Archive for the ‘நினைவலைகள்’

‘உதிரிப்பூக்கள்’ கடைசிக்காட்சியைப்பற்றி மரத்தடிக்காரர் எஸ்.பாபு05.07.08

தமிழ் இணையத்தினூடாக நான் பெற்றது நிறைய. அதில் முதலாமிடம் மரத்தடி. மரத்தடி குழுமத்தில் பல சுவாரசியமான நபர்களைச் சந்தித்திருக்கிறேன். அங்கேதான் எனக்குப் பலப்பல விதயங்கள் அறிமுகமாயின. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழ்க்கவிதைகள். எனக்குப்பிடித்த பெரும்பாலான கவிதைகளை, கவிஞர்களை ‘தமிழில் நவீன கவிதைகள்’ என்ற தொடரின்மூலம் எஸ்.பாபு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது கனடாவிலிருந்த அவர், இந்தியா திரும்பவிருப்பதாக மடலொன்றில் தெரிவித்திருந்தார். அதற்குப்பிறகு சில வருடங்களாக அவரைக்க்காணவேயில்லை. பழைய நினைவிருப்பவர்கள் எங்கேயாவது சந்தித்தால், இவரைப்பற்றியும் இவருடைய தொடரைப்பற்றியும் பேசுவதுண்டு. இன்றைக்கு, வழமைபோல பிரகாஷின் வலைப்பதிவில் அவர் கொடுத்திருக்கும் சுட்டிகளினூடாக சிலரைப் படிக்கப்போனேன். சுட்டிகள் இருக்குமிடத்திற்கு அனிச்சையாகப் போய்க்கொண்டிருந்தபோது எஸ்.பாபு என்ற பெயர் தெரிந்தாற்போல இருந்தது. பார்த்தால் பாபுதான். 2005இல் பிரகாஷ் ‘உதிரிப்பூக்கள் பற்றி எழுதியிருந்தற்கு நீண்ட பின்னூட்டம் எழுதியிருந்தார். பிரகாஷிடம் அனுமதியெல்லாம் வாங்காமலேயே அந்தப் பின்னூட்டத்தைத் திருடிக்கொண்டு வந்துவிட்டேன். :)

பாபு சொல்லியிருப்பதைப்போல உதிரிப்பூக்களை ஒவ்வொரு காட்சியாக வருணிப்பாரென்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

எஸ்.பாபு எழுதியது
:

