தோட்டம்
உங்களில நிறையப்பேர் பூக்கண்டுகளும் மரஞ்செடிகொடிகளும் வளர்த்திருப்பீங்க, வளர்த்தண்டு இருப்பீங்க. நான் இதுவரைக்கும் ஏதாவது பெருசா வளர்த்திருக்கிறனா எண்டு யோசிச்சுப்பார்க்கிறன்.
புங்குடுதீவில எங்கட வீடு எப்படி இருந்தது எண்டு முந்தி எழுதி இருக்கிறன்.
http://mathy.kandasamy.net/musings/?p=243
கிணத்தடிக்கு அங்கால, ஒரு சின்ன இடத்தில காய்கறித்தோட்டம் நடுவினம் அம்மம்மா, சித்தி, அம்மா எல்லாரும். அதுக்குக் கண்டுகள் சர்வோதயத்தில இருந்து வாங்கியண்டு வர்ரவையெண்டு நினைக்கிறன். பூசணிக்கொடி படர்ந்திருக்கும். வெண்டிக்காய், மிளகாய்ச்செடி எண்டு கொஞ்சம் இருக்கும். என்ன இருந்தாலும் இல்லையெண்டாலும் கத்தரி இருக்கும். எங்கட ஆக்களுக்கு, அதான் சிலோன் காரருக்கு மரக்கறியெண்டா அது ஒண்டுதான். கத்தரிக்காய், கத்தரிக்காய், கத்தரிக்காய். இங்க மொன்ரியல்’ல பனிக்காலத்திலயும் கத்தரிக்காய் அண்டைக்குக் காலமைதான் தோட்டத்தில இருந்து பறிச்சண்டு வந்தமாதிரி இருக்கும். டொமினிகன் ரிபப்ளிக்ல இருந்துதான் இங்க நிறைய மரக்கறி வாறது. அதுவும் இங்க, மொன்றியலில அந்த நாட்டுக்காரர் கூட இருக்கிறபடியா நேரடி விமானசேவை இருக்காம். அதில நம்மட ஆக்கள் மரக்கறியையும் கொண்டந்து சேர்த்திருவினம். அங்க கிடைக்கேல்லையெண்டா சமயத்தில இந்தியாவில இருந்துகூட ப்ளேன்ல கொண்டந்து சேர்த்திரும் அந்தளவு சனத்துக்கு கத்தரிக்காய்ப் பைத்தியம்.
மிளகாய்ச்செடியும் வைக்கிறனாங்க எண்டு சொன்னனாந்தானே? ஒரு பத்துப் பதினைஞ்சு மிளகாய்ச்செடிதான் நடுவம். மிளகாய் காய்ச்சு பச்சை நிறத்தில இருந்து கொஞ்சம் கொஞ்சமா சிவப்பா மாறும்பாருங்கோ, அப்பதான் எங்கயிருந்தோ வருவினம் விருந்தாளிப்பிள்ளைகள். கீச்சுக்கீச்செண்டு சிவப்பு சொண்டோட பாக்க வடிவாத்தான் இருப்பினம். அவை இருக்கிறது வெளியில தெரியாம, நல்ல வடிவா அந்த மெல்லிய மிளகாய்ச்செடியில தொத்தியண்டு மிளகாய்ப்பழங்களைச் சாப்பிட்டு முடிச்சிருவினம். அப்பதான் சின்னாக்கள் எங்களுக்கு கிளியைப் பாக்கிறதுக்கு சான்ஸ் கிடைக்கும்.
அதுவும் கொழும்பில கொங்கிறீட்டையே பாத்திட்டு புங்குடுதீவுக்குப் போன எங்களுக்கெல்லாம், திரும்பின பக்கமெல்லாம் பிராக்குப்பாக்கிறதுக்கு ஆடு, மாடு, கோழி, செடி கொடியெண்டு நிறைய விசயம். வீட்டுமூலையில இருந்த கறையான் புத்தைப் பாக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும் வெள்ளன விடிய ஓடிருவமெண்டா பாருங்களன். கறையான்கள் எல்லா இடத்திலயும் போய் வாறதைப் பார்த்திட்டு, பிறகு அம்மம்மான் ‘ இங்கை பார் இதுகளை! கறையான் செல்லரிச்சிரும் எண்டு சொன்னாலும் கேக்குதுகளில்லை. கறையான் புத்தை உடைக்க விடமாட்டன் எண்டுதுகள்’ எண்டு அம்மாட்ட சொல்லி, நாலு ஏச்சு அம்மாட்டை இருந்து எங்களுக்கும், ‘அதுகளை ஏன் பேசுற. உன்ற வேலையப் பார்’ எண்டு அம்மம்மாட்ட இருந்து அம்மாக்கும் வந்தபிறகு கறையான் புத்தை உடைச்சு, வீட்டில இருக்கிற கோழிகளை சித்தியோட சேர்ந்து ‘பப பப பப’ என்று கூட்டிக்கொண்டு வந்து விடுறது என்று நல்லாப்பொழுது போகும்.
