August 21, 2003

Season Five (1997)

ரfபி பிட்ஸ் (Rafi Pitts) இயக்கத்தில் ரோயா நோனாஹாலி (Roya Nonahali), அலி சர்க்கானி (Ali Sarkhani) ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

season_five.jpgseason_five1.gif

இரானிய கிராமம் ஒன்றில் இரண்டு குடும்பங்கள் ஒருவரை மற்றவர் பகைத்துக்கொண்டு ஒருவரை மற்றவர் தாக்கிக்கொன்று வருகின்றனர். இந்த சண்டையால் அவதியுற்ற அந்த ஊர் மக்கள் கிராமத்தலைவரிடம் முறையிட அவரும் முன்னின்று இருகுடும்பத்திற்கு திருமண உறவேற்படுத்திக்கொடுக்கிறேன். ஜமால்வாண்டி குடும்பப்பெண்ணை கமால்வாண்டி குடும்ப ஆண் மணப்பதற்கு இருகுடும்பத்தாரும் சம்மதித்து திருமணம்வரை வந்துவிட்டனர். ஆனால் திருமண அரங்கில் ஊரே கூடியபிறகு, மணமகன் கராமத், இத்திருமணத்தினால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று சொல்லி வெளியேறுகிறான். மணப்பெண் ஒர் கணம் திகைத்து, பின் தானும் அவனை மணந்து பிறகு தொல்லை கொடுக்கலாம் என்ற முடிவோடு சம்மதித்ததாக கூறுகிறாள். திருமணம் தன்னெதிரிலேயே முறிந்ததைக் கண்ட கிராமத்தலைவருக்கு மாரடைப்பு வந்து அங்கேயே உயிர் பிரிகிறது.

மணமகன் ஊரைவிட்டே எங்கோ போய் விடுகிறான். மணமகளாக இருந்த மெஹர்பானு கிராமத்தில் எங்கு போனாலும் பரிகசிக்கப்பட்டாள், தனிமைப்படுத்தப்பட்டாள். தாய்தந்தை அற்ற அவளுக்கு இருக்கும் ஒரே துணை அவளது சகோதரனும், கூட இருக்கும் சில உறவினர்களுந்தான். ஆனால், தன்காலிலேயே நிற்கவேண்டிய நிற்பந்தம் அவளுக்கு. அதனால், அவளின் தாயார் விட்டுப்போயிருந்த நிலத்தை தானே பராமரித்து அதிலிருந்து வரும்பணத்தில் வாழ்ந்து வருகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய கோபம் அடங்கும் சமையத்தில் கராமத் ஊர் திரும்புகிறான். வந்தவன் சும்மா வரவில்லை. சிறு மினி பஸ்ஸை கிராமத்திலிருந்து பக்கத்தில் இருக்கும் நகரத்துக்கு மக்களை அழைத்து சென்று பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு வந்திருந்தான். கூடவே அவன் மினி பஸ் வாங்கிய நிறுவனபிரதிநிதியும். அந்த ஊர் மக்கள் அனைவரும், கமால்வாண்டி, ஜமால்வாண்டி இருகுடும்பத்தினரும் மினி பஸ்ஸை மிகவும் ஆச்சரியத்தோடு பார்த்து அதில் பயணமும் செய்தனர். முதல் நாள் தன் உறவினர் அனைவரையும் வண்டியில் இருந்து இறக்கிவிட்டுவிடுகிறாள் மெஹர்பானு. அதுவரை வண்டிலில் மக்களை நகரத்திற்கு கொண்டுபோய்க்கொண்டிருந்த சகோதரனுக்கும் வேலை இல்லாததால், தனியரு ஆளாக அவளது அம்மாவின் நிலத்தை பராமரிக்கிறாள். அவ்வப்போது அவளுடைய நினைவிடத்திற்கும் போய் புலம்புகிறாள். கமால்வாண்டி குடும்பத்துடனான பகையை தொடரும்படி அப்போது சிறுமியாக இருந்த என்னை ஏன் கேட்டாய். இறந்துபோன அண்ணனின் முகம்கூட எனக்கு ஞாபகம் இல்லை. உறவினர்களும் எனக்கு கொம்பு சீவி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். திருமணம் நின்று போய்விட்டதே, என்ன செய்யலாம். எனக்கு வயதாகிறதே என்று யாருக்கும் கவலை இருப்பதாக தெரியவில்லை என்று கவலைப்படுகிறாள். இப்படி இருக்கும்போது கிராமத்தில் அங்காங்கே சந்தித்துக்கொள்ளுகிறார்கள் கராமத்தும் மெஹர்பானுவும். ஊர்மக்களால் தன்னுடைய சகோதரன் கேவலப்படுத்தப்படுவது பொறுக்காத மெஹர்பானு, நிலத்தை விற்று கராமத்’துடைய மினி பஸ் போலவே அவளுடைய சகோதரனுக்கும் வாங்கிக்கொடுக்கிறாள். இப்போது இருவருக்குமிடையிலான போட்டியில் பயணக்கட்டணத்தை குறைப்பது, இலவச சலுகைகள் அளிப்பது, நகரத்துக்கு போய்வரும் வழியில் அடிபடுவது என்று போட்டியுடன் வாழ்க்கை நகருகிறது. ஊர்மக்களும் சுவாரசியமாக இச்சண்டையை பார்த்துக்கொண்டு வருகிறார்கள். பொழுதுபோக வேண்டுமல்லவா? ஒரு முறை நகரத்தில் இருந்து வரும்போது நடந்த சண்டையில் இரு வண்டிகளும் மோதிக்கொண்டதில் இரண்டுமே உருக்குலைந்து போயின. ஊர் மக்கள் இரண்டுவண்டியிலும் போகாமல், நடராஜா சர்வீஸில் போனார்கள். இப்படியே போகப்போக, மெஹர்பானுவும் கராமத்தும் தங்களையறியாமல் ஒருவரை ஒருவர் விரும்பத்தொடங்கினார்கள்.

