பெஷ்கெம்பிர் Beshkempir [The Adopted Son] (1998)

நம்மில் பலருக்கு உங்கள் வாழ்வின் இனிமையான பொழுதுகள் எவை என்று கேட்டவுடனே நினைவுக்கு வருவது நமது சிறுவயது அனுபவங்களாக இருக்கலாம். முக்கியமாக கிராமத்துச் சிறுவர்களுக்கு. கேட்க ஆளில்லாமல் காடுமேடெல்லாம் அலைந்துவிட்டு சாப்பாட்டு வேளைக்கு வீட்டில் இருக்கும் விடுமுறை நாட்களை பலரும் பலவிதமாக அனுபவித்திருக்கலாம். புளியங்காய் அடிப்பது, தேன் எடுப்பது, வண்ணாத்திப்பூச்சி, தட்டான் பிடிப்பதிலிருந்து திருட்டுத்தனமாக கோழிமுட்டை எடுப்பது, ஏன் கோழி பிடிப்பதுவரைகூடச் செய்திருக்கலாம்.
அப்படிப்பட்ட ஒரு சிறுவர்கூட்டத்தைத்தான் கர்க்கிஸ்தான் படமான பெஷ்கெம்பிரில் பார்க்கிறோம். களிமண்ணிலிருந்து கற்கள் செய்யுமிடத்தில் களிமண்ணைத் திருடி உடலெங்கும் பூசிக்கொண்டு தேனெடுக்கச் சென்று தேன்கூட்டைக்கலைத்துவிட்டு ஓடித்தப்புவது, கோழி முட்டைகளைத் திருடுவது, ஒளிந்திருந்து பெண்களைப்பார்ப்பது என்று அந்தப்பருவத்துக்குரிய சேட்டைகளைச் செய்தபடி உற்சாகமாகத் திரிகிறது அந்த நண்பர் பட்டாளம். எல்லாப் பட்டாளங்களையும்போலவே இங்கேயும் யார் முதன்மையாக இருப்பது போன்ற, குழுச்சண்டைகள் லேசாக வந்து அப்படியே பறந்தும் போகிறது. இதற்கிடையில், கூட விளையாடும் பெண்ணின் கவனத்தைப் பெறுவதற்கு நடக்கும் சண்டையில் பெஷ்கெம்பிரை அவனது பெற்றோர் தத்தெடுத்ததுபற்றிய விவரம் வெளியே சிந்திவிடுகிறது.
கர்கிஸ்தானில், நம்மூரில் நடப்பதுபோலவே நிறையக் குழந்தைகள் பெற்றவர்கள், தமது ஆண்குழந்தைகளில் ஒன்றை குழந்தைகள் இல்லாத பெற்றோருக்குக் கொடுக்கிறார்கள். ஆண்குழந்தைகளுக்கான மவுசு, அங்கேயும் இருப்பது கவனிக்கவேண்டிய ஒரு விதயம். தான் தத்தெடுக்கப்பட்டவன் என்ற செய்தி, பெஷ்கெம்பிரை வருத்தப்பட வைக்கிறது. அது பற்றி யாரிடமும் பேசாதமல் இருக்கிறான். ஆனால், அவனைக் கண்டிப்புடன் நடாத்தும் தகப்பனின் போக்கு அவனை மிகவும் வருத்துகிறது.
