February 19, 2007

Zhou Yu’s Train (2002)

zhouyustrain.jpg

வாழ்க்கையில் நாம் கேட்ட, பார்த்த, படித்த, அனுபவித்தவற்றில் எல்லாவற்றையும் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை அல்லவா. ஆனாலும், அப்படிப் புரிந்துகொள்ளமுடியாதவற்றில் சிலதை இரசிக்கக் கற்றுக்கொள்கிறோமில்லையா. சமயங்களில் எல்லாவற்றையும் அறுத்துறுத்துத் தெரிந்துகொள்ளத் தேவையில்லை. சிலது புரியாமற்போவதே சுகம் என்றும் எடுத்துக்கொள்கிறோமில்லையா? இந்தப் படத்தையும் அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

அழகழகான சீனத்துப் பீங்கான் பொருட்களை உருவாக்கும் கலை வாய்த்த Zhou Yu. பீங்கான் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் இவள், வாரமிருமுறை ரயிலில் அவளுடைய காதலனைச் சந்திக்கச் செல்கிறாள். அவன், Chen Qing. ஒரு கவிஞன். முன்பே கண்டிருந்தாலும் நடனமொன்றில் உற்சாகமாகப் பொழுதைப்போக்கிக்கொண்டிருந்த Zhou Yuவிடம் ஒரு காதற்கவிதையைக் கொடுத்துத் தன்வசப்படுத்திக்கொண்டவன். அவளை ஒரு ஏரிக்கு ஒப்புமைப்படுத்தி எழுதிய அக்கவிதை ஒரு பத்திரிகையிலும் பிரசுரமானது Zhou Yuவை அவனிடம் நாட்டமேற்படக் காரணமாகிப் போனது. Chen Qingஐ பிரபலமான கவிஞனாக்கப் போவதாக அவனிடமே அடிக்கடி சொல்லிக்கொண்டு அதற்காகச் சில முயற்சிகளையும் அவள் எடுத்தாள். வேறொரு நகரத்தில், புத்தகக்கடையா, நூலகமா என்று குழம்ப வைக்கும் புத்தகங்கள் நிறைந்த அறையில் இருந்த Chen Qingஇற்கு Zhou Yuவின் ஆளுமை கொஞ்சம் தயங்கவைத்தாலும் அவர்களுடைய உறவு அந்த அறைக்குள்ளே வளர்ந்துவந்தது.

zhouyustrain1.jpg

Chen Qingஐச் சந்திப்பதற்காக வாரமிருமுறை ரயிலில் செல்லும்போதுதான் Zhang Qiang அவளைச் சந்திக்கிறான். Zhou Yuவிடம் ஈர்ப்பு ஏற்படுவதை அவளிடமே சொல்கிறான். கூச்ச சுபாவமுடைய கவிஞனைக் காதலிப்பவளுக்கு அடிதடியாக வெளிப்படையான பேச்சும் செயலும் கொண்ட இந்த மிருக வைத்தியனைப் பிடிக்கவில்லை. அல்லது அப்போது அப்படித்தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள். ஏனென்றால், தொடரும் ரயில் பயணங்களில் அடிக்கடி சந்தித்துக்கொள்பவர்கள் ஒரு நாள் அவர்கள் உடலுறவு கொள்கிறார்கள். Zhang Qiangஇன் தங்குமிடத்திற்கும் அடிக்கடி செல்பவள், அவனுடைய நண்பர்களுக்கும் விருந்து சமைத்துப்போடுகிறாள்.

இங்கே, இப்படி நடக்கிறது என்றால், மறுபக்கம் நிலமை அவ்வளவு சுமூகமாகவில்லை. Zhou Yu, கவிஞனாக, அவனைப்பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளும் அவளது இன்னபிற முயற்சிகளும் Chen Qingஐ மூச்சுமுட்ட வைக்கின்றன. திபேத்திற்கு பள்ளிக்கூட வாத்தியாராக வருமாறு அழைக்கப்பட்டிருப்பதையும் Zhou Yuவிடம் சொல்கிறான்.