ஒரு நாள் நகரத்திற்கு சென்று திரும்பும் வேளையில் கராமத்தின் வண்டி சக்கரம் தனியே கழண்டு ஓடத்தொடங்கியது. வாகனமும் தறிகெட்டு ஓடியது. கிராமத்தில் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர். இரவு முழுவதும் காத்திருந்தும் இரு வண்டிகளும் வரவில்லை. மறுநாள் ஒரு வண்டி மெதுவாக கிராமத்தை வந்து சேர்ந்தது. மெஹர்பானுவின் வண்டி அது. அவனிடம் போய் கராமத்தின் வண்டியை சகோதரன் கண்டானா என்று மெஹர்பானு கேட்கிறாள். இல்லையென்றும் தன்னுடைய வண்டியை நகரத்தில் சரிசெய்துவருவதற்கு நேரமாகி விட்டதால் தான் காலையில் வர நேர்ந்தது என்று அவன் கூறுகிறான். ஆனால், முதல்நாள் மாலையெ கராமத்தின் வண்டி நகரத்திலிருந்து கிளம்பியது என்று அவன் கூறினான். செய்வதறியாது திகைத்து நின்ற மக்களை கயிறு போன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு தன் வண்டியில் ஏறுமாறு சொல்லி கராமத்தையும் அவனது மினிபஸ்ஸையும் தேடிப்போகிறாள் மெஹர்பானு.

season_five2.jpg

ஏனைய ஈரானிய படங்கள் போல விருதுகளைக்குவிக்காவிட்டாலும், ஈரானில் பொதுமக்கள் மிகவும் ரசித்த படமாம் இது. நான் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் பெண் ஈரானை சேர்ந்தவள். அவளுடன் சேர்ந்து பார்த்த படந்தான் இது. அவளுக்கு மிகவும் பிடித்த படமாம். பெரும்பகை கொண்ட இருகுடும்பத்தையும் சேர்ந்த ஆணும் பெண்ணும் மெதுவாக காதல் வயப்படும் படம். அதுவும் நம்ம ஊர் படங்களைப்பார்த்த கண்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. மெஹர்பானுவாக நடித்தவரின் கண்ணில் தெரியும் தீ (?) இவரின் மற்றப்படங்களையும் தேடிப்பார்க்க சொன்னது. பார்த்தால் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

August 10, 2003

Raise the Red Lanturn (1991)

