July 14, 2003

Talk to her (2002)

பெத்ரோ ஆல்டொமோவார் இயக்கத்தில் ஜாவியர் கமாரா(Javier Camara), டாரியோ கிராண்டினெட்டி(Dario Grandinetti), ரொசாரியோ �ப்ளோரெஸ்(Rosario Flores), லொயோனொர் வாட்லிங்க்(Leonor Watling) ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

talktoher.jpg

இரண்டு பெண்கள் ஏதோ ஒரு சக்தியின் பிடியில் ஆட்பட்டவர்கள்போல மேடையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். மேடை முழுவதும் தளபாடங்கள் நிறைந்து கிடக்கின்றன. அவர்கள் அவற்றின்மேல் முட்டி விழப்போகிறார்கள் என்று நினைக்கும்போது ஒரு ஆண் வந்து அவற்றையெல்லாம் தள்ளித்தள்ளி விடுகிறான். அவர்களும் கண்ணிழந்தவர்கள்போல மேடையில் அலைகிறார்கள். பின்னணி இசையும் இந்த மேடை நிகழ்ச்சிக்கு வலுசேர்க்கிறது. இந்த மேடை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் இருவர் உணர்ச்சி வசப்படுகிறார்கள். அவர்களில் ஒருவரின் கண்ணில் கண்ணீர். மற்றவர் முதலாமவருடன் பேச நினைத்தாலும் தயங்கி பேசாமல் விடுகிறார்.

முன்பின் தெரியாத இந்த இருவரும் மறுபடியும் சந்திக்கிறார்கள். அப்போது முதலாமவரான மார்கோவின் காதலி ஒரு matador ஸ்பெயினில் மாடுகளுடன் சண்டை போடுவார்களே அவர்கள்தான். இவர்தான் முதல் பெண் மாடடோர். லிடியா புகழின் உச்சத்தில் இருக்கும்போது சந்திக்கிறார்கள். இவர்களின் உறவு கொஞ்சம் குழப்பம் நிறைந்ததுபோல தெரிகிறது. மார்கோவிடம் பேச வேண்டும் என்று சொல்லி விட்டுப்போன லிடியா சண்டையில் இருந்து சுயநினைவுடன் திரும்பவில்லை. மாடு முட்டி கோமாவிற்கு போய் விட்டாள்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மற்றவர் பெனிங்னியோ(Benignio). இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸ். நிகழ்ச்சியில் நடந்ததைப்பற்றி இவரின் நோயாளியிடம் விவரிக்கிறார். மார்கோவிடம் பேச வேண்டும் போலிருந்ததையும் கூறுகிறார். பெனிங்னியோ பார்த்துக்கொள்வது நான்கு வருடங்களாக கோமாவில் கிடக்கும் அலிசியாவை. அலிசியா பாலே நடனம் ஆடுபவர். பெனிங்னியோ அலிசியாவை காதலிக்கிறார். ஏறக்குறைய இருபத்திநான்கு மணிநேரமும் அலிசியாவுடனேயே செலவழிக்கும் பெனிங்னியோ இதற்கு முன் நோய்வாய்ப்பட்டு இருந்த அவரின் தாயை பராமரித்து வந்தார். தன் பெண்ணை இப்படி ஒருவன் பராமரிப்பதை விரும்பாத அலிசியாவின் தந்தையிடம் பெனிங்னியோ தன்னைப்பற்றி பொய் சொல்கிறார்.

லிடியாவும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அவளுடன் வந்த மார்கோ, பெனிங்னியோவையும் அலிசியாவையும் சந்திக்கிறார். பெனிங்னியோவும் மார்கோவும் நண்பர்கள் ஆகிறார்கள். பெனிங்னியோ, கோமாவில் இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தான், உணர்வுகள் இருக்கிறது என்று மார்கோவுக்கு சொல்லுகிறார். கூடவே லிடியாவுடன் பேசிக்கொண்டே இருக்குமாறும் சொல்லுகிறார். அலிசியாவுடன் தான் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதாகவும் சொல்லுகிறார்.