எல்லொருக்கும் அன்புடன்,
நான் எண்ணும் பொழுது…பாடல் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் தான். மரத்தடி.காம் இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அழியாத கோலங்கள் திரைப்பட விமர்சனம் எழுதியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு கடிதம் எழுதவும். உதிரிப்பூக்கள் பற்றிய இந்தப் பதிவு மேலோட்டமானது தான். கடைசி காட்சியில் ஊர் மக்கள் “குதித்துச் செத்துப் போ” என்றெல்லாம் மிரட்டுவதாக குறிப்பிட்டிருப்பது தவறு. கடைசி காட்சிகளில் விஜயன் பேசுகிற வசனத்தைத் தவிர வேறு வசனமே கிடையாது. செண்பகம் மானபங்கம் (கற்பழிப்பு அல்ல என்பதுதான் மற்ற படங்களிடமிருந்து இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துகிறது)செய்யப்பட்ட செய்தி ஊர் சனங்களிடம் பரவுவது இளையராஜாவின் பிண்ணனி இசையில் சொல்லப்பட்டு விடுகிறது. பிறகு ஊர் திரண்டு விஜயனை வீட்டில் மடக்கிப் பிடிக்கிற காட்சி. அப்போதும் வசனம் கிடையாது. பிறகு திடீரென வெறிச்சோடிப் போன ஆள் அரவமில்லாத தெருக்கள் காட்சிப்படுத்தப் படுகிறது. அப்போது பிண்ணனி இசைகூட இல்லை. இதன் தொடர்ச்சியாக மேள தாளம் முழங்குவது போல் பிண்ணனி இசையில் விஜயன் முன்னே நடக்க ஊர் பின் தொடர்கிறது. ஆற்றுக்கு அருகில் மேட்டுப் பகுதிக்கு வந்தவுடன் இசை நிற்கிறது. விஜயன் ஆற்றைப் பார்க்கிறார். திரும்பி ஊர் சனத்தைப் பார்க்கிறார். அதில் ஒருவர், கீழே இறங்கச் சொல்லும் விதமாக “ம்ம்..” என்று மட்டும் சொல்கிறார். அப்போதுதான் விஜயனை ஊர் மக்கள் மிரட்டி ஆற்றில் இறங்க வைக்க அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதும் அந்த வினோதமான மரண தண்டனை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களுக்கு (நமக்கு) தெரியவருகிறது. ஊர் சனங்களிடம் இரண்டு வரி பேசிவிட்டு, அவர்களிடம் அனுமதி பெற்று, பிள்ளைகளிடம் இரண்டுவரி பேசி விட்டு ஆற்றில் இறங்குகிறார் (விஜயனுக்கு நீச்சல் தெரியாது என்பது படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றிலேயே சொல்லப்பட்டு விடுகிறது என்பதும் அவருக்கு நீச்சல் தெரியாது என்ற காரணத்துக்காகத்தான் ஊர் சனங்கள் இந்த தண்டனையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களின் புரிதலுக்கு விட்டுவிடுகிறார் மகேந்திரன் என்பதை நுட்பமாக இங்கே கவனிக்க வேண்டும்). விஜயன் ஆற்றில் இறங்கத் தொடங்கியதும் காமிரா ஊர் சனங்களை நோக்கித் திரும்புகிறது. இப்போது மற்றொரு நுட்பமான காட்சியமைப்பு -பள்ளிக்கூட வாத்தியார்கள் மட்டும் (கல்வி அறிவு உள்ளவர்கள்)சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விஜயன் ஆற்றில் இறங்குவதை தடுக்க முன்னேறுகிறார்கள். அவர்களை மற்றவர்கள் வலுக்கட்டாயமாக தடுக்கிறார்கள். வசனமே கிடையாது. மரண தண்டனைக்கு எதிரான தனது அபிப்பிராயத்தை அந்தக் காலத்திலேயே அமைதியாக முன்வைத்திருக்கிறார் மகேந்திரன். சில நொடிகளில் காமிரா மீண்டும் ஆற்றைக் காட்டுகிறது. விஜயன் இறங்கிய தடம் தெரியாமல் ஆறு சலசலத்து ஓடுகிறது. காமிரா டாப் ஆங்கிளில் மேலே ஏறும் போது, விஜயனின் பிள்ளைகள் மட்டும் (அஞ்சு, காஜா செரீப்) கைகோர்த்துக் கொண்டு அப்பா குளிக்கச் சென்ற ஆற்றைப் பார்த்தபடி ஆற்றங்கரையோரமாக மெல்ல ஓடுகிறார்கள். காட்சி உறைகிறது. உதிரிப்பூக்கள் என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன. படம் நிறைவடைகிறது. கடைசிக் காட்சிகளைப் பற்றி மட்டும் சொல்ல இவ்வளவு இருக்கிறது சாமி…சாதாரணமாக விமர்சனத்தை முடித்து விட்டீர்கள். நேரம் கிடைக்கும்போது முழுப்படத்தைப் பற்றியும் நுணுக்கமாய் ரசித்தவற்றை எழுதுகிறேன்.
ஆனந்த விகடன் பத்திரிக்கை, பட விமர்சனங்களுக்கு மார்க் போடத் துவங்கியதிலிருந்து இதுவரை அதிக மதிப்பெண் பெற்ற படம் உதிரிப்பூக்கள் தான் (64 மார்க்) என்பது கூடுதல் செய்தி.
அன்புடன்
எஸ். பாபு

மரத்தடியில் எஸ்.பாபு எழுதியவை

பிரகாஷின் வலைப்பதிவில் நானிட்ட பின்னூட்டம்.

//எஸ்.பாபு,

நலமா? உங்களைத் தேடிக்கொண்டிருந்தோம்/கொண்டிருக்கிறோம். தெரியுமா? நீங்கள் வலைப்பதிவு வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் உடனே ஒன்றைத் தொடங்குங்களேன்.

முன்பு ராயர் காப்பிக்கிளப்பில் சோலாறிசை ஒவ்வொரு காட்சியாகத் தொடராக எழுதியிருந்தார்கள். அதுபோல உதிரிப்பூக்களைப்பற்றி எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன். கடைசிக்காட்சியை நீங்கள் விவரித்தவிதமே அருமையாகவிருக்கிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு சிறுவயதில் பார்த்ததை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது உங்களுடைய விவரிப்பு.

உங்களை மறுபடியும் இணையத்தில் பார்த்ததில் சந்தோஷம். :)

–மதி//

Posted in Miscellaneous, அனைத்து இடுகைகள், ஈழத்து இலக்கியம், தமிழ் இணையம், நினைவலைகள், படித்தவை_பிடித்தவை, மரத்தடிwith 3 Comments →

என்னுடைய அம்மம்மா அன்னமுத்து சொர்ணலிங்கம் (1914-2007)08.24.07

amm1.jpg

amm2.jpg

ammamma.jpg

அன்னமுத்து சொர்ணலிங்கம் (1914-2007)

அம்மம்மா! சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். ஒல்லியான உடல்வாகு. கம்பீரமான தோற்றம். கட்டியிருக்கும் பருத்தி சேலையை விட மிருதுவான தோல். பளபளக்கும் கண்கள். மேலுதட்டில் கொஞ்சம் வித்தியாசமாக கறுப்பு முடிச்சுப்போன்ற மரு. என்ன அவசர வேலையிலிருந்தாலும் ஏதேனும் கேள்வி கேட்டால் பொறுமையாகப் பதில் சொல்லும் பாங்கு. அண்டை அயலவர் ஊரார்களை நின்று நிதானித்து ஒரு சொல்லாவது பேச வைக்கும் கம்பீரமும் கனிவும் நிறைந்த முகம். இவைதான் அம்மம்மாவை நினைத்தால் எனக்கு இப்போதும் எப்போதும் மனதில் நிற்கும் சித்திரம்.