Yimou Zhang இயக்கத்தில் Li Gong(Songlian), Caifei He, Jingwu Ma, Cuifen Cao ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

Lantern.jpg

1920களின் சீனாதான் கதைக்களம். 19 வயது நிறைந்த சூலிங்யானின் தந்தை இறந்துபோக, அவள் தந்தையின் மனைவி அவளுடைய விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கிறார். திருமணமா? இல்லை ஒரு ஐம்பது வயது பணக்காரனுக்கு மூன்றாவது வைப்பாட்டியாகிறாள். ஏறக்குறைய விற்கப்படுகிறாள் என்று சொல்லலாம். தந்தை இறப்பதற்குமுன் ஆறுமாதம் பல்கலைக்கழகத்தில் படித்த சூலிங்யான், தன்னால் வாழ்க்கைப்பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறாள். கணவன் வீட்டுக்கு வந்து சேரும் சூலிங்யானுக்கு வீட்டின் தலைமை வேலையாளால், அந்த வீட்டின் நடைமுறைகள் பின்வருமாறு சொல்லப்படுகின்றன. அவளை யாரும் இனி சூலிங்யான் என்று கூப்பிடமாட்டார்கள் என்றும், குடும்பத்தலைவரை அனைவரும் ‘மாஸ்டர்’ என்று அழைப்பார்கள். மனைவிமார் முறையே ‘முதலாவது’, ‘இரண்டாம்’, ‘மூன்றாம்’ மற்றும் ‘நான்காம் சகோதரி’ என்று அனைவராலும் அழைக்கப்படுவார்கள். நான்கு பேருக்கும் அந்த பரந்த இடத்தில் தனித்தனி வீடுகள் கொடுக்கப்பட்டு, பிரத்தியேக பணிப்பெண்ணும் நியமிக்கப்படும். குடும்பத்தலைவருக்கு, அவர் எந்த வீடு போகிறாரோ, அந்த வீடு முழுக்க அன்றைய தினம் சிவப்பு இலாந்தர் விளக்கு எரியவேண்டும் என்ற வினோதமான ரசனை. சாயங்கால வேளையில் மனைவிமார் அனைவரும் அவரவர் வீட்டு வாசலில் நிற்க வேலையாட்கள் வந்து, குடும்பத்தலைவன் எந்த வீட்டிற்கு போகப்போகிறாரோ, அங்கு விளக்கேற்றுவார்கள். மற்றவர்கள் கலைந்து செல்வார்கள்.

முதலாவது மனைவிக்கு சூலிங்யானை விட வயதில் மூத்த மகன் இருக்கிறான். வயதான அவர், ஏனைய மனைவிமாரை பெரிதும் கண்டுகொள்வதில்லை. தானுண்டு தன்வேலையுண்டு என்று இருந்துவிடுகிறார். புதிதாக வரும் சூலிங்யான், முதற்காரியமாக ஏனைய மனைவிமாரை சந்திக்கிறாள். இரண்டாம் மனைவியின் அன்பான உபசரிப்பில் நெகிழ்கிறாள். இரண்டாவது மனைவி மிகவும் நல்லவள் என்று எண்ணிக்கொள்கிறாள். வந்த அன்று மாலை சூலிங்யானின் கால்களுக்கு மசாஜ் கொடுக்கிறார்கள். குடும்பத்தலைவன் எந்த வீட்டிற்கு போக நினைக்கிறாரோ, அந்த வீட்டுத்தலைவிக்கு மசாஜ் கொடுப்பது குடும்ப வழக்கம் என்று அறிகிறாள் சூலிங்யான். அதுபோலவே அடுத்த நாள் உணவு மெனு தயாரிக்கும் உரிமையும் கிடைக்கும் என்றும் தெரிந்து கொள்கிறாள். முதல்நாளே உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லி குடும்பத்தலைவனை தன் வீட்டிற்கு அழைத்த சீன ஒபேரா பாடகியான மூன்றாவது மனைவி, மிகவும் திமிர் பிடித்தவள் என்று அறிகிறாள்.