பெனிங்னியோ அலிசியாவைப்பற்றியும் தன்னைப்பற்றியும் மார்கோவிற்கு சொல்லும்போதுதான் நமக்கும் பல விஷயங்கள் தெரியவருகின்றன. அதுவரை, அலிசியாவை பெனிங்னியோவின் காதலியாக நினைத்த நமக்கு, அலிசியாவுக்கு பெனிங்னியோவை தெரியாது என்பதே மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. பெனிங்னியோவின் வீட்டிற்கு எதிரில் இருந்த பள்ளியில்தான் அலிசியா பாலே நடனம் கற்ற்வந்தாள். அவளை ஜன்னல் வழியே கண்டு மயங்கிய பெனிங்னியோ இரு முறை அவளை சந்தித்திருக்கிறான். அலிசியாவின் பர்சை வீதியில் கண்டெடுத்து ஒப்படைத்தபோது ஒரு முறை. அல்சியாவை காண்பதற்காக வீட்டிலேயே கிளினிக் வைத்திருக்கும் அலிசியாவின் சைகாலஜிஸ்ட் தந்தையிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அலிசியாவின் அறைக்குள் நுழைகிறான். அவன் வெளியே வரும்போது தற்செயலாக அவனைக்காணும் அலிசியா அலறுகிறாள். அலிசியாவின் தலைக்கிளிப்பை அங்கிருந்து எடுத்து வந்த பெனிங்னியோ, தன் வீட்டில் அவள் பள்ளிக்கு வருவதற்காக காத்திருக்கிறான். அவள் வரவில்லை. பிறகு, மருத்துவமனைக்கு வந்த அவனுக்கு புது நோயாளியை தன் கண்காணிப்பில் விட்டிருப்பது தெரிந்து பார்க்கப்போகிறாள். மழை பெய்ந்துகொண்டிருந்த போது நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி கோமாவிற்கு போய்விட்ட அலிசியாதான் அந்த நோயாளி. சுயநினைவில் இர்ந்த போது கிட்ட நெருங்க முடியாத அலிசியாவை, இப்போது முழுக்க முழுக்க கவனிப்பது பெனிங்னியோதான். அவளுக்காகவே வாழ்ந்து வருகிறான் அவன்.

அவ்வப்போது அலிசியாவை அவளது பாலே நடன ஆசிரியை வந்து பார்க்கிறாள். அந்த ஆசிரியைதான் நாம் முதலில் பார்த்த மேடை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இரு பெண்களில் ஒருவர். முதன்முறை அலிசியாவின் பர்சை எடுத்துக்கொடுத்து அவளுடன் பேசியபோது பெனிங்னோ அவளிடம் கேட்ட கேள்விகளில் ஒன்று அலிசியாவின் பொழுதுபோக்குகள் பற்றி. அவளுக்கு உலகநாடுகளுக்கு சுற்றுலா போக ஆசை, சைலண்ட் மூவிஸ் பிடிக்கும் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறான். இப்போது அவளுக்காக உலகநாடுகள் பற்றி வாசிப்பதும், அவளுக்கு படித்த படங்களைப்பார்த்து வந்து அலிசியாவிடம் கதைசொல்வதுமாக பெனிங்னோ இருக்கிறான்.

மார்கோவிற்கு மட்டுமல்ல நமக்கே பெனிங்னியோ அலிசியாமீது செலுத்தும் அக்கறை ஆச்சரியப்படுத்துகிறது. பெனிங்னியோவின் சொற்படி மார்கோவும் லிடியாவிடம் பேசுகிறான். ஆனால் மார்கோவிற்கு லிடியா தன்னிடம் முன்பு பேசவேண்டும் என்று சொன்னது அவளும் அவளுடைய பழைய காதலனும் திருமணம் செய்வதாக எடுத்த முடிவைப்பற்றி என்று தெரியவருகிறது. இதற்கிடையில் பெனிங்னியோ, அவன் பார்த்து விட்டு வந்த ஒரு படத்தைப் பற்றி அலிசியாவிடம் சொல்லுகிறான். அப்போது நடந்த ஒரு அசம்பாவித சம்பவம் நமக்கு படம் முடியும் தறுவாயிலேதான் தெரியவருகிறது.