படத்தில் காட்சிகள் Non-linearஆக எடுக்கப்பட்டிருப்பதாலும் சில காட்சிகள் திரும்பக் காட்டப்படுவதாலும் சில சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தனவா அல்லது ஒரே சமயத்தில் நடந்தவையா என்ற குழப்பம் வருகிறது.

zhou_tu_train2.jpg

ரயிலில் சந்தித்து உறவை ஏற்படுத்திக்கொண்ட இரண்டாவது காதலனுக்கு, கவிஞன் அவளுடைய வாழ்வில் இருப்பது தெரிந்திருப்பதையும், கவிஞனைப்பற்றி வேறு சில விதயங்களும் அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பதையும் இங்கே சொல்லவேண்டும்.

இந்த முக்கோணக் காதல் குழப்பம் போதாதென்று Gong Li, குட்டைத்தலைமுடியுடன் கொஞ்சம் வயதான தோற்றத்தில் Xiuவாகவும் வருகிறாள். படத்தின் கதைசொல்லி இந்த Xiuதான். இந்த Xiuதான் முந்நாளைய Zhou Yuவா என்பதுவும் ஒரு குழப்பம். படத்தின் முடிவும் பார்ப்பவர்கள் அவரவர் எண்ணவோட்டத்திற்கேற்ப முடிவை ஊகிக்கும்படி அமைந்திருக்கிறது.

zhou_yu_train3.jpg

இத்தனை இருந்தும் படத்தைக் கொண்டுசெல்வது Gong Liயும் படத்தின் புகைப்படப்பிடிப்பாளருந்தான். தோற்றத்தில் மென்மையானவளாகவும் மனவுறுதியில் மிகவும் சிலாகிக்கக்கூடியவளாகவும் Zhou Yuவை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். கூச்ச சுபாவமுடைய கவிஞராக வரும் Tony Leung Ka Faiக்கும் இது நல்லதொரு வாய்ப்பே. இதற்கு முன்பு பார்த்திருந்த ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு வியட்நாமில் வசிக்கும் சீன இளைஞனாக வந்திருந்த ‘The Lover’இலிருந்து வித்தியாசமான பாத்திரம். என்ன இரண்டு படங்களிலும் இவருக்கு காதற்காட்சிகளுக்கு வாய்ப்பு அதிகம் கிடைத்திருக்கிறது. ‘L’amant அ. The Lover’, ‘Hiroshima Mon Amour’ கதை/படக்கதை எழுதிய Marguerite Duras-இன் சுயசரிதையை ஒட்டி எடுத்த படம். வியட்நாமில் இருந்தபோது நடந்த அவரது இளவயது வாழ்க்கையையொட்டி எடுக்கப்பட்ட படம்.

Gong Li-இற்காகவும் படக்காட்சியமைப்புக்காகவுமாவது பார்க்கலாம். You won’t be disappointed.

August 10, 2003

Raise the Red Lanturn (1991)

Yimou Zhang இயக்கத்தில் Li Gong(Songlian), Caifei He, Jingwu Ma, Cuifen Cao ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