ஆரம்பத்தில் மற்ற மனைவிமார் நடத்தையை புன்சிரிப்புடன் கவனித்த சூலிங்யான். அந்த இடத்தில் மரியாதை கிடைக்கவேண்டுமானால், தானும் அவ்வாறே செய்யவேண்டும் என்று புரிந்துகொள்கிறாள். முதலில் மூன்றாம் மனைவியை தன் விரோதியாகவும், இரண்டாம் மனைவியை தோழியாகவும் கருதிய சூலிங்யான், காலப்போக்கில் அந்த வீட்டில் யாரும் யாருக்கும் தோழி கிடையாது என்பதை புரிந்து கொள்கிறாள். இதற்கிடையில் சூலிங்யானின் பணிப்பெண்ணால் பல இடைஞ்சல்கள் வருகின்றன. பணிப்பெண்ணிற்கும் தன் கணவருக்கும் இருக்கும் உறவை தெரிந்த சூலிங்யான், அந்த வீட்டில் தனக்கு மரியாதை கிடைக்கவேண்டுமானால், தான் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை புரிந்து கொள்கிறாள். பணிப்பெண் கூறிய வார்த்தையன்றால் கோபமுற்ற சூலிங்யான் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லுகிறாள். சில மாதங்களுக்கு விசேட கவனிப்பும் நடக்கிறது அவளுக்கு. ஒரு நாள் திடீரென்று மருத்துவர் வரவழைக்கப்பட்டபோது, தான் சொன்ன குட்டு வெளிக்கிட்டுவிட்டதென்று புரிந்துகொண்ட சூலிங்யான், யார் குட்டை வெளிப்படுத்தினார்கள் என்று ஆராய்கிறாள். அப்போதுதான் தான் நினைத்தபடி, இரண்டாம் மனைவி நல்லவளில்லை என்பது தெரியவருகிறது. அவளையும் பணிப்பெண்ணையும் பழி வாங்குகிறாள். பணிப்பெண் மன்னிப்பு கேட்க மறுத்து இரவு முழுவதும் பனியில் முட்டிபோட்டு மருத்துவமனையில் இறந்துபோகிறாள். இதற்குமுன் சூலிங்யான் பொய் சொன்னபடியால் அவளுடைய வீட்டு சிவப்பு இலாந்தர் விளக்குகளுக்கு கருப்பு உடைபோடப்படுகிறது.

வந்தபுதிதில், வீட்டை நன்றாக சுற்றிப்பார்த்த சூலிங்யான், வீட்டில் உச்சத்தில் பூட்டுப்போட்டு தொங்கும் தனியறை பற்றி விசாரிக்கிறாள். குடும்ப வழக்கத்திற்கு எதிராக நடக்கும் பெண்கள், கணவர்களின் நற்பெயருக்கும் குடும்பத்திற்கும் கெட்டபெயர் வாங்கித்தந்தால்; அங்கேதான் சித்திரவதை நடப்பதாக சொல்லுகிறார்கள்.