கோமாவில் இருக்கும் அலிசியாவை தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக மார்கோவிடம் சொல்லுகிறான் பெனிங்னியோ. கோமாவில் இருக்கும் லிடியாவையும் அவளுடன் இருப்பதற்காக வந்த அவளின் பழைய காதலனையும் விட்டுவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறும் மார்கோ, பெனிங்னியோவை அப்படி எல்லாம் பேச வேண்டாம் என்று எச்சரிக்கிறான். அப்படி செய்யப்போவதில்லை என்று சொல்லவைக்கிறான். தன்னுடைய பழைய சுற்றுலா எழுத்தாளர் வேலையை தொடரும் மார்கோ, பல மாதங்களாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறான். இந்நிலையில் அலிசியாவின் உடலில் நிகழும் மாற்றங்கள் மருத்துவர்களை யோசிக்க வைக்கிறது. பரிசோதனையில் அலிசியா கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. விசாரணையில் பெனிங்னியோவை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று தெரியவருகிறது. பெனிங்னியோ சிறைச்சாலைக்குப்போக அலிசியா வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறாள். இதெல்லாம் லிடியா இறந்துபோனதை பத்திரியையில் பார்த்து மருத்துவமனையை தொடர்பு கொள்ளும் மார்கோவிற்கு தாமதமாகவே தெரியவருகிறது. பெனிங்னியோவை பார்ப்பதற்காக ஸ்பெயினிற்கு திரும்பி வரும் மார்கோ, பெனிங்னியோவின் வீட்டில் தங்குகிறான். பெனிங்னியோ அந்த வீட்டை அலிசியாவிற்காகவே தயார் செய்து வைத்திருப்பதையும் காண்கிறான்.

மூளை சரியில்லாதவன் என்று கருதப்படும் பெனிங்னியோ, மார்கோவிடம் அலிசியா எப்படி இருக்கிறாள் என்று கேட்ட படியே இருக்கிறான். அலிசியா இறந்து விட்டாள் என்று கருதும் மார்கோ, ஒரு நாள் பெனிங்னியோவின் வீட்டில் இருந்து நடனபள்ளியில் பயிற்சி செய்யும் அலிசியாவைப் பார்த்து ஆச்சரியம் அடைகிறான். பெனிங்னியோவின் வக்கீலையும் சந்தித்து என்னவேது என்று விசாரிக்கும் மார்கோ, அனைவரும் பெனிங்னியோவிடம் பொய் சொல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறான். குழந்தை பிறப்பின்போது அலிசியா சுயநினைவு அடைந்ததையும், குழந்தை இறந்தே பிறந்ததையும் தெரிந்துகொள்கிறான். ஆனால், பெனிங்னியோவின் வக்கீல் மார்கோவிடம், தான் பெனிங்னியோவிடம் அலிசியா இறந்து விட்டாள் என்று சொல்லப்போகிறேன் என்று சொல்வதை தடுக்க முடியவில்லை. ஒரு நாள் காலை செல்தொலைபேசியை ஆன் செய்யும் மார்கோ, அதில் பெனிங்னியோ, தான் அலிசியாவிடம் போவதாக விட்டிருக்கும் செய்தியை கேட்கிறான். அலறி அடித்துக்கொண்டு சிறைச்சாலைக்கு செல்லும் அவனுக்கு பெனிங்னியோ அளவிற்கு அதிகமாக மருந்துகளை சாப்பிட்டு இறந்து விட்டான் என்ற செய்தியே கிடைக்கிறது. பெனிங்னியோ வைத்திருந்த பொருட்களில் ஒன்று, அலிசியாவின் ஹேர் கிளிப்.
பெனிங்னியோ அவன் வீட்டை மார்கோவிற்கு விட்டுச்செல்கிறான்.

ஒரு நாள் மேடை நிகழ்ச்சிக்கு செல்கிறான் மார்கோ. அங்கே அலிசியாவையும் அவளது ஆசிரியையும் கண்டு அதிர்ச்சி அடைகிறான். மார்கோவை யாரென்று தெரியாத அலிசியா அவனை அவன் நலமா என்று கேட்கிறாள். மார்கோவை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியையிடம், பெனிங்னியோ இறந்து போன விவரத்தை தனியாக அழைத்துக்கூறுகிறான். தொடரும் மேடை நிகழ்ச்சியை அலிசியா ரசிக்க, அவளுக்கு முன்னால் இருந்த மார்கோ அடிக்கடி திரும்பி அலிசியாவைப் பார்ப்பதோடு படம் முடிகிறது.