Lantern.jpg

1920களின் சீனாதான் கதைக்களம். 19 வயது நிறைந்த சூலிங்யானின் தந்தை இறந்துபோக, அவள் தந்தையின் மனைவி அவளுடைய விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கிறார். திருமணமா? இல்லை ஒரு ஐம்பது வயது பணக்காரனுக்கு மூன்றாவது வைப்பாட்டியாகிறாள். ஏறக்குறைய விற்கப்படுகிறாள் என்று சொல்லலாம். தந்தை இறப்பதற்குமுன் ஆறுமாதம் பல்கலைக்கழகத்தில் படித்த சூலிங்யான், தன்னால் வாழ்க்கைப்பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறாள். கணவன் வீட்டுக்கு வந்து சேரும் சூலிங்யானுக்கு வீட்டின் தலைமை வேலையாளால், அந்த வீட்டின் நடைமுறைகள் பின்வருமாறு சொல்லப்படுகின்றன. அவளை யாரும் இனி சூலிங்யான் என்று கூப்பிடமாட்டார்கள் என்றும், குடும்பத்தலைவரை அனைவரும் ‘மாஸ்டர்’ என்று அழைப்பார்கள். மனைவிமார் முறையே ‘முதலாவது’, ‘இரண்டாம்’, ‘மூன்றாம்’ மற்றும் ‘நான்காம் சகோதரி’ என்று அனைவராலும் அழைக்கப்படுவார்கள். நான்கு பேருக்கும் அந்த பரந்த இடத்தில் தனித்தனி வீடுகள் கொடுக்கப்பட்டு, பிரத்தியேக பணிப்பெண்ணும் நியமிக்கப்படும். குடும்பத்தலைவருக்கு, அவர் எந்த வீடு போகிறாரோ, அந்த வீடு முழுக்க அன்றைய தினம் சிவப்பு இலாந்தர் விளக்கு எரியவேண்டும் என்ற வினோதமான ரசனை. சாயங்கால வேளையில் மனைவிமார் அனைவரும் அவரவர் வீட்டு வாசலில் நிற்க வேலையாட்கள் வந்து, குடும்பத்தலைவன் எந்த வீட்டிற்கு போகப்போகிறாரோ, அங்கு விளக்கேற்றுவார்கள். மற்றவர்கள் கலைந்து செல்வார்கள்.

முதலாவது மனைவிக்கு சூலிங்யானை விட வயதில் மூத்த மகன் இருக்கிறான். வயதான அவர், ஏனைய மனைவிமாரை பெரிதும் கண்டுகொள்வதில்லை. தானுண்டு தன்வேலையுண்டு என்று இருந்துவிடுகிறார். புதிதாக வரும் சூலிங்யான், முதற்காரியமாக ஏனைய மனைவிமாரை சந்திக்கிறாள். இரண்டாம் மனைவியின் அன்பான உபசரிப்பில் நெகிழ்கிறாள். இரண்டாவது மனைவி மிகவும் நல்லவள் என்று எண்ணிக்கொள்கிறாள். வந்த அன்று மாலை சூலிங்யானின் கால்களுக்கு மசாஜ் கொடுக்கிறார்கள். குடும்பத்தலைவன் எந்த வீட்டிற்கு போக நினைக்கிறாரோ, அந்த வீட்டுத்தலைவிக்கு மசாஜ் கொடுப்பது குடும்ப வழக்கம் என்று அறிகிறாள் சூலிங்யான். அதுபோலவே அடுத்த நாள் உணவு மெனு தயாரிக்கும் உரிமையும் கிடைக்கும் என்றும் தெரிந்து கொள்கிறாள். முதல்நாளே உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லி குடும்பத்தலைவனை தன் வீட்டிற்கு அழைத்த சீன ஒபேரா பாடகியான மூன்றாவது மனைவி, மிகவும் திமிர் பிடித்தவள் என்று அறிகிறாள்.