என்னுடைய ஆதர்ச பெண்களில் என்னுடைய அம்மம்மாவுக்கே முதலிடம். நாற்பது வயதுச் சொச்சத்திலேயே கணவரை இழந்துவிட்டாலும் தனியாளாக நின்று குடும்பத்தை வளர்த்தெடுத்தவர். புங்குடுதீவு-நடுவுத்துருத்தியில் பிறந்தவர், அம்மப்பா இறந்தபிறகு இறுபிட்டியில் 1950களில் தனியாளாக வீடு கட்டிக் குடிபுகுந்தார். வீட்டின் அமைப்பு, முக்கியமாக ஜன்னல்கள் கொஞ்சம் அடைசலாக இருப்பதைச் சொன்னபோது, வீடு கட்டியவர்கள் புதிய ஆட்கள் என்று சொல்லிப் பிறகு, அவர்களுக்கு மதிய உணவு நடுவுத்துருத்தியில் இருந்து தலையில் கடகத்தில் வைத்துச் சுமந்து வந்த கதையைச் சொன்னார். வீட்டிற்கு சொர்ணவாசா என்று அம்மப்பாவின் பெயரை வைத்திருந்தாலும் எனக்கென்னமோ அது இன்னமும் அம்மம்மாவின் வீடுதான்!

என்னுடைய சிறுபிராயத்து நினைவுகளிலெல்லாம் அம்மம்மாவுக்கு முக்கிய இடமிருக்கிறது. கொழும்பில் வசித்தபோது யாழ்ப்பாணத்துக்கு போறதுக்கு டிரெயின் ஏறிட்டா பயங்கரக் கொண்டாட்டம் எங்களுக்கு. இரவு நித்திரை கொண்டு எழும்பேக்க டிரெயின் வடக்க வந்திருக்கும். டிரெயினில இருந்து இறங்கிப் பிறகு காரில ஏறித்தான் வீட்டுக்கு, புங்குடுதீவுக்குப் போகோணும் எண்டு தெரியும். ஆனாலும் வழி நெடுக வாற வீட்டு வேலிகளையும் படலைகளை பார்த்துப்பார்த்து அதில எங்கட வீட்டுப் வேலியையும் படலையையும் ஒத்ததா எதையாவது கண்டிட்டா வீடு வந்திற்றுது எண்டு மனது சந்தோசப்படும். சில நேரங்களில வெளியில சொல்லித் திட்டு வாங்கிறதும் உண்டு. பிறகு உண்மையாவே யாழ்ப்பாணத்தில இறங்கி வண்டியில் புங்குடுதீவுக்குப் போய் இறங்கி, படலையைத் திறந்தண்டு உள்ள ஓடிப்போய் ‘அம்மம்மோய்!’ எண்டு கூச்சலிட்டண்டு ஓடிப்போய் கட்டிப்பிடிக்கிறது இப்பவும் நினைவில் நிற்கும் விசயம்.

எங்கட வீட்டு மாட்டுக்கெல்லாம் ‘அ’ என்று சூடு போட்டிருக்கும். சின்ன வயசில அரவிந்தனுக்கு அது தன்ர மாடு எண்டு சந்தோசம். தன்ர மாடுதானே எண்டு அவர் அம்மம்மாட்டக் கேக்கேக்க, ஓம் எண்டு சொல்லிருவா. எனக்குக் கோவம் கோவமா வந்தாலும் வேற கதைகள் சொல்லி கவனத்தை மாத்தி விட்டிருவா.

விடிய வெள்ளன முழிப்பு வந்திற்ற நான் முதல்ல போறது மாட்டுமால் பக்கந்தான். அப்பிடிப் போகாம படுக்கையிலயே கிடந்தண்டு உன்னிப்பாக்கவனிச்சா, அம்மம்மா கண்டுக்குட்டிய அவிட்டு விடுறதும். அது மாட்டிட்ட பால் குடிக்கிறது. கொஞ்ச நேரம் கழிச்சு கண்டுக்குட்டிய மாட்டுக்குப் பின்னால கட்டி விட்டுட்டு கையோட கொண்டு போன செம்பில இருந்த தண்ணி விட்டு அலம்பிட்டு பால் கறக்கத் தொடங்கிறதும் கேக்கும். சில நாட்களில கொஞ்சம் பிந்தி எழும்பிட்டா, சொய் சொய் எண்டு கறந்த பால் செம்பில விழுற சத்தம் கேக்கும். முந்தியே எழும்பி, மாட்டுமால் பக்கம் போனா படிக்கட்டிலயே இருந்து பாக்கச் சொல்லிச் சொல்லுவா.