Pedro Aldomovarஇன் ‘All about my mother’ படத்தை பார்த்திருந்ததனால், கொஞ்சம் எச்சரிக்கையோடே இந்தப்படத்தை பார்த்தேன். ஆனால், நான் பயந்த மாதிரி இல்லை. நன்றாக இருந்தது இந்தப்படம். நண்பர்களிடம் தைரியமாக பாருங்கள் என்று சொல்லக்கூடியதாகவும் இருந்தது. ஆல்டமோவரின் படங்களில் மேற்சொன்ன படத்தையும் இந்தப்படத்தையும் மட்டுமே பார்த்திருப்பதனால் இவருடைய பாணியை பற்றி நிறைய சொல்ல முடியவில்லை. ஆனால் உறவுகளில், நிகழ்சிகளில் சிக்கல்கள் இருக்கும் படங்களையே எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். சாதாரணமாக செல்லும் இந்தப்படம்கூட, பெனிங்னியோ, அலிசியாவை ஒருதலையாக மட்டுமே காதலிக்கிறான் என்று தெரியும் போது வித்தியாசப்படுகிறது. பிறகு சுயநினைவில்லாத அலிசியாவை கற்பழித்த பெனிங்னியோவின் மீது வெறுப்பு வரவில்லை என்பது இயக்குநரின் திறமை என்றே நினைக்கிறேன். அலிசியாவின் மீது வைத்த அன்பினால், அவள் இறந்துபோய் விட்டாள் என்று நினைத்து தற்கொலை செய்துகொள்ளும் பெனிங்னியோ மீது நமக்கு அனுதாபமே வருகிறது. வேறு உணர்வுகள் இருந்தாலும், அனுதாபமே முன்னிற்கிறது. மார்கோவைப்போல.

Talk_To_Her_02.jpg

பெனிங்னியோவாக நடித்த ஜாவியர் கமாரா நல்ல தேர்வு. நல்ல குரல். படம் நெடுக்க பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால் சலிப்படைய வைக்கவில்லை. அதேபோல மார்கோவாக நடித்த டாரியோ கிராண்டினெட்டி(Dario Grandinetti), ரொசாரியோ �ப்ளோரெஸ்(Rosario Flores), லொயோனொர் வாட்லிங்க்(Leonor Watling) என்று அனைவரும் அருமையாக நடித்திருந்தனர். இசையும், படத்தொகுப்பும், ஒளிப்பதிவும் படத்தின் வெற்றிக்கு வேறு காரணங்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்த இப்படத்தை நினைத்துப்பார்த்தால் மனதில் முதலில் வரும் உணர்வுகள், நட்பு, காதல், தனிமை, இழப்பு, பெனிங்னியோவின் அக்கறை அவன் அலிசியாவை பராமரிக்கும் ஒவ்வொரு அசைவிலும் தெரிவது. அந்த அக்கறைதான் அவன் மேல் அவ்வளவு கோபம் வராததற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

சாதாரணமாகவே நீட்டி முழக்கி கதை சொல்லும் நான், இந்தப்படத்தைப்பற்றி நிறையவே கதைத்திருக்கிறேன். முடிச்சுகளையும் சொல்லிவிட்டேன். இந்தப்பட்த்தை பற்றி எப்படி சொல்வது என்று இன்னமும் குழப்பமாகவே இருக்கிறது. எப்படி இருந்தது என்று சொன்னீர்கள் என்றால் உதவியாக இருக்கும். நீங்கள் சொல்வது உதவியாக இருந்தால், அதன்படி மாற்றி எழுதுகிறேன்.