ஆரம்பத்தில் மற்ற மனைவிமார் நடத்தையை புன்சிரிப்புடன் கவனித்த சூலிங்யான். அந்த இடத்தில் மரியாதை கிடைக்கவேண்டுமானால், தானும் அவ்வாறே செய்யவேண்டும் என்று புரிந்துகொள்கிறாள். முதலில் மூன்றாம் மனைவியை தன் விரோதியாகவும், இரண்டாம் மனைவியை தோழியாகவும் கருதிய சூலிங்யான், காலப்போக்கில் அந்த வீட்டில் யாரும் யாருக்கும் தோழி கிடையாது என்பதை புரிந்து கொள்கிறாள். இதற்கிடையில் சூலிங்யானின் பணிப்பெண்ணால் பல இடைஞ்சல்கள் வருகின்றன. பணிப்பெண்ணிற்கும் தன் கணவருக்கும் இருக்கும் உறவை தெரிந்த சூலிங்யான், அந்த வீட்டில் தனக்கு மரியாதை கிடைக்கவேண்டுமானால், தான் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை புரிந்து கொள்கிறாள். பணிப்பெண் கூறிய வார்த்தையன்றால் கோபமுற்ற சூலிங்யான் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லுகிறாள். சில மாதங்களுக்கு விசேட கவனிப்பும் நடக்கிறது அவளுக்கு. ஒரு நாள் திடீரென்று மருத்துவர் வரவழைக்கப்பட்டபோது, தான் சொன்ன குட்டு வெளிக்கிட்டுவிட்டதென்று புரிந்துகொண்ட சூலிங்யான், யார் குட்டை வெளிப்படுத்தினார்கள் என்று ஆராய்கிறாள். அப்போதுதான் தான் நினைத்தபடி, இரண்டாம் மனைவி நல்லவளில்லை என்பது தெரியவருகிறது. அவளையும் பணிப்பெண்ணையும் பழி வாங்குகிறாள். பணிப்பெண் மன்னிப்பு கேட்க மறுத்து இரவு முழுவதும் பனியில் முட்டிபோட்டு மருத்துவமனையில் இறந்துபோகிறாள். இதற்குமுன் சூலிங்யான் பொய் சொன்னபடியால் அவளுடைய வீட்டு சிவப்பு இலாந்தர் விளக்குகளுக்கு கருப்பு உடைபோடப்படுகிறது.

வந்தபுதிதில், வீட்டை நன்றாக சுற்றிப்பார்த்த சூலிங்யான், வீட்டில் உச்சத்தில் பூட்டுப்போட்டு தொங்கும் தனியறை பற்றி விசாரிக்கிறாள். குடும்ப வழக்கத்திற்கு எதிராக நடக்கும் பெண்கள், கணவர்களின் நற்பெயருக்கும் குடும்பத்திற்கும் கெட்டபெயர் வாங்கித்தந்தால்; அங்கேதான் சித்திரவதை நடப்பதாக சொல்லுகிறார்கள்.

நாட்கள் செல்லுகின்றன. சூலிங்யான் அவளுடைய இருபதாவது பிறந்தநாளை தனியே கொண்டாடுகிறாள். தனியே நிறைய குடித்துவிட்டு மூன்றாம் மனைவிக்கும் குடும்ப டாக்டருக்கும் இடையில் இருக்கும் உறவை உளறிவிடுகிறாள். மறுநாள் நடந்ததை அறிந்துகொள்ளும் சூலிங்யானிடம், இரண்டாம் மனைவி, இவள் சொன்னதைக்கேட்டு தான் ஆட்களை அனுப்பி மூன்றாம் மனைவியைக் கையும் களவுமாக பிடித்து கொண்டு வந்திருப்பதாக சொல்லுகிறாள். ஊர் திரும்பிய குடும்பத்தலைவன் கட்டளைப்படி பிடிபட்ட மூன்றாம் மனைவியை வீட்டின் உச்சியில் இருக்கும் தனியறைக்கு கொண்டுபோகிறார்கள். பனிபெய்யும் அவ்வேளையில் சூலிங்யான் அவர்களைப் பின்தொடருகிறாள். வேலையாட்கள் கைப்பிடியில் இருந்து திமிறிக்கொண்டிருக்கும் மூன்றாம் மனைவியை அவர்கள் அந்த அறையில் பூட்டுகிறார்கள். சிறிதுநேரத்தில் யாரும் அங்கு இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்ட சூலிங்யான் அறைக்குள் சென்று அங்கிருக்கும் கோரத்தைப்பார்த்து அலறுகிறாள். அந்தப்பெண் கோரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம். ஏனெனில் முதலில் அங்கே போன வேலையாட்கள் உடனே வெளியே வரவில்லை. முன்பு பார்த்தபோது அந்த அறையில் இரண்டு கைவிலங்குகள் தொங்கின. பெண்கள் அணியும் காலணியும் கிடந்தது. எல்லாம் தூசுமயமாக இருந்தது. இதைப்பற்றி விசாரித்த சூலிங்யான், வேறு யாரிடமும் அதைப்பற்றி பேசவேண்டாம் அந்த இடத்தில் பேய் இருக்கிறது என்று மூத்த பணிப்பெண்ணால் எச்சரிக்கப்படுகிறாள். இது பழைய கதை. அலறிக்கொண்டே இருந்த சூலிங்யான் வேலையாட்களால் கீழே கொண்டு வரப்பட்டு மற்ற மனைவியராலும் பணியாட்களாலும் கவனிக்கப்பட்டாலும், அவளால் தான் பார்த்த கோரக்காட்சியை மறக்கவே முடியவில்லை. காட்டுமிராண்டிகள் என்று திட்டிக்கொண்டே இருக்கிறாள். அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொன்னவாறே குடும்பத்தலைவன் அங்கிருந்து வெளியேறுகிறான். வீட்டில் இருக்கும் மற்றவர்களும் அதையே சொல்லுகிறார்கள். சூலிங்யான் தனியே விடப்படுகிறாள். அவள் அங்கு வந்தபோது அணிந்திருந்த மேற்கத்தைய உடைகளை அணிந்து கொள்கிறாள். வீட்டுக்குள்ளேயே சுற்றிசுற்றி வரும் சூலிங்யானை யாரும் கண்டுகொள்வதாக இல்லை.
ஒரு நாள் இவள் வந்த போது பணியாள் செய்த அறிவிப்பு மீண்டும் கேட்கிறது - ஐந்தாவது மனைவிக்காக.