ஒரு நாள், திரைப்படம் போக அனுமதி கேட்கும் பெஷ்கெம்பிரை அவனது அப்பாவிடம் கேட்கச் சொல்கிறார் பாட்டி. ஆனால், அவனை ஏறெடுத்தும் பார்க்காத தகப்பனைப் பார்த்தபிறகு தானே பணம் கொடுத்து அனுப்புகிறார். பெஷ்கெம்பிர் பார்க்கப்போகும் படம், திரைப்படக் கொட்டாயொன்றில் ஓடும் ஹிந்தித் திரைப்படம். உட்கார இடமில்லாமல் நின்றுகொண்டு பார்க்கும் கர்க்கிஸ்தான் மக்களை வண்ணமயமான ஹிந்தி திரைப்பட ஆடல் பாடல் காட்சிகள் வெகுவாக ஈர்க்கின்றன. படம் முழுவதும், பெரும்பாலும் கறுப்பு-வெள்ளையில் வருவது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் பெஷ்கெம்பர் சிறுகுழந்தையாகத் தத்துக்கொடுக்கப்படும் காட்சிகள், பெண்ணொருத்தி வயல்வெளியில் நடந்து வரும் காட்சி, வீட்டிற்குள் வந்து அகப்படும் பறவை, மற்றும் ஹிந்தித் திரைப்பட ஆடல்-பாடற்காட்சிகள் போன்றவனை மட்டும் வண்ணத்தில் காட்டப்படுகின்றன. இது, வண்ணத்தில் காட்டப்படும் காட்சிகளின் முக்கியத்துவத்தைக் கூட்டுவதை விட, கறுப்பு-வெள்ளையில் காட்டப்படும் காட்சிகளை மேலும் இரசிக்க வைக்கிறது. ஹிந்தித் திரைப்பட ஆடல்-பாடல் காட்சியைவிட, படம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் முகபாவம் வெகுவாக இரசிக்கக்கூடியமாதிரி இருக்கிறது.
நம்மூர்க்கிராமங்களை ஒத்த வாழ்க்கைமுறையை படத்தில் காட்டப்படும் கர்க்கிஸ்தான் கிராமமும் கொண்டிருக்கிறது. வீட்டிற்கு வரும் மாட்டின் கன்றுக்குட்டியைக் கொஞ்ச நேரம் பால்குடிக்க விட்டுப்பிறகு பால் கறக்கும் காட்சி, அப்படியே நம்மூரை நினைவுபடுத்தும் காட்சி. ஊர் ஞாபகம் துள்ளிக்குதித்தோடி வந்தது உண்மை!
நம்மூரைப்போலவே சிறுவயதுக்காரர்கள், அவர்களுடைய வயதில் பெரிய நண்பர்களுக்காக காதல்தூது போவது, காதலியை அழைத்து வர உதவி செய்வது போன்ற விதயங்களும் நடக்கின்றன. பெஷ்கெம்பிரும் அவனுடைய நண்பனின் காதலியை அழைத்து வருகிறான். சைக்கிளின் முன்பாரில் அமர மறுக்கும் அவள், பின்னால் அமர்ந்து போகிறாள். அடுத்த முறை, காதலியைக் காண வருமுன் கவனமாக அந்தப் பின்சீட்டைக் கழற்றி வைத்துவிட்டு வருகிறான். நம்மூரில் முன்பாரில் பெண்களை அமர்த்திச் செல்வதுகுறித்து அந்த வயதுக்காரர்கள் கிசுகிசுத்ததைக் கேட்ட நினைவு வந்தது.
தத்தெடுக்கப்பட்டவன் என்பதறிந்தபிறகு பெஷ்கெம்பிருக்கும் அவனுடைய உற்ற தோழனுக்கும் எங்கே பார்த்தாலும் சண்டை வருகிறது. இந்தச் சண்டைகளுக்கு, இவர்களின் வயதொத்த பெண்மீது இருவருக்கும் இருந்த ஈர்ப்பு முக்கிய காரணம். இந்தச் சண்டைகளினால், வீட்டிற்கு முறைப்பாடுகள் வருகின்றன. ஒருமுறை, நண்பனின் வீட்டில் வைத்தே அவனை அடித்துவிட்டதாக நண்பனுடைய அம்மா, நண்பனையும் இழுத்துவந்து கத்துகிறார். நண்பன், என்ன கட்டிய மனைவியா நீ அடிப்பதற்கு என்று அந்தப் பெண்மணி கேட்பதிலிருந்து, நம்மூர்க்காரர்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் இன்னொரு வெட்ககரமான ஒற்றுமையும் தெரியவந்தது. இந்தப் பிரச்சினைகளால் மனம்வெதும்பும் பெஷ்கெம்பிர் வீட்டைவிட்டு ஓடிப்போய் மீன்பிடிப்பவர்களோடு வேலை செய்கிறான்.