June 30, 2003

Abre Los Ojos - Open Your Eyes (1997)

இன்னிக்கு பேசபோறது ஒரு ஸ்பானிஷ் படத்தைப்பத்தி. (ஆங்கில சப்டைட்டிலோடுதான்). ‘அப்ரெ லோஸோஜோஸ்’ என்று ஸ்பானிஷ் மொழியிலும் ‘ஒபன் யுவர் ஐஸ்’ என்று ஆங்கிலத்திலும் தலைப்பிடப்பட்ட இப்படத்தை இயக்கியவர் Alejandro Amenabar என்ற ஸ்பெயின் தேசத்துக்காரர்.

alosojos.jpg

இந்தக்கதையில் நாயகன் இருபத்தைந்து வயதுள்ள செசார் (Eduardo Noreiga), அழகான, பெரும் பணக்கார, கொஞ்சம் சுயநலமான ஆனால் வசீகரமான இளைஞன். He is never seen with a single woman twice (U know what I mean!). இவனுடைய உற்ற நண்பனான பெலாயோவிற்கு இவன்மேல் லேசான பொறாமையும் உண்டு. தன்னுடைய நவீன அப்பார்ட்மெண்டில் செசார், தன்னுடைய இருபத்தைந்தாவது பிறந்த நாளைக்கொண்டாடுகிறான். கொண்டாட்டத்திற்கு பெலாயோ, தன் காதலியான சோ�பியாவை (Penelope Cruz) அழைத்து வருகிறான். அதே விழாவிற்கு அழையா விருந்தாளியாக வருவது நூரியா (Najwa Nimri). இவள்தான் செசாரின் லேட்டஸ்ட் தோழி.

சோ�பியாவைப் பார்த்ததும் சொக்கிப்போன செசார், அவளிடம் தன்னை நூரியாவிடமிருந்து காப்பாற்றச்சொல்லி கேட்கிறான். செசாரைப்பற்றி அவனது நடை உடை பாவனைகளிலிருந்தே அறிந்து கொண்ட சோ�பியா சம்மதிக்கிறாள். இவர்களிருவரும் பேசிகொள்வதைப்பார்த்த பெலாயோ அளவுக்கு மீறி குடித்து விட்டு வீட்டிற்கு சென்று விடுகிறான். போவதற்கு முதல் சோ�பியாவை அவள் வீட்டில் விடுமாறு செசாரிடம் கேட்டுக்கொள்கிறான் அந்த (கொஞ்சம்) தாழ்ந்த மனப்பான்மையுடைய நண்பன்.

இரவு முழுக்க சோ�பியாவின் வீட்டில் அவளுடன் பேசியே கழித்த செசார் வெளியே வந்ததும் லேசாக திடுக்கிடுகிறான். அங்கு அவனுக்காக காத்திருப்பது நூரியா. அவள் தன்னுடைய காரில் ஏறிக்கொள்ளுமாறு செசாரை கேட்டாள். மறுத்த செசாரிடம் ஒரு பந்தயம் கட்டி, அவனுக்கே உள்ள இயல்பான குணநலனைப்பயன்படுத்தி காரில் ஏற்றிக்கொள்கிறாள். காரில் ஏறியதுமே செசாருக்கு தான் காரில் ஏறியிருக்க கூடாதென்று விளங்கி விட்டது. அவன் சுதாகரிப்பதற்குள், மிகவும் பொசசிவ் குணத்தைக்கொண்ட நூரியா வேகமாக காரையோட்டி ஒரு சுவரில் மோதி இறந்து விடுகிறாள். தன்னுடைய அழகில் இறுமாந்திருந்த செசார், அவலட்சணமாகிறான். போலீஸ் நூரியாவை கொலை செய்ததாக கூறி அவனைக் கைது செய்கிறது.

போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மனநோயாளர் காப்பகத்தில் கண்விழிக்கிறான் செசார். முகத்தில், அவன் எப்போது அணிந்திருக்கும் முகமூடி. அவனை பரிசோதனை செய்கிறார்கள். அதற்காக வந்திருந்த மனநோய் மருத்துவரிடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசத்துவங்குகிறான் செசார். மருத்துவருடன் சேர்ந்து நாமும் பல புதிர்களுக்கு விடை தேடி, சேசார் சொல்லுவதை கேட்கத்தொடங்குகிறோம். பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை சேசார் சொல்லுகிறான். சில சமயங்களில் அவன் சொல்லுவது முன்னுக்குபின் முரணாக இருக்கிறது. மருத்துவருடன் சேர்ந்து நாமும் செசாரை நம்ப மறுக்கிறோம்.