எங்கட வீட்டில பத்துப்பதினைஞ்சு மிளகாய்ச் செடி வச்சதுக்கே வாற விருந்தாளிகள் மிளகாய்த்தோட்டத்தைக் கண்டா சும்மா விடுவினமே? எங்க வீட்டுக்கு முன்வீட்டுக்கு அந்தப் பக்கம் ஒரு காணி இருந்து தோட்டமெல்லாம் வச்சிருந்தவை. பிறகு அதில அவை வீடு கட்டினமெண்டு வையுங்களன். ஆனா, நாங்க புங்குடுதீவுக்குப் போன மூட்டத்தில அங்க மிளகாய்த்தோட்டமொண்டுதான் இருந்தது. வீட்டில இருந்து லேசில வெளிக்கிட்டுத் திரியேலாது. வெய்யில் குளிச்சிற்று கருவாடு மாதிரி வந்து நிப்பமாம் நாங்க எண்டு அம்மா விடமாட்டா. நாங்க ஏதோ திறமா இருந்தனாங்க. வெய்யில் குளிச்சுத்தான் வடிவு கூடிரப்போகுது எண்ட நினைப்பு அவவுக்கு. சரி விடுங்க அதை. இப்ப வெளியில நினைச்ச நேரத்துக்குப் போகேலாது. என்ன செய்யுறது? கடைக்குச் சாமான் வாங்கப்போறதெண்டு வெளியில போறது ஒரு வழி. பொதுவா சாமான் வாங்க அம்மம்மாதான் போவா. அம்மம்மா, நானும் வாறன் எண்டு கையைப்பிடிச்சுத் தொங்கியண்டு போகலாம். வழிமுழுக்க பிராக்குப் பாத்தண்டு போறதெண்ட படியா மெதுவாத்தா போய்த் திரும்புவம். ரோட்டோரமா சரியா நடந்தா அது நல்லபிள்ளைகளுக்கு அழகா சொல்லுங்க. அதால உள்ள குரங்குத்தனமெல்லாம் செய்யோணும். யாரின்ர வீட்டிலயாவது பூப்பூத்து அது வெளியில தெரிஞ்சா நைசா புடிங்கிரோணும். அதுவும் அடுக்குச் செம்பருத்தையெண்டா விசேஷம். வேலியோரத்துக் கதியால் வழிய சின்னச் சின்ன முள்ளு இருக்ம்தானே, அதை எடுத்துக் கதியாலில கீறிவிட்டீங்களெண்டா உள்ளுக்குள்ள இருந்து பிசின் மாதிரி ஒண்டு வரும். கொஞ்ச நேரம் விட்டா அது வெளியில வந்து காஞ்சுபோயிரும். எந்த வீட்டு வேலியில கீறினதெண்டு பார்த்து வச்சிட்டா திரும்பி வரேக்க பிசின் எடுத்திரலாம்.
இதையெல்லாத்தையும் விட, எங்களுக்கெல்லாம் பிடிச்ச விளையாட்டு, போற வழியில் இருக்கிற மிளகாய்த்தோட்டங்களுக்குப் பக்கதில சத்தமில்லாமப் போய் நிண்டுட்டுப் பிறகு ‘ஹோஓஓஓஓ’ எண்டு சத்தம்போட்டு கத்தினா மேல பறிப்பினம் பாருங்க விருந்தாளிப் பிள்ளைகளெல்லாம் பாக்க நல்ல வடிவா இருக்கும். உருப்பட்ட கிளிகள் பறக்கும். அதுவரைக்கும் எங்க இருப்பினமோ தெரியேல்லை. மிளகாய்ப்பழம் தின்னுறதுக்கு மட்டும் வந்திருவினம்.