கிடுகு பின்னச் சொல்லித்தந்தது. கொழும்பில இருந்து புங்குடுதீவுக்கு வந்து சேர்ந்தபோது முதன்முதலா பள்ளிக்கூடத்துக்குக் கூட்டியண்டு போனது. விக்கியைப் பள்ளிக்கூடத்தில விட்டுட்டு அம்மம்மா வாறதுக்குள்ள விக்கி வீட்டில நிக்கிறது. வீட்டுக்குப் பின்னால நிக்கிற மாமரத்தில ஏறி இருந்து புத்தகம் படிக்கிறது எனக்குப் பிடிச்ச பொழுதுபோக்குகளில ஒண்டு. மாம்பழ சீசனில, மத்தியான நேரத்தில அம்மம்மாவிட்ட முன்னுக்கும் பின்னுக்கும் அலைஞ்சு கெஞ்சிக் கேட்டா ஒரு தட்டில மிளகாய்த்தூளையும் உப்பையும் கலந்து கூடவே மாங்காயையும் வெட்டித் தருவா. அம்மாவுக்குத் தெரிஞ்சா பேசுவா எண்டு சொல்லிக்கொண்டே தந்தாலும், அடுத்த நாள் போய்க்கேக்கும்போதும் அப்படியே வெட்டித் தருவா அம்மம்மா.

கோயில் திருவிழா நேரம் கச்சானுக்குக் காசு தாறது. வேப்பம்பூ பூக்கிற காலத்தில கொக்கச்சத்தகத்தோட பூ புடுங்கிறது. நடுவுத்துருத்திக்கு குறுக்கு வழியால நடந்து போறது. போற வழியில கதைக்கிற கதைக்கெல்லாம் ஈடு கொடுத்துக் கதைச்சண்டு வாறது. இரவில அரிக்கன் லாம்போட போய் படலையைக் கட்டிட்டு வாறது எண்டு என்னுடைய ஊர் நினைவுகளெல்லாம் அம்மம்மாவைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தன. நினைவலைகள் என்று என்னுடைய வலைப்பதிவில் நான் எழுதியிருக்கும் இருபத்திச் சொச்சம் கட்டுரைகளிலும் அம்மம்மா ஏதாவது வடிவத்தில் இடம்பெற்றிருக்கிறார் என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன்.

நாங்கள் சென்னைக்குச் சென்று எனக்கு அங்கே நண்பர்கள் உருவாகியபோதும் அவர்களிடம் அம்மம்மாவைப் பற்றி அளந்துவிடுவதுண்டு. அது சிற்சில சமயங்களில் ‘எங்கப்பா சிற்றெறும்பின் தோல் வைச்சு ஆகாயத்தின் ஓட்டை அடைத்தவர்’ அளவுக்கு இருந்தாலும் என் நண்பர்களிடையேயும் அம்மம்மா பிரபலமாகியிருந்தார். அம்மம்மா கடல் வழியாக மண்டபத்துக்கு வந்து அங்கிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தபிறகு என்னுடைய நண்பர்கள் பலரும் வந்து அம்மம்மாவைப் பார்த்துப்போன அளவிற்கு அம்மம்மா பிரபலமாக இருந்தார்.

சென்னைக்கு வந்தவரிடம் அவருடைய சிறுவயது நினைவுகளைச் சொல்லச் சொல்லிக் கேட்டபோது அவர் சொன்னவற்றில் முக்கியமான விசயம். அம்மம்மா சின்ன வயதில் படு குழப்படி என்பது! அக்கா தங்கையுடன் மூவராகப் பிறந்த இந்தச் சகோதரிகளின் தாயார் சிறுவயதிலேயே இறந்துவிட்டாராம். தந்தையின் கவனிப்பில் வளர்ந்தவர்கள் வீட்டு வளவு முழுக்க அலைந்து திரிந்து விளையாடி வளர்ந்திருக்கிறார்கள். நடுப்பிள்ளையாக இருந்தாலும் பெரும்பாலான யோசனைகள் அம்மம்மாவிடமிருந்தே வந்திருக்கின்றன. அப்போது அவர்களின் உடை, ‘சிற்றாடை’ என்று சொல்லப்படும் உடையாக இருந்திருக்கிறது. சீர்காழி கோவிந்தராஜன் ‘சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடையுடுத்தி, சிவகங்கைக் குளத்தருகே ஸ்ர்துர்கை சிரித்திருப்பாள்’ என்ற பாடல் வரிதான் அம்மம்மா இதைச் சொல்லும்போது என் மனதில் ஓடியது. தான் சரியான குழப்படி என்று சொல்லிய அம்மம்மாவிடம் ஆச்சரியமாக, ‘குழப்படியா. எங்களுக்குத் தெரியாதே. என்ன குழப்படி செஞ்சிருக்கிறீங்க’ என்று நாங்கள் கேட்டபோது அம்மம்மா சிரித்தார். மாரி காலத்தில் கிணறுகளெல்லாம் நிரம்பிக் கிடக்கும்போது ஆட்டுக்குட்டியொன்றைப் பிடித்து வந்து வளவின் மூலையில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் நின்றபடி ஆட்டுக்குட்டியில் இரண்டு கால்களையும் பிடித்தபடி ஆட்டுக்குட்டியைத் தோய்த்தெடுப்பது தங்கள் வேலையென்றார். ஆட்டுக்குட்டியும் தன்பாட்டுக்கு கதறுமென்றும், அந்தச் சத்தம் கேட்டு இவர்களின் அப்பா வந்து பார்த்துவிட்டு தங்களையெல்லாம் அடிப்பதற்குத் துரத்துவாரென்றும். பிடிபடாமல் தாங்களெல்லோரும் ஓடித்தப்புவதாகவும் சொன்னபோது உண்மையாகவே அம்மம்மா குறும்பான ஆள்தான் என்று தோன்றியது.

ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கலின்போது பெரிய வாசலுக்கு முன்பு சிறிதாக கோலம் வரைந்து பானை வைத்து பொங்கல் வைப்போம். எல்லோரும் சுற்றி நின்று பொங்கலோ பொங்கல் என்று கூவி பொங்கி முடித்ததும் சுவாரசியமான அடுத்த கட்டம் தொடங்கும். பொங்கற் சாமான்களோடு வாங்கி வந்திருந்த வெடிகளை வெடிக்கும் வேளையே அது. சென்னையில் தீபாவளி சமயம் பலரும் கையில் வைத்து வெடிக்கும் ‘புஜிலி’ இரக வெடிகள்தான் அவை. ஆனாலும் பயங்கர ஆயத்தம் நடக்கும். தேங்காய் மட்டையில் கொஞ்ச நாரும் வைத்து திரி கிள்ளப்பட்ட வெடி பாங்காட வைக்கப்படும். நீண்ட குச்சியொன்று பொங்கல் அடுப்பில் வைக்கப்பட்டுத் தயாரா இருக்கும். அந்தக் குச்சியை தூஊஊஊர நின்று வெடியின் திரியில் முட்டுமாறு அம்மம்மா வைப்பா. குச்சி திரியில் பட்டுக்கூட இருக்காது. துள்ளியடித்தபடி தூர ஓடி விடுவா. நாங்களெல்லாம் மூச்! படியில் நின்றுதான் பார்க்க வேண்டும். பிறகு நினைத்து நினைத்துச் சிரிக்கும் விசயம் இது.

இன்னொரு அனுபவமும் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதலாம் தேதியன்று ஏதேனும் புதிய விசயங்களைப் புழுகி எல்லோரையும் நம்ம வைத்துவிடுவார். சமயத்தில் அன்றைக்கு ஏப்ரல் முதலாம் தேதி என்று நினைவு வந்தாலும் அவர் சொல்லும் விதமும் உடலசைவுகளும் நம்மை நம்ப வைத்துவிடும். ஒருமுறை அவர் ஓட்டமும் நடையுமாக வந்து, இவன் லலித் அத்துலத் முதலியை கொண்டுட்டாங்கள் என்று விரிவாக கதை சூடிச் சொன்னார். அதற்கு முந்தைய வருடமும் அம்மம்மாவால் ஏமாற்றப்பட்டிருந்தும் அம்மா, அன்ரி எல்லோரும் விழி அகல கேட்டுக்கொண்டார்கள். வீட்டிற்கு வருபவர்களிடமும் சொன்னார்கள். அம்மம்மா எதுவுமே சொல்லவில்லை. எல்லா விவாதங்களிலும் கலந்துகொண்டார். பொழுது சாயும் நேரத்தில்தான் தான் சொன்னது புழுகு என்று சொல்லி எல்லோரையும் முட்டாளாக்கினார்!

இதிலே இன்னொரு விசயமும் சொல்ல இருக்கு. அம்மம்மா பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி இருந்தாலும் பரந்த உலக அறிவு கொண்டவர். அரசியல் மிகவும் பிடித்த விசயம் இவருக்கு. சென்னையில் வீட்டுக்கு வரும் தினமணி இதழை முதற்பக்கத்தில் இருந்து கடைசிப்பக்கம் வரை ஒன்று விடாமல் வாசித்து, ஆள் கிடைத்தால் விவாதித்தபடி இருப்பார். தமிழக அரசியலையும் விட்டு வைக்கவில்லை அவர். அறுபதுகளில் ஒவ்வொரு ஊரிலிருந்து ஆட்கள் போய் நடத்திய போராட்டத்திலும் அம்மம்மா பங்குபற்றி இருக்கிறார் என்று அப்பா சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. விழிப்புணர்வும் போராட்ட குணமும் கொண்ட மனு்ஷியாக இருந்திருக்கிறார் இல்லையா!

தன்னுடைய உடமைகளை முதியோர் இல்லத்துக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறாராம் அம்மம்மா. விக்கி சொன்னாள். வித்தியாசமான ஆள் என்பதைக் கடைசிவரையிலும் நிரூபித்திருக்கிறார் அம்மம்மா.