இதை எங்கயோ கேட்டிருக்கேன் அல்லது பார்த்திருக்கேன் என்று சொல்லுறீங்களா? 2001ம் ஆண்டு டாம் குரூஸ், பெனலோபே குரூz, காமரூன் டையஸ் நடிப்பில், காமரூன் குரோ இயக்கத்தில் வந்த Vanilla Sky’, இந்த ஸ்பானிஷ் மொழிப்படத்தின் காப்பி.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நாம பேசின ‘மொமண்டோ’ படத்தைப் போன்ற படமிது. ஆகவே இதில் நடித்திருப்பவர்களைப்பற்றியும் தொழில்நுட்பக்கலைஞர்கள் பற்றியும் கொஞ்சம் பேசிய பிறகு மீதிக் கதையை தொடரலாம் என்றிருக்கிறேன்.

‘எடுஆர்டோ நொரீகா’தான் இப்படத்தின் நாயகன். அலெஜாண்ரோ அமெனபாரின் முதல் படத்தில் நடித்த இவன், அவரின் இந்த இரண்டாவது படத்திலும் நடித்திருக்கிறான். ஆரம்பத்தில் மற்றவர்கள் கண்டு பொறாமைப்படும் அளவு அழகும், வசீகரமும் பணமும் படைத்த இளைஞனாக வரும்போதும் சரி, அவலட்சணமாக எந்நேரமும் முகமூடியணிந்தவனாக வரும்போது சரி நடிப்பில் அசத்துகிறார். அழகான வாலிபனாக வந்த போது இல்லாத தயக்கமும், அங்க அசைவுகளும் (அதாங்க பாடி லாங்குவேஜ்) என்று நன்றாக நடித்திருக்கிறார். கொஞ்சம் வல்நரபிளாக தெரியவேண்டிய பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறான் நொரீகா. என்னால் டாம் குரூஸை அப்படி கற்பனை செய்ய முடியவில்லை.

அடுத்து ஹீரோயினாக வரும் பெனோலோபே Cruz. இவர் நடித்த சில ஆங்கிலப்படங்களைப் பார்த்து என்னப்பா அருமையா நடிப்பாரு அது இதுன்னு சொன்னீங்களே. நடிப்புன்னு ஒரு விஷயமே இவங்களுக்கு தெரியாது போல இருக்கேன்னு நினைச்சிருக்கேன். இந்தப்படம் பார்த்த பிறகு, ஆங்கிலப் படத்தில் சில சமயங்களில் மரக்கட்டை போல வந்து போவது, இவரது ஆங்கில அறிவு குறைவால் இருக்கலாம் என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன். படத்தின் ஆரம்பக்கட்டத்தில் செசாருடன் Flirt செய்யுபோதும், பிறகு செசார் மருத்துவரிடம் பேசும்போது வந்து போகும் பலதரப்பட்ட சூழ்நிலைகளிலும் அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது. அதே போல தாழ்வு மனப்பான்மையுடைய நண்பனாக வந்து போகிறவரும் தன் பாத்திரம் உணர்ந்து செயல் பட்டிருக்கிறார். சிற்சில இடங்களில் வில்லியாகவும், சில இடங்களில் நம் அனுதாபத்தை பெறுபவருமாக வரும் நூரியா பாத்திரத்தில் நடித்த ‘நஜ்வா நிம்ரி’யும் நினைவில் நிற்கிறார். இதைப்போல நாம் கவனிக்கும் இன்னொரு நபர் அந்த மனநோய் மருத்துவர்.