நாட்கள் செல்லுகின்றன. சூலிங்யான் அவளுடைய இருபதாவது பிறந்தநாளை தனியே கொண்டாடுகிறாள். தனியே நிறைய குடித்துவிட்டு மூன்றாம் மனைவிக்கும் குடும்ப டாக்டருக்கும் இடையில் இருக்கும் உறவை உளறிவிடுகிறாள். மறுநாள் நடந்ததை அறிந்துகொள்ளும் சூலிங்யானிடம், இரண்டாம் மனைவி, இவள் சொன்னதைக்கேட்டு தான் ஆட்களை அனுப்பி மூன்றாம் மனைவியைக் கையும் களவுமாக பிடித்து கொண்டு வந்திருப்பதாக சொல்லுகிறாள். ஊர் திரும்பிய குடும்பத்தலைவன் கட்டளைப்படி பிடிபட்ட மூன்றாம் மனைவியை வீட்டின் உச்சியில் இருக்கும் தனியறைக்கு கொண்டுபோகிறார்கள். பனிபெய்யும் அவ்வேளையில் சூலிங்யான் அவர்களைப் பின்தொடருகிறாள். வேலையாட்கள் கைப்பிடியில் இருந்து திமிறிக்கொண்டிருக்கும் மூன்றாம் மனைவியை அவர்கள் அந்த அறையில் பூட்டுகிறார்கள். சிறிதுநேரத்தில் யாரும் அங்கு இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்ட சூலிங்யான் அறைக்குள் சென்று அங்கிருக்கும் கோரத்தைப்பார்த்து அலறுகிறாள். அந்தப்பெண் கோரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம். ஏனெனில் முதலில் அங்கே போன வேலையாட்கள் உடனே வெளியே வரவில்லை. முன்பு பார்த்தபோது அந்த அறையில் இரண்டு கைவிலங்குகள் தொங்கின. பெண்கள் அணியும் காலணியும் கிடந்தது. எல்லாம் தூசுமயமாக இருந்தது. இதைப்பற்றி விசாரித்த சூலிங்யான், வேறு யாரிடமும் அதைப்பற்றி பேசவேண்டாம் அந்த இடத்தில் பேய் இருக்கிறது என்று மூத்த பணிப்பெண்ணால் எச்சரிக்கப்படுகிறாள். இது பழைய கதை. அலறிக்கொண்டே இருந்த சூலிங்யான் வேலையாட்களால் கீழே கொண்டு வரப்பட்டு மற்ற மனைவியராலும் பணியாட்களாலும் கவனிக்கப்பட்டாலும், அவளால் தான் பார்த்த கோரக்காட்சியை மறக்கவே முடியவில்லை. காட்டுமிராண்டிகள் என்று திட்டிக்கொண்டே இருக்கிறாள். அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொன்னவாறே குடும்பத்தலைவன் அங்கிருந்து வெளியேறுகிறான். வீட்டில் இருக்கும் மற்றவர்களும் அதையே சொல்லுகிறார்கள். சூலிங்யான் தனியே விடப்படுகிறாள். அவள் அங்கு வந்தபோது அணிந்திருந்த மேற்கத்தைய உடைகளை அணிந்து கொள்கிறாள். வீட்டுக்குள்ளேயே சுற்றிசுற்றி வரும் சூலிங்யானை யாரும் கண்டுகொள்வதாக இல்லை.
ஒரு நாள் இவள் வந்த போது பணியாள் செய்த அறிவிப்பு மீண்டும் கேட்கிறது - ஐந்தாவது மனைவிக்காக.

படத்தில் ஏறக்குறைய அனைத்துக்காட்சிகளிலும் வருவது சூலிங்யான் (Li Gong). Li Gongஉம் Yimou Zhangஉம் பல படங்களில் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள். அவையும் சுவாரசியமானவைதான். இந்தக்கதையில் பிரதானமான பாத்திரம் குடும்பத்தலைவனாக (Jigwa Ma) இருந்தாலும், படத்தில் அந்தக்கதாபாத்திரத்தை பக்கத்தில் காட்டவில்லை. காட்டியபோதெல்லாம், சிலவினாடிகளே பார்க்கமுடிகிறது. அனைத்து அதிகாரமும் அந்தப்பாத்திரத்திடம் இருந்தாலும், மனைவிமாரிடையே நடக்கும் அதிகாரப்போர், பிழைக்கும் வழிக்கான சூழ்ச்சிகள் என்பதால் இவர்களே படம் முழுக்க காட்டப்படுகிறார்கள். கூடவே இவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அறிந்த வேலையாட்கள். இரண்டாம் மனைவியாக நடித்த Cuinfen Cao, மூன்றாம் மனைவியாக நடித்த Caifei He, சூலிங்யானின் பணிப்பெண்ணாக நடித்தவரும் நன்றாக நடித்திருந்தார்கள். படத்தை தன் தோள்களில் சுமப்பது சூலிங்யானாக நடித்த லி கொங்தான். அருமையாக நடித்திருந்தார். காமெரா இவர்கள் அனைவரும் அணிந்திருந்த உடைகளின் நிறங்களை பிரமாதமாக வெளிப்படுத்தியது.

raisetheredlantern.jpg

இந்தப்படத்தை இயக்கிய Yimou Zhang உலகெங்கும் நடந்த திரைப்பட விழாக்களில் விருதுகள் வாங்கி இருக்கிறார். ஆனால் சீன அரசுக்கும் இவருக்குமான உறவு சுமூகமானது அல்ல. இவரைப்பற்றி இன்னொரு நாள் விலாவாரியாக பேசலாம் என்று இருக்கிறேன். அவ்வளவு விஷயம் இருக்கிறது. அற்புதமான படங்கள் சிலவற்றை இயக்கி இருக்கிறார். Raise the Red Lanturn படம் பார்த்து விட்டு பல நாட்களுக்கு அதையே நினைத்துக்கொண்டிருந்தேன். வெகு சில இயக்குநர்களுக்குத்தான் இந்த திறமை இருக்கிறது என்று நினைக்கிறேன்.