நோய்வாய்ப்படும் பாட்டி, பெஷ்கெம்பிரைப் பார்க்கவேண்டும் என்று சொல்லி விடத் தேடி வருபவர்கள் பெஷ்கெம்பிரைக் கண்டுபிடித்துக் கொண்டுசேர்ப்பதற்குள் அவள் இறந்துவிடுகிறார். ஊருக்கு வந்துசேரும் பெஷ்கெம்பிரிடம், அவன் தந்தை, குழந்தையில்லாததால் அவனைத் தத்தெடுத்ததாகவும், தனது மகன் போலவே கண்டிப்பாக இருக்க முயற்சித்ததாவும் கூறுகிறார். பாட்டி, பேரன்ந்தான் முன்றின்று தனது செத்தவீட்டை நடத்தவேண்டும் என்று சொல்லிவிட்டதால் அப்படியே நடக்கிறது. புதிய பொறுப்புகளுக்கு உள்ளாக்கப்படும் பெஷ்கெம்பிர், ஊர்வழக்கப்படி, யாரேனும் பாட்டிக்குக் கடன் கொடுக்குமதி இருந்தால் தரத்தேவையில்லை என்று சொல்கிறான். அதேவேளை, யாருக்காவது பாட்டி கடன் கொடுக்குமதி இருந்தால், அதைத்தான் பொறுப்பெடுத்துக்கொள்வதாக உறுதி அளிக்கிறான்.
அடுத்துவரும் நாட்களில், தன்னைவிடச் சிறிய நண்பனை அழைத்துப்போய் அவனுக்குப் பிடித்த பெண்ணை அழைத்துவரச் சொல்கிறான். இதற்காகச் சைக்கிளை, மற்றொரு நண்பனிடமிருந்து பெறும் பெஷ்கெம்பிர், அவனைப்போலவே சைக்கிளின் பின்சீட்டைக் கழற்றி வைக்கிறான்.
படத்தில் பெஷ்கெம்பிராக நடித்திருப்பது இயக்குநர் Aktan Abdykalykovஇன் மகன் Mirlan Abdykalykov. முன்னாள் சோவியத் யூனியனில் அங்கம் வகித்த கர்க்கிஸ்தான் சுதந்திரம் பெற்றபிறகு, அங்கிருந்து வெளியான முதற்படம் இது. 1998இல் வெளியான இந்தப் படம் இயக்குநர் Aktan Abdykalykovஇன் முதல் முழுநீளப்படம். கர்க்கிஸ்தானின் முன்னாள்-இன்னாள் அரசியல் இன்னபிற விதயங்களைக் காட்டாமல் சிறுபிராயத்து அனுபவங்களைச் சுவாரசியமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இது சரியா, பிழையா என்று நான் ஆராயவில்லை. சிறுபிராயத்து அனுபவங்களோடு அந்தப் பிராந்திய மக்களின் பழக்கவழக்கங்களையும் ஆங்காங்கே காட்டியிருக்கிறார். குழந்தையில்லாத பெற்றோர், அதிக குழந்தைகளோடு இருக்கும் பெற்றோரிடமிருந்து ஆண்குழந்தைகளைத் தத்தெடுப்பதும், குடும்பத்தில் பெண்கள் பெரும்பாலான வேலைகளைச் செய்வதும், எல்லாம் செய்தும் கணவனிடம் சித்திரவதைப்படும் பெண்கள் அங்கும் பெருவாரியாக இருப்பதுவும் படத்திலிருந்து நாம் புரிந்துகொள்ளக்கூடியவை.
மொத்தத்தில் சுவாரசியமான படம். குறைந்தபட்சம், சிறுபிராயத்து அனுபவங்களை மிகவும் எளிமையாக மனதில் நிற்கும்படி காட்டியதற்காகவாவது பார்க்கவேண்டும்.











A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (