உலகிற்குத் தமிழகம் தந்த கொடையாம் திருவாளர் வெங்கட் சாமிநாதன் திருவாய் மலர்ந்தருளியது • 04.21.08
//உலகிற்கு தமிழ் நாடு தந்தது என்ன? தனது என்று கர்வம் கொள்வது என்ன? தமிழ் நாட்டின் தகவல் தொழில் நுட்ப பொறியாளர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று தம் இருப்பை ஸ்தாபித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமல்ல டாக்டர்கள் உண்டு. மற்ற பல்வேறு துறையினரும் உண்டு. அவர்கள் வேலை தேடிச்சென்றவர்கள். அல்லது வேலை தேடிப் பிழைக்க விரட்டப்பட்டவர்கள். இருப்பினும் அவர்கள் அவ்வத் துறை வல்லுனர்களாக தமக்குப் பெருமை தேடிக்கொண்டவர்கள். நிறையப் படித்தவர்கள். அவர்களுக்குக் கிடைப்பது சன் டிவி. சன் டிவி தான் கிடைக்கிறது என்பதனால் அதைச் சொன்னேன் ஆனால் தமிழ் தொலைக்காட்சிகள் எல்லாமே ஒரே பாமர ரகம் தான். அதை சகித்துக்கொள்ள ஒரு உணர்வு மரத்த நிலை இருந்தால் தான் சாத்தியம். அதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களில் பலரை தமிழ் மணம் போன்ற வலைப் பதிவு திரட்டிகளில் இணையங்களில், அவரவர் தனித்த வலைப் பதிவுகளில், அவர்களது பின்னூட்டங்களில், பார்க்கலாம். இவ்வளவு படித்தவர்கள் எப்படி இப்படி ஒரு மூர்க்கத்தனமாக, பாஸிஸ மனத்தினராக இருக்கிறார்கள், அயல் மண்ணிலும், தம் சொந்த மண்ணின் துவேஷங்களை, அழுக்குகளை அங்கும் ஏன் சுமந்து செல்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கும். டை கட்டிய, டாலரும் யூரோவும் சம்பாதிக்கும் மூர்க்க மனங்கள், பாமரர்கள். சற்றுக் கூட நுண்ணிய உணர்வு என்பதே அறியாதவர்கள். இவர்கள் ஒரு அபூர்வ கலைவை. B.Tech. M.Tech பட்டம், டாலர்/யூரோ சம்பாத்தியம், பென்ஸ் கார், ஆனால் நம்மூர் பேட்டை ரவுடி பேச்சும் எழுத்தும், கே. வீரமணி சிந்தனைகள், ரஜனி கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசனை, இவை எல்லாம் ஒரே இடத்தில் சங்கமிக்கும் ஒரு அபூர்வ கலவை.! எப்படி சாத்தியம் ஆயிற்று? நான் 1960-ல் சொன்ன வார்த்தைகளை நினைவுப் படுத்திக் கொள்ளலாம். செல்வமும் கல்வியும் பொருள் வளம் தான் தரும். கலை உணர்வை, சிந்தனை வளத்தைத் தந்து விடாது மனித உன்னதத்தைத் தந்து விடாது.//
என்ன சொல்றது. ஏது செய்யறது. வாயடைச்சுப்போயிருக்கேனாக்கும்!
இதெல்லாம் அப்படியே வர்ரதுதான்ல!
Jokes apart. இந்தப் பந்தியில் மட்டுமல்ல, இந்தக் கட்டுரை முழுவதுமே கொப்பளிக்கும் வன்மம் ஆச்சரியமாகத்தானிருக்கிறது. இந்தளவு தொட்டாஞ்சிணுங்கியாகவா இருப்பார்கள்? இணையம் சுதந்திரமானதுதானென்றாலும், வலைப்பதிவுகள் வரமுதல் தமிழில் எந்தளவு சுதந்திரம் இருந்ததென்பதைப் பலர் அறிவார்கள். வலைப்பதிவுகள் என்ற சுதந்திர ஊடகத்தில் பல கருத்துகள் ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் அவனது அனுபவங்களினூடாக வெளிப்படுத்தப்படுகிறது. அப்படிப் பேசப்படும் விதயங்கள் பெரும்பாலான வாசகர்களிடம் நல்லதொரு அதிர்வை உருவாக்குகிறது. அதையெல்லாம் புறங்கையால் ஒதுக்கித் தள்ளுவதோடு மட்டுமில்லாமல், இந்த நல்ல விதயங்களையும் ஒதுக்கி விட்டு, மூர்க்க மனங்கள், பாமரர்கள என்றெல்லாம் சொல்லும் இவரையும் இவரைப்போன்றவர்களையும் உலகிற்குத் தமிழகம், தமிழ்த்தாய் அளித்த கொடையென்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தெம்மாங்கு பாடுவோம் மக்களே.