புங்குடுதீவிலயும் யாழ்ப்பாணத்திலயும் கொஞ்ச வருசம் இருந்திற்று நாங்க சென்னைக்கு வந்திற்றம்தானே? அங்க பெருசா ஒண்டும் வளக்கேல்லை. சும்மா கொஞ்ச குரோட்டனும், மணிப்பிளாண்டும். பெரிய தொட்டியில வச்ச செம்பருத்தையும்தான். பிறகு ஹவாயில மோப்பம் பிடிச்சண்டு போய் வாங்கி வளர்த்த குண்டு மல்லிகைச் செடி தனி அலாதி அனுபவம் பாருங்க. பூப்பூத்தா வீடு முழுக்க மணக்கும். உடன புங்குடுதீவுக்குப் பறந்திருவன். மெட்ராசில முழம்கணக்கில வாங்கிற மல்லிகைப்பூ வாசமும் சேர்ந்து மணக்கும்.
இப்ப, இங்க என்ற பால்கனியில என்ன என்ன நிக்குது தெரியுமா? என்ன செடி எண்டு தெரியாமலேயே நான் கொண்டந்துபோட்ட எட்டு சூரியகாந்திச் செடிகள். என்னை விட உயரமா நிக்குதுகள். அதில மூண்டு நல்லா பெருசா பூப்பூத்திருக்கு. மிச்சம் அடுத்த கிழமை பூத்திருவம் எண்டபடி நிக்குது. மிச்சப்படிக்கு மூண்டு கிரைசாந்தமம் எக்கச்சக்கப்பூக்களோட சிரிக்குது. ஒரு ஓரத்தில ‘மிண்ட்’, ‘லாவண்டர்’ நிக்குது. ஒரு ஓரத்தில அப்பா வாங்கியண்டு வந்த துளசியும் நிக்கிறா. வீட்டுக்குள்ள அங்கனக்க இங்கனக்க கொஞ்சம் பச்சைச் செடிகள் நிக்கினம். அண்டைக்கு என்ற ·பிரெண்ட் நீலநிறச் சாடியில வச்சுக்கொண்டு வந்த மஞ்சள் நிற ரோசாப்பூச்செடியும் இருக்குது. என்னத்துக்கு என்ற வீட்டில இருக்கிற செடிகொடிகளைப்பத்தியெல்லாம் இங்க வந்து சொல்லி அறுத்தண்டு இருக்கிறன் எண்டு யோசிக்கிறீங்களா?
இங்க மொன்ரியலில, ‘Community Garden’ எண்டு நடுநடுவில காணிகள் இருக்கும். விருப்பமிருக்கிற ஆக்கள்போய்க் கேட்டுக்கதைச்சு இடம் வாங்கி தங்களுக்குப் பிடிச்ச மரக்கறி பூக்கண்டுகள் நடலாம். இப்பிடித்தான் Christian Vaillantஉம் வெயிட்டிங் லிஸ்டில இருந்து கேட்டுக்கதைச்சு ஒரு மாதிரி இடம் பிடிச்சு செடிகள் நட்டேர். இப்ப அவருக்கு மொன்ரியல் நகரத்தில இருந்து அவருக்கு நோட்டிஸ் போயிருக்கு. என்ன விசயம் தெரியுமா? அவரின்ற காணியில - என்ன பெரிய காணி, லேஞ்சி காயவைக்கக்காணாது இடம். சரி விசயத்துக்கு வாறன். அவரின்ற காணியில முழுக்க முழுக்க தக்காளி பயிரிட்டிருக்கிறேறாம். ஒருத்தர் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில ஒரேயொரு வகையான மரக்கறியோ பூக்கண்டோ நடக்கூடாதாம். இப்ப Christian Vaillant நட்டிருக்கிற 36 தக்காளிச்செடியில முக்காவாசியை அவர் புடுங்கி எறியோணுமாம். ஏனெண்டா, அவர் சிலவேளைகளில அந்தத் தக்காளிச் செடியில இருந்து கிடைக்கிற தக்காளியை வித்திருவேராம்.
[மரத்தடி குழுமத்தில் 2002இலிருந்து நான் எழுதியவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்/சேமித்து வைக்கிறேன். -மதி]


January 31st, 2006 at 11:13 pm
மதி! இன்றைக்கு தான் இந்த பக்கம் வர நேரம் கிடைத்தது. என் நினைவுகளை ரொம்ப தான் கிளறி விடுகிறது உங்கள் நினவலைகள். பொறுமையா படிச்சி ஒன்வொன்னா சொல்லறேன். அப்புறம் உங்க பழைய புகைப்படம் எல்லாம் ரொம்ப அழகு.
February 24th, 2006 at 3:06 pm
[...] தோட்டம் [...]