August 3, 2003

Amelie (2001)

amelie1.jpg

2001 ஆண்டு 5 ஆஸ்கர் விருதுகளுக்கு (ஆர்ட் டைரக்ஷன், காமரா, திரைக்கதை. சிறந்த ஒலியமைப்பு மற்றும் சிறந்த வெளிநாட்டு படம்) பரிந்துரைக்கப்பட்டது ‘Le Fabuleux Destin d’Amelie Poulain’. இந்த பிரெஞ்சுப் படத்தின் பெயரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் - The fabulous destiny of Amelie Poulain சுருக்கமாக ‘Amelie’. இந்த ஆங்கில சப்டைட்டில் படத்தில் நடித்திருப்பவர்கள் - Audrey Toutou, Mathieu Kassovitz. இயக்கம் - Jean-Pierre Jeunet.

உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ஆர்மி டாக்டருக்கும், தொட்டதுக்கெல்லாம் டென்ஷனாகும் டீச்சருக்கும் பிறந்த ஒரே குழந்தைதான் அமெலி. சிறுவயதில் அவளை மாதமொருமுறை மருத்துவ சோதனை செய்வதற்கும் மட்டுமே அருகில் அழைக்கும் அப்பா, அந்த நேரத்தில் மட்டுமே தன் அப்பாவால் கவனிக்கப்படுவதால் வேகவேகமாக ஓடும் அமெலியின் இதயம். இதனால் தவறுதலாக, அமெலிக்கு இருதயத்தில் கோளாறு என்று கணித்து வீட்டிலேயே பாடம் சொல்லிக்கொடுக்கும் அம்மா என்று நகருகிறது அமெலியின் இளமைப்பருவம். படத்தில் ஓரிடத்தில் குறிப்பிடுவது போல ஒரு நியூரோட்டிக்’கிற்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத ஐஸ்பேர்க்’கிற்கும் நடுவில் வாழ்ந்தாலும் அமெலி அவளுடைய குணாதிசயங்களை இழக்கவில்லை. நடுவில் தாயார் இறந்துபோக தகப்பனுடன் வளருகிறாள் அமெலி.

வளர்ந்ததும் ஒரு க·பேயில் வெயிட்டராக வேலை செய்கிறாள். தனிமையிலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட அமெலி, மற்றவர்களுடன் நன்கு பழகினாலும் உலகை கொஞ்சம் தள்ளியே வைத்திருக்கிறாள். அந்த உலகை, அவள் எப்படி பார்க்கிறாள் என்பதை அவ்வப்போது நாமும் காணலாம். (அந்தக்காட்சிகள் அனைத்தும் கவிதை என்று சொல்வேன்.) இப்படி போய்க்கொண்டிருந்த அமெலியின் வாழ்வில் இளவரசி டயானாவின் மரணம் பெரிய மாறுதலைக் கொண்டு வருகிறது. ஒன்றுமில்லை. அவள் கையில் வைத்திருந்த போத்தல் மூடி, அமெலியின் கைகளில் இருந்து தவறி விழுந்து அந்த அறையில் இருந்த ஒரு சிறிய மறைவிடத்தை காட்டிக்கொடுக்கிறது. அதற்குள் ஏறக்குறைய 30-40 ஆண்டுகளுக்கு முன்பு அதே வீட்டில் இருந்த ஒரு சிறுவனின் சின்ன வயது பொக்கிஷங்கள் இருந்த ஒரு சிறிய பெட்டி இருக்கிறது. அமெலி அந்த சிறுவனைத் தேடிக்கொண்டு போய் அந்தப்பெட்டியை கொடுக்கலாம் என்று தீர்மானிக்கிறாள். தன்னை வெளிக்காட்டாமல், அந்தப்பெட்டியை உரியவரிடம் சேர்த்தும் விடுகிறாள். அந்த மனிதர் அடைந்த சந்தோஷத்தை கண்டு இவளும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள்.

