fillers என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படுபவை எப்படியிருக்குமென்று சுருக்கமாக உணர்த்திக்காட்டவுமே.
“குப்புறத் தொங்கும் பெருச்சாளிபோல அவரது குறி” (பக்.134) என்று வர்ணிப்பதும், “நான் திரும்பிப் பார்த்தபோது சண்முகம் பிள்ளையின் கால் நடுவே பெரிய பொட்டலம் தொங்குவதைப் பார்த்தேன். சிரித்த படி குனிந்துகொண்டேன்” (பக்.388) என்பதும், துள்ளிச் செல்லும் சிறுத்தை பாய்ந்து செல்லும்போதுகூட அதைப்பற்றிய ஒரேயொரு விவரிப்பாக “ஒரு கணம் சிறுத்தையின் அடி வயிறும் விதைகளும் வெளிர் நிறமாகத் தெரிந்தன” (பக்.390) என்பதும், பலா மரத்தைப் பார்க்கும்போதுகூட “பெரிய பன்றியின் முலைகள்போல அதன் உடம் பெங்கும் காய்களும் கனிகளுமாக பலா” (பக்.159) என்பதும் சங்கப் பாடல்களில் காட்டின் அழகில் மனதைப் பறிகொடுக்கும் கிரிக்கு எப்படிச் சாத்தியம் என்ற தூய்மைவாதக் கேள்வியெழுப்புவதில் அர்த்தமில்லை எனினும், இந்த அழகியல் அனுபவத்தின் நிஜத்தன்மையைச் சீர்தூக்கிப் பார்க்க உதவும் முக்கியமான அளவுகோல் இப்படியான, இன்னபிற இப்படியான வாக்கியங்கள். ஒரு cesspool மனோபாவத்துடன் குறிப்பிடப்படுபவை இவை மட்டுமல்ல. கிரியும் இன்னபிறரும் கொள்ளும் பார்வைகளும் ஓரளவு ஒத்ததாகவே இருக்கின்றன. காட்டின் நடுவில் வெள்ளையான பெண்கள் பல்லி போலிருப்பர் என்று கிரி புத்தகத்தின் தொடக்கத்திலெங்கொ குறிப்பிடுவது அப்போது உறுத்தவில்லை எனினும், தொடர்ந்து “கரிய சருமம் கொண்டவர்களிடம் மட்டுமே பற்களுக்கு இந்த வெண்மை உள்ளது. வெண்சருமம் பற்களுக்கு பழுப்பு நிறத்தை அளிக்கிறதா என்ன” (பக்.373), “வெள்ளைக்காரனுங்க மோட்டார் மெக்கானிசம், கந்தகத்தில மக்னீஷியத்தைக் கலக்கிறது, இமயமலை மோல தலைகீழா ஏறறது இதுக்கெல்லாம்தான் சரி. அவன் தத்துவமெல்லாம் வெத்து மூளை விளையாட்டு. தருக்கம்னா அதருக்கத்தைப் போய்த் தொடணும். அப்பதான் அதுக்கு மதிப்பு. அது அவனுக்குத் தெரியறதில்லை. எதுக்குச் சொல்றேன்னா,,,” (பக்.279) என்ற “ஓவியங்கள் குப்பை” (பக்.281) என்னும் அய்யரின் பிலாக்கணமாகட்டும், “அவனுக்க பாஷை அப்படியாக்கும். கெளங்கு முழுங்கின நரி விக்கினதுமாதிரி ஒரு பாஷை” (பக்.338) என்பதாகட்டும், “மூத்தவன் தாணுலிங்கம் இப்பம் பத்தாம் கிளாஸ் படிக்குதான். பயங்கரப் படிப்பாக்கும். இங்கிலீஷில பேசினா பன யோலையிலெ நாய் மூத்திரம் போறதுமாதிரிப் பேசுவான்,,,” (பக்.458) என்னும் நாடாராகட்டும் - ஒரேமாதிரிக் கருத்தாக்கங்கள் அனைத்துப் பாத்திரங்களிலின் வாயிலிருந்தும் வெளிப்படும் நிகரற்ற ஒத்திசைவில் கிரியின் கதை விரிவது எங்கோ உதைக்கிறது.
காடு நல்லது நகரம் கெட்டது, கறுப்பை அழுத்து வெள்ளையைத் தூக்கு, ஆங்கிலம் நச்சு ஏமான்களின் பேச்சு அமிர்தம் என்ற ரீதியில் கருத்துக்களும் காடாக விரிகின்றன, “என்னடாவன் ஏசு சிலுவையில வவ்வால் தொங்கற மாதிரி” என்ற குட்டப்பராசப்பவழிப் பிரச்சாரங்கள் வழியாகவும்.
நிரப்பிகளை (Fillers) எடுத்துவிட்டு, ஒரு குறுநாவலாக எழுதியிருந்தால் ஓரளவு டார்த்தீனியம், லங்கா தகனம் மாதிரி இன்னும் மேம்பட்டிருக்குமென்று நினைக்கிறேன். அதற்குமொரு விளக்கமாக புத்தகத்திலேயே, “காட்டில நாம போறதுதான் முக்கியம். போற இடமும் காடுதான். போய்ச் சேர்ற இடமும் காடுதான்” என்றொரு விளக்கத்தையும், மேலும் பிறிதொரு தறுணத்தில் “காட்டைப் பாக்கணும்னா வாயை மூடணும்பாங்க. நானும் மூடிமூடிப் பார்ப்பேன். ரெண்டு நாள் தாக்குப்பிடிக்கமுடியாது. ஐ டாக், தெயர்ஃபோர் ஐ யம்.” (பக்.276) என்றும் சொற்பிரவாகத்துக்கு ரெனே தெகார்த்தே வழியாகவும், ஆங்கில Casper குழந்தைப்படம் வழியாகவும் (I stink, therefore I am)
விளக்கத்தையும் கிரிதரனுக்கும் மலைக்குளிருக்கு தத்துவ சூப் போட்டு வாசகர்கள் நமக்கும் அளித்துவிடுகிறார் இஞ்சினியர் அய்யர். இஷ்டமில்லா உறவுடன் புத்தகத்தில் கிரிதரனின் கதை சோகமாக முடிவதுபோலத்தான்!!
Share This
-->