இயக்குநருக்கு இது இரண்டாவது படமென்றே சொல்ல முடியாது. அத்தனை அருமையாக திரைக்கதையை அமைத்திருக்கிறார். வளைந்து நெளிந்து செல்லும் திரைக்கதை கொஞ்சம் மூச்சை முட்டினாலும் அருமையாக இருக்கிறது. சட்டுபுட்டுன்னு சொல்லி முடிப்பானு சில பேர் அலுத்துக்கலாம். அப்படிப்பட்ட திரைக்கதையமைப்பு. இயக்குநர் தன்னுடைய கதாபாத்திரங்களுடன் சில நிமிடங்களை செலவழித்த பிறகே கதையை நகர்த்துகிறார். ஆனால் கடைசி வரை நாம் எதிர்பாராத வகையில் பற்பல திருப்பங்கள். ஆமாம்! கடைசிக்காட்சிவரை!!

இந்தளவு அருமையான ஒரிஜினலைப்பார்த்துட்டு எந்த முட்டாளாவது, டூப்ளிகேட்டை அதுவும் வேறு ஒரு இயக்குநர் வண்ணத்தில் உருவான டூப்ளிகேட்டை பார்ப்பானா? அதான் நான் வனிலா ஸ்கையை பார்க்கலை. இன்னிக்கு வரைக்கும் பார்க்கணும்னு தோணலை. டாம் குரூஸை பிடிக்காதென்பது இரண்டாம் பட்சம். ஏனென்றால் குரூஸ் நடித்த சில படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் நண்பர்களே, இந்த ஸ்பானிஷ் மொழி படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்று சொல்லுபவர்கள், வனிலா ஸ்கையை பாருங்கள். பார்த்து விட்டு விலாவாரியாக அலசலாம். பரபரப்பா பேசப்படுகிற ‘மாஜிகல் ரியலிசம்’ டெக்னிக் இந்தப்படத்துல இருக்குன்னு நினைக்கிறேன். இருக்கா இல்லையான்னுட்டு படம் பார்க்க முடிந்தால் (ஆங்கிலத்திலோ, ஸ்பானிஷிலோ) பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

நண்பர்களே, நீங்களும் என்னைப்போல புதிர்கள் நிறைந்த படத்தை நீங்களாகவே பார்த்து புரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் என்றால் இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். :)

abrelos.gif

இவ்வளவு நேரம் என்னுடைய அறுவையை தாங்கிக்கொண்டு படிக்கும் நண்பர்களுக்கு.

மனநோய் மருத்துவரிடம் என்ன நடந்தது என்று செசார் சொல்ல ஆரம்பிக்கிறான். மருத்துவருக்கும் நமக்கும் பல கேள்விகள் எழுகின்றன. பிளாஸ்டிக் சிகிச்சை செய்து கொண்டதாக சொல்லும் செசார் ஏன் முகமூடியை கழற்ற மறுக்கிறான், இறந்து விட்டதாக அனைவரும் (நாமும்) கருதும் நூரியா எப்படி உயிருடன் இருக்கிறாள், சோபியா ஏன் சில சமயங்களில் அன்பு மழையும், சில சமயங்களில் அமில மழையும் பொழிகிறாள், சோபியாவும் அவளின் முதல் நண்பனுமான பெலாயோவிற்கு நடுவில் அப்படி என்ன உறவுதான் இருக்கிறது என்று பலப்பல கேள்விகள்.

செசார் பொய் சொல்லுகிறான் என்று மருத்துவரும் நாமும் நினைக்கிறோம். ஆமாவா, இல்லையா என்று படம் பார்த்து (open your eyes OR Vanilla Sky) பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மீதிப்பகுதி. திரில்லரோ, காதலோ எதையெடுத்தாலும் நான் முதலில் கடைசிப்பக்கத்தை படித்து விட்டுத்தான் மீதியெல்லாம் படிப்பேன்/பார்ப்பேன் என்று சொல்லும் நண்பர்களுக்காக.

மிகவும் குழப்பமான ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் அமெனபார். படத்தின் ஆரம்பத்தில் டீவியில் வரும் ஒரு நிகழ்ச்சிதான் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்க்க உதவுகிறது. இதில் என்ன சுவாரசியமென்றால், செசாருக்கும் முடிச்சு அப்போதுதான் அவிழ்கிறது என்பதுதான். மருத்துவரும் செசாரும் படிப்படியாக ஒருவர் மேல் மற்றவர் நம்பிக்கை வரும் அளவு நெருக்கமாகிறார்கள். தனியறையில் வைக்கப்பட்டிருந்த செசார், மற்ற மனநோயாளி கைதிகளுடன் நடமாட அனுமதிக்கப்படுகிறான். அப்போது அவன், அவன் வாழ்க்கையில் அவ்வப்போது முக்கிய தருணங்களில் வந்து போகும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி/விளம்பரத்தை பார்க்கிறான். அதிலிருந்து ஒவ்வொன்றாக முடிச்சு அவிழ்கிறது.