படத்தில் ஏறக்குறைய அனைத்துக்காட்சிகளிலும் வருவது சூலிங்யான் (Li Gong). Li Gongஉம் Yimou Zhangஉம் பல படங்களில் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள். அவையும் சுவாரசியமானவைதான். இந்தக்கதையில் பிரதானமான பாத்திரம் குடும்பத்தலைவனாக (Jigwa Ma) இருந்தாலும், படத்தில் அந்தக்கதாபாத்திரத்தை பக்கத்தில் காட்டவில்லை. காட்டியபோதெல்லாம், சிலவினாடிகளே பார்க்கமுடிகிறது. அனைத்து அதிகாரமும் அந்தப்பாத்திரத்திடம் இருந்தாலும், மனைவிமாரிடையே நடக்கும் அதிகாரப்போர், பிழைக்கும் வழிக்கான சூழ்ச்சிகள் என்பதால் இவர்களே படம் முழுக்க காட்டப்படுகிறார்கள். கூடவே இவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அறிந்த வேலையாட்கள். இரண்டாம் மனைவியாக நடித்த Cuinfen Cao, மூன்றாம் மனைவியாக நடித்த Caifei He, சூலிங்யானின் பணிப்பெண்ணாக நடித்தவரும் நன்றாக நடித்திருந்தார்கள். படத்தை தன் தோள்களில் சுமப்பது சூலிங்யானாக நடித்த லி கொங்தான். அருமையாக நடித்திருந்தார். காமெரா இவர்கள் அனைவரும் அணிந்திருந்த உடைகளின் நிறங்களை பிரமாதமாக வெளிப்படுத்தியது.

raisetheredlantern.jpg

இந்தப்படத்தை இயக்கிய Yimou Zhang உலகெங்கும் நடந்த திரைப்பட விழாக்களில் விருதுகள் வாங்கி இருக்கிறார். ஆனால் சீன அரசுக்கும் இவருக்குமான உறவு சுமூகமானது அல்ல. இவரைப்பற்றி இன்னொரு நாள் விலாவாரியாக பேசலாம் என்று இருக்கிறேன். அவ்வளவு விஷயம் இருக்கிறது. அற்புதமான படங்கள் சிலவற்றை இயக்கி இருக்கிறார். Raise the Red Lanturn படம் பார்த்து விட்டு பல நாட்களுக்கு அதையே நினைத்துக்கொண்டிருந்தேன். வெகு சில இயக்குநர்களுக்குத்தான் இந்த திறமை இருக்கிறது என்று நினைக்கிறேன்.