எப்படிப்பட்ட மனு்ஷி இவர்!

Posted in அனைத்து இடுகைகள், கட்டுரைகள், நினைவலைகள்with Comments Off

JFI:Jaggery - பனங்கட்டி/பனைவெல்லம்/கருப்பட்டி12.01.06

பனை!


நன்றி:Flickr

இண்டைக்கும் எங்கயாவது பனைமரத்தைக் கண்டிட்டா சரியான சந்தோசம் வந்திரும். கூடவே, ஒரு பெருமூச்சும் வாறது வழமை. பனை எங்கட வாழ்க்கையோட எந்தளவு பின்னிப்பிணைஞ்சிருந்தது எண்டதை யாராவது ஈழத்துக்காறரிட்ட கதைச்சுப்பாத்தா விளங்கும். எங்கட பக்கம் மழை பெய்யிறது குறைவெண்டபடியா தென்னைகளைவிட பனைமரங்கள்தான் நிறைய. அந்தப் பனைமரங்கள்ல நிறைய இப்ப மொட்டையா நிக்கிது எண்டு நினைக்கிறன்.

நாங்கள் பனைமரத்தை முழுமையாப் பயன்படுத்தியிருக்கிறம் எண்டு நினைக்கிறன். பனைமரத்தை அறுத்துச் சிலாகை செய்து வீடுகட்டுறது. பனையோலையை அப்பிடியே வேலியடைக்க, படுக்கிற பாய், களப்பாய் என்று பற்பலவிதமான பாய்கள் பின்ன, கடகம் செய்ய, நீத்துப்பெட்டி செய்ய, புகையிலையை சந்தைக்குக் கட்டிக்கொண்டுபோக, சாமான்கள் வைக்கிற பெட்டிகள் செய்ய எண்டு என்னமாதிரியெல்லாம் பயன்படுத்த ஏலுமோ அப்பிடிப் பயன்படுத்திப் பாத்திருக்கிறம். இதைத்தவிர பயன்படுத்த முடியாத மிச்சமீதிகளையெல்லாம் விறகுக்குப் போயிரும்.

புங்குடுதீவில கடக்கரையோரமா எங்களுக்கு ஒரு காணி இருக்கு[இருந்தது? :(]. ஈச்சாமனை எண்டு பேர். வேலியடைக்கிறது எண்டு முடிவெடுத்திற்றா மாட்டுவண்டியொண்ட வாடகைக்கு எடுத்தண்டு அங்க போறது வழமை. நிறைய பனையும் தென்னையுமாக சோலையாக இருக்கும். ஒரு பக்கத்தில கடல். நல்ல வெள்ளை மண்ணோட கடற்கரை. அம்மாவுக்கு அவவின்ர தங்கச்சிமாருக்கும், அப்பாவின்ர அக்காவுக்குமெண்டு இரண்டு குடும்பத்துக்கும் சொந்தமான இடமது.


நன்றி:Flickr

அங்க போனா, பனையோலைகளோட மட்டும் நிப்பாட்டிர மாட்டம். தேங்காய்களும், இளம்பனையோலைகளும் பனம்பழக் காலமெண்டா பனம்பழங்களும் வேற என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் எடுத்தண்டு வருவம்.

முதல்ல பனையோலைத்தண்டில இருக்கிற கருக்கை நல்லா வெட்டி எடுத்திருவினம். ஒரு கிழி கிழிச்சா, காலம்முழுக்க அந்தக் காயத்தின்ர அடையாளம் இருக்கும். பாய் பின்னவெண்டு எடுத்தண்டு வந்திருக்கிற பனையோலைகளைத் தரம்பிரிச்சு படுக்கிற பாய்களுக்கும், நீத்துப்பெட்டிகளுக்கும் மாதிரி முக்கியமான விசயங்களுக்கு நல்ல குருத்தோலைகளைத் தனிய வச்சிருவினம். களப்பாய் பின்னி நான் பாக்கேல்ல. எப்பயாவது எடுக்கிறபடியா, அது அவ்வளவு சுலபமா பழுதாப்போயிராதெண்டு நினைக்கிறன். சாமான்கள் போட்டு வைக்கிறதுக்குச் சின்னச்சின்ன பெட்டிகள் செய்வினம். எல்லாம் தரம்பிரிச்சபிறகு ஓலையை மட்டும் இங்கிலிஷ் V வடிவை தலைகீழாத் திருப்பிப்போட்ட வடிவில் வெட்டித் தனிய வைப்பினம். பிறகு சத்தகத்தால ஒவ்வொரு ஓலையையும் பிரிச்சு கிளிச்செடுப்பினம். ஒரு சீரான அகலத்தில கிளிச்சு வைப்பினம். எவ்வளவு கெஞ்சிக்கேட்டாலும் இந்த வேலையை மட்டும் சின்னாக்களிட்ட குடுக்க மாட்டினம். சத்தகத்தால கையை கிழிச்சிட்டா கொப்பருக்கு யார் பதில் சொல்லிறது எண்டிறதுதான் பதிலாக வரும். ஆனா, பெட்டிகள் பின்னேக்க எங்கட கையிலயும் நாலைஞ்சு ஓலைகளைக் குடுத்து பின்னவிடுவினம். அம்மா, அன்ரி, அவையின்ற சினேகிதங்கள், அம்மம்மா, அவவின்ர சினேகிதங்கள் எண்டு எல்லாரும் ஒண்டாயிருந்து வேலை செய்வினம். பொதுவா மத்தியானத்திலதான் இது நடக்கும்.

பனையில எனக்குச் சரியாப் பிடிச்ச விசயம் பனம்பழம். பனம்பழத்தைச் சுட்டெடுத்துச் சாப்பிடுறது சின்ன வயசில நல்லாப்பிடிச்ச விசயம். யாரு பனங்கொட்டையில ஒரு சாறுமில்லாமச் சாப்பிடுறது எண்டிறதில பெரிய போட்டியே நடந்திருக்கு. ‘பனங்கொட்டை சூப்பி’ என்றெல்லாம் பட்டமெல்லாம் வைப்பார்கள். சூப்பிய பனங்கொட்டைகளை வெய்யில்ல காய வைச்சு, பிறகு மாரி காலத்தில நிலத்தைக் கொத்தி தாழ்ப்பினம். கொஞ்ச காலத்துக்குப்பிறகு அது முளைக்கும். அந்தப் பனங்கொட்டைகளுக்கிள்ள வெள்ளையா ஒண்டிருக்கும் [வழக்கம் போல பெயர் மறந்துபோயிற்றிது :(]. நல்ல இனிப்பா இருக்கும். பனங்கொட்டைகள் நன்றாக முளைச்சு வந்தாக் கிழங்கு கிடைக்கும். அந்தக் கிழங்கைப் பச்சையாச் சாப்பிட விடமாட்டினம். கிழங்கை நல்லாக் கழுவிற்று பெரிய பானைகளில போட்டு வேக வைப்பினம். பொதுவா வீட்டுப்பின்பக்கந்தான் இது நடக்கும். வெந்து ஆறின கிழங்கைக் கிழிச்சுச் சாப்பிடக்குடுப்பினம். அந்த நேரங்களில அந்தக் கிழங்கைச் சாப்பிடுறதைவிட கிழங்குக்கு நடுவில இருக்கிற பீலியைச் சேத்துச் சப்பிறதுக்குத்தான் சின்னாக்கள் அலைவினம். முடிஞ்சளவு கிழங்கைச் சாப்பிட்டபிறகு மிச்சக்கிழங்கை பனம்பாயில போட்டு வெய்யில்ல காய வைப்பினம். வேகவைச்சபிறகு காய வைச்சு வாறதுக்குப் பெயர் ‘புழுக்கொடியல்’. வேகவைக்காம சுத்தப்படுத்திற்று காயப்போட்டு எடுத்தா அது ‘ஒடியல்’. ஒடியல்லை முந்தியெல்லாம் உரல்ல போட்டு இடிச்சு எடுப்பினம். இதுக்குப் பெயர் ‘ஒடியல் மா’ ஒடியல் மாவில இருந்து தமிழாக்களின்ற தேசிய உணவு எண்டே சொல்லக்கூடிய ‘கூழ்’ செய்வினம். கூடவே ஒடியற்புட்டும் செய்வினம். ஆனா, கூழுக்கு இருக்கிற மரியாதையும் வரவேற்பும் ஒடியற்புட்டுக்கு இல்லையெண்டுதான் நினைக்கிறன்.

பனம்பழத்தைப்பற்றிச் சொன்னனாந்தானே. பனம்பழத்தைச் சுட்டு அதின்ற சாறை நல்லா வழிச்செடுத்து அதோட அவிச்ச கோதுமைமா, சீனி எல்லாம் சேர்த்து பனங்காய்ப்பணியாரம் செய்வினம். இப்பவரைக்கும் எனக்குப் பிடிச்ச பலகாரமெண்டா அது பனங்காய்ப்பணியாரந்தான்! அந்தப் பனம்பழச்சாறு இருக்குத்தானே. அதை நல்ல சுத்தமான பாயில போட்டுத் தடவிக் காயவைப்பினம். அப்பிடி வைச்சாக்கிடைக்கிறது பினாட்டு. போனவருசம் அக்கா சிலோனுக்குப் போனபோது என்னட்ட என்னவேண்டுமென்று கேட்டவ. நான் அவட்டக் கேட்டது ரெண்டே ரெண்டு விசயந்தான். பனங்கட்டியும் பினாட்டும். வேற ஏதாவது கேளெண்டு அவ சொல்லியும் நான் மாத்தேல்ல. கடைசில கஷ்டப்பட்டு வன்னியில இருந்து கொண்டுவந்தவ. அவ கொண்டு வந்த பினாட்டு கொஞ்ச மாசத்திலயே முடிஞ்சு போச்சு. ஆனா, அவ கொண்டு வந்த பனங்கட்டியும் தூளாக்கின பனஞ்சக்கரையும் திரவியம் போலப் பயன்படுத்திறபடியாக் கொஞ்சம் மிச்சமிருக்கு.