சாதாரணமாக போய்க்கொண்டிருந்த அவளது வாழ்க்கையை சுவாரசியமாக்கவும், மற்றவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கவும் போவதாக முடிவு செய்கிறாள் அமெலி. முதற்படியாக அவள் வேலை செய்யும் க·பேயில் இருவரை, ஒருவருக்கொருவர் தெரியாமல் முடிச்சுப்போடுகிறாள். நடப்பதைப் பார்த்து சந்தோஷமடைகிறாள். இவ்வளவுக்கும் நடுவில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று தன் தந்தையை போய் பார்த்தும் வருகிறாள். அங்கே போய் திரும்பி வரும் ஒரு நாள்தான் நேனோவை சந்திக்கிறாள். பாரீஸின் மெட்ரோ- பாதாள ரயில்வே- நிலையங்களில் இருக்கும் உடனடி போட்டோ ஸ்டாலில் பொதுமக்கள், போட்டோ எடுத்து விட்டு கிழித்து எறியும் போட்டோக்களை சேர்ப்பதே அவனது பொழுதுபோக்கு. முதலில் அவனை வினோதமாக பார்க்கும் அமெலிக்கு, அவனை சந்திக்கும் வாய்ப்பு தொடர்ந்து ஏற்படுகிறது. ஒரு முறை, அவனது சேர்த்த புகைப்படங்கள் அடங்கிய ஆல்பமும் அவள் கைகளுக்கு கிடைக்கின்றன.

அமெலிக்கு அவள் வாழும் கட்டடத்தில் இருக்கும் ஒரு சுகவீனமுற்ற ஓவியரின் நட்பும் கிடைக்கிறது. அவருக்கும், அங்கே இருக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண், மூளை வளர்ச்சி குறைந்தவனும் அவளது வீட்டிற்கு அருகே இருக்கும் காய்கறிக்கடையில் வேலை செய்பவனுமான பையன் என்று சிலருக்கு அவர்களுக்கு தெரியாமல் உதவி செய்கிறாள். ஆனால், அவள்தான் உதவி செய்தது என்பது தெரியாமல் உதவுகிறாள். அதுமட்டுமல்ல, அப்படி செய்யும் உதவி அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது. வாராவாரம் மெட்ரோ நிலையத்தில் காணும் நேனோவை விரும்பத்தொடங்குகிறாள். ஒருமுறை நேனோ, இவள் வேலை செய்யும் க·பேவிற்கு அகஸ்மாத்தாக வந்து விட அமெலிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவளின் பிரத்தியேகமான தலையை சுற்றி மூக்கைத்தொடும் பாணியில் அமெலி, தன் விருப்பத்தை நேனோவிற்கு தெரிவிக்க முயலுகிறாள்.

The movie is like a collage of abstract paintings or shall we say moments. இந்தப் படத்தில் வரும் நிறையக்காட்சிகள், தனித்தனியே பார்க்கும்போது பல கதைகள் சொல்வனவாக இருக்கின்றன. அதையெல்லாம் இங்கே பேசப்போனால் பிறகு படம் பார்ப்பவர்கள் என்னைத் திட்டுவீர்கள். :) சில இடங்களில் மேலோட்டமாக செல்லும் கதையையும், காட்சியமைப்பு சொல்ல வரும் இன்னொரு விஷயம் பற்றியும் யோசிப்பதற்குள் அந்தக்காட்சி நகர்ந்து விடுகிறது. அத்துடன் கீழே ஓடும் ஆங்கில சப்டைட்டிலை (தமிழில் சுலபமாக எப்படி சொல்லலாம்?) கவனிக்கவும் வேண்டும். படத்தின் ஆரம்ப காட்சியே இந்த இயக்குநரின் வித்தியாசமான அணுகுமுறையை நமக்கு சொல்லுகிறது. வழக்கமான ஹாலிவூட் படங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கிறது. படத்தின் சில காட்சிகள், பிரெஞ்சுக்காரர்களின் அணுகுமுறையை காட்டுகிறது. It is not puritanical. அதுவே அமெரிக்காவில் இந்தப்படத்திற்கு R ரேட்டிங் வாங்கித்தந்தது. அட, அதுக்காக ஓடிப்போய் படத்தை பார்க்கவேண்டும் என்று ஓடாதீர்கள். நீங்கள் நினைப்பதுபோல ஒன்றுமில்லை. இந்த இயக்குநர்தான் ஏலியன்-ரிசரெக்ஷன்(1997) படத்தையும் எடுத்தவராம். நம்ப முடியவில்லை.