இந்தப்படத்தை ஒரு தடவை மட்டும் பார்த்து புரிந்து கொள்ள முடியாது. ஆனால் இரண்டாம் முறை பார்ப்பதும் எவ்வளவு தூரம் உதவும் என்று தெரியவில்லை. அமெனபாருக்கு எப்படி இந்த பொறி கிடைத்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன். [update: Alejandro Amenabar imagined the script after having horrible nightmares when he was ill with the flu.] கதை சுலபம்தான், ஆனால் அதை அமெனபார் திரைக்கதையாக்கிய விதம் அருமையாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

விஷயம் என்னவென்றால் பெரும்பணக்காரனாகிய செசார், இறந்தவர்களின் உடலை அவர்கள் மீண்டும் உயிர்ப்பதற்கு வசதியாக பதனப்படுத்தி வைக்கும் கம்பனியின் விளம்பரத்தை (infomersial மாதிரி) கண்டிருக்கிறான். அவர்களிடம் சென்று பணம் செலுத்தி கிளையண்ட் ஆகியிருக்கிறான். திடீரென்று நொரீகாவின் காரில் அகப்பட்டு அவள் இறந்து போக இவன் அவலட்சணமாகி, அந்த அவலட்சணம், எத்தனை ஆப்பரேஷன் செய்தும் முற்றிலும் சரியாக வராததால் ஒரு நாள் அளவிற்கு அதிகமாக மாத்திரைகளை உண்டு தற்கொலை செய்து கொள்கிறான். இவன் பணம் கட்டிய கம்பனியினர், இவனே மறுபடியும் உயிர்த்து வரும்போது, தன் வாழ்வில் யார் யார் இருக்கலேமென்று முடிவு செய்யலாமென்று சொல்லி இருக்கிறது. அப்படி வந்தவர்கள்தான் அவனும் நாமும் இதுவரை கண்ட மனிதர்கள்.

ஆனால்………….

இது புது தொழில்நுட்பமாகையால் சில எதிர்பாராத தவறுகள் நடந்து விட்டதாக கம்பனியின் பிரதிநிதி சொல்லுகிறார். அது என்னவென்றால் சில சமயம் சோபியா நொரீகாவாகவும், நொரீகா சோபியாவாகவும் செசார் கண்ணுக்கு தெரிவதுதான்.

ஆகையால், கம்பனியின் பிரதிநிதி, செசாரை அக்கம்பனி மாடிக்கு அழைத்து சென்று அவன் வாழ்வில் இது வரை வந்த சோபியா, நொரீகா, பெலாயோ ஆகிய மூவரும் சிலை போல நிற்க. (ஆனால் சோபியாவை அணைத்து மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறான் செசார். :) ). மனநோய் மருத்துவர் வேண்டாம் வேண்டாம் என்று கதற அந்தக்கட்டடத்திலிருந்து கீழே குதிக்கிறான்.

அடுத்த ஷாட். படத்தின் முதல் காட்சியாக நாம் கண்ட செசாரின் படுக்கை அறையும், இன்னமும் தூங்கும் செசாரும், அவனை எழுப்பும் பேசும் அலாரமும்தான். அந்த அலாரக்கடிகாரத்திலிருந்து நாமும் செசாரும் கேட்பது, கேட்டுக்கொண்டிருப்பது (கடைசிக்காட்சியில்) Abre Los Ojos - Open Your Eyes - உன் கண்களைத் திற.

படம் முடிந்த பிறகு எனக்குத் தோன்றியது இதுதான்

ஹ்ம்ம்ம்ம்….. கண்களை இவ்வளவு நேரமும் திறந்திருந்தேனா?!

Tamil, Thamiz, தமிழ், திரைப்படம், வலைப்பதிவு