எனக்கு சமையல் எந்தளவு பிடிச்ச விசயம் எண்டதை என்ற ‘பச்சை சப்பாத்தி’ இடுகையைப் படிச்ச ஆக்களுக்குத் தெரியும். அண்டைக்கு இப்பிடித்தான் இந்திராவின்ற பதிவைப் பாக்கேக்க, அவ சக்கரையை(வெல்லை)பற்றியும் பனங்கட்டியை(கருப்பட்டி)ப்பற்றியும் எழுதியிருந்ததைப் பாத்தனான். உடன, எனக்கும் ஏதாவது செய்யோணும் போல வந்திற்றுது. அதுதான் ஒரு நாளுமில்லாத திருநாளா நானும் Kay நடத்திற Jihva for Ingredients: Jaggery நிகழ்வில கலந்துகொள்ளலாமெண்டு முடிவு செஞ்சன். இந்த நிகழ்வை உருவாக்கினது இந்திரா. அதைப்பற்றி இங்க படிக்கலாம்.

பனங்கட்டியில அப்பிடியென்ன செஞ்சனானெண்டு கேக்கிறீங்களா?

சின்ன வயசில இரவில பால் தாறதெண்டா அதில கொஞ்சம் பனங்கட்டியைப் போட்டுத் தருவினம். மாரி காலம் வந்தாலே அதுதான் நினைவுக்கு வரும். அது முதலாவது விசயம். காய்ச்சின பால் ஒரு கப்பெடுத்து அதில வேண்டின அளவு பனங்கட்டித்தூளைப் போட்டுக் கலக்குங்க. குளிர்/பனிக்காலங்களில குடிச்சா சொல்லி வேலையில்ல! ;)

Kay வழக்கமான சாப்பாட்டிலயிருந்து கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது செய்யச் சொல்லியிருந்தவ.

இந்த இலையுதிர்காலத்தில ஆப்பிள் நிறையக் கிடைக்கும். அதுவும் புது அப்பிள் கிடைக்கும். நண்பர்கள் கூட்டத்தை சாப்பாட்டுக்குக் கூப்பிட்டிருந்தீங்களெண்டா கடைசில இனிப்புக் குடுக்கிறது வழமையான விசயம். ஐஸ்கிறீம் பிடிக்காதெண்டு சொல்லுற ஆக்கள் வலுகுறைவு. சும்மா ஐஸ்கிறீம் மட்டும் குடுக்கிறது பெரிய வேலையில்லைத்தானே. அதால, வெவ்வேற விதங்களில ஐஸ்கிறீமை வித்தியாசமாப் பரிமாறலாம். அதில ஒண்டுதான் இந்த காரமலைஸ்ட் அப்பிள்.

தேவையான விசயங்கள்:

அப்பிள், பட்டர், பனங்கட்டி அல்லது வெல்லம், வனிலா ஐஸ்கிறீம்.

செய்முறை:

அப்பிளின்ர தோல் சீவி, உள்ள இருக்கிறதை வெட்டி எடுத்தபிறகு மெல்லிய துண்டுகளாக நீளவாக்கில வெட்டி வையுங்க. அடுப்பில சட்டி சுட்டபிறகு தேவையான அளவு பட்டரைப் போட்டுட்டு வெட்டின அப்பிள் துண்டுகளை வடிவா அடுக்கிக் கொஞ்ச நேரம் அவிய விடுங்க. பிறகு மற்றப்பக்கம் திருப்பிப்போட்டு அவிய விடுங்க. கொஞ்ச நேரத்துக்குப்பிறகு தூளாக்கின பனங்கட்டிய அப்பிள் துண்டுகளுக்கு மேல தூவிவிடுங்க. திரும்ப மூடியால மூடி அவிய விடுங்க. அவ்வளவுதான் காரமலைஸ்ட் அப்பிள் தயார்!

ஐஸ்கிறீமோட கொஞ்சம் அப்பிள் துண்டுகளையும் சேர்த்துக்குடுங்க!

ஆங்கிலத்தில் எழுதினதை இங்க படிக்கலாம்:
http://mathy.kandasamy.net/blog/2006/12/94

for JFI-Jaggery hosted by Kay of ‘Towards A Better Tomorrow’

For more information on Palmyrah trees - http://en.wikipedia.org/wiki/Palmyrah
Kitul Pani: There’s another variety of Jaggery available in Sri Lanka. It’s the staple of Sinhala people. It’s called Kitul Pani. here’s some more info.

Posted in அனைத்து இடுகைகள், சமையல், நினைவலைகள், புகைப்படங்கள்with 49 Comments →

  • You Avatar
    -


Creative Commons License