இந்தப்படத்திற்காக பாரீஸ் நகரின் சில பகுதிகளை கணினியில் உருவாக்கினாராம். தெரியவில்லை. நிஜ பாரீஸ் இதுபோல இல்லை என்று கேள்விப்பட்டேன். பாரீஸ் போனவர்கள், இந்தப்படத்தை பார்த்தால் அப்படியா என்று சொல்லுங்கள்.

படத்தில் அதிசயிக்க கூடிய இன்னொரு விஷயம் காமரா கோணங்கள். நாம் நினைத்தே இராத கோணங்களில் பார்த்திருக்கிறது. சில சமயம் காமெரா ஒரு இடத்தை உற்றுநோக்கி அதன் மேலே கிளம்பி வருகையில், நாம் நினைத்ததற்கு முற்றிலும் எதிர்பாராத இடங்களை காமரா நோக்கி இருக்கிறது. ஒரு முறை சாலையில் ஓரிடத்தை காமரா உற்று நோக்குகையில், நாம் அதை வேறொரு இடம் என்று நினைத்துக்கொள்கிறோம். காமரா பின்னே வரும்போதுதான் நமது தவறை உணர்ந்து, ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரின் திறமையை வியக்கிறோம்.

படத்தின் நாயகி ஔட்ரே டூட்டூ (Audrey Toutou) காதளவு வெட்டப்பட்ட முடியும், முகம் முழுக்க இருக்கும் பெரிய கண்ணுமாக வருகிறார். பல இடங்களில் Audrey Hepburnஐ (இவரைப் பற்றி இன்னொரு நாள்) நினைவு படுத்துகிறார். காமராவை பார்த்து பேசும் இவர் கண்கள் சமயத்தில் நம்மையே பார்க்கிறதோ என்று எண்ணவைக்கிறார். கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் காமரா நடுக்கம் இல்லாமல் வளைய வருகிறார். சில சமயங்களில் குழந்தை போல நடந்து கொள்ளும் அமெலி, நாம் சிறுவயதில் செய்த, செய்கின்ற சிலதை நினைவு படுத்தும். உதாரணமாக ஓரிடத்தில் கையில் ஒட்டி உலர்ந்து போல பசையை அமெலி உரிக்கும் காட்சி. (உங்களைப் பற்றி தெரியாது. நான் வளர்ந்த பிறகும் சில சமயம் வேண்டுமென்றே கையில் பசையை ஊற்றி கொஞ்சம் காயும் வரை காத்திருந்து உரித்திருக்கிறேன். :p)

இயக்குநரைப் பற்றி நிறைய சொல்லலாம். அவர் வாழ்க்கையை பார்க்கும் விதம்பற்றி. உதாரணத்திற்கு அமெலியின் தாயை அறிமுகப்படுத்தும்போது அவருக்கு நீண்ட நேரம் தண்ணீருக்கும் கையை வைத்திருந்தால், கை விரல்களில் வரும் சுருக்கம் பிடிக்காது என்று சொல்லிக்கொண்டே குளியலறையில் கைவிரல் சுருக்கத்தை பார்த்து கீச்சிடும் அந்தப் பெண்மணியைக் காட்டுவார். அதே போல அவரது வித்தியாசமான பார்வை, அமெலியின் உயிர் பிறந்த தருணம், அமெலியின் பொழுதுபோக்குகள் என்று பல இடங்களில் பளிச்சிடுகிறது. எல்லாம் சரிதான், ஆனால் படம் பார்த்து முடிக்கையில் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னமும் விறுவிறுப்பாக இ¢ருந்திருக்குமோ என்றும் நினைக்க வைக்கிறது.

amelie.gif
அமெலி - வாழ்க்கையை வித்தியாசமாக பார்க்க நினைப்பவர்களுக்கு!