July 28, 2003

Deep End (2001)

Scott McGehee, டேவிட் சீகல் இயக்கத்தில் டில்டா ஸ்வின்டன்(Tilda Swinton), கோரன் விஸ்ன்ஜிக்(Goran Visnjic), ஜோனதன் டக்கர்(Jonathan Tucker), பீட்டர் டோனாட்(Peter Donat), ஜோஷ் லூகாஸ்(Josh Lucas) நடித்திருக்கிறார்கள்.

deepend2.jpg

கலிபோர்னியாவில் லேக் டாஹோவில் வாழும் குடும்பத்தைப்பற்றிய கதை இது. நேவியில் பணிபுரியும் தகப்பன், நோயாளியான மாமனார், மூன்று பிள்ளைகள் (மகன், மகள், மகன்) இவர்களையெல்லாம் பார்த்துக்கொள்ளும் தாய் மார்கரெட். பணத்துக்கு குறைவில்லாத இவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று யோசிக்குமுன்னரே, மார்கரெட் லேக் டாஹோவிலிருந்து பக்கத்தில் இருக்கும் நெவேடா மாநில நகரம் ரெனோவிற்கு போகிறாள். அங்கே ‘டீப் எண்ட்’ என்ற சூதாட்ட விடுதியில் அவளுடைய பதினேழு வயது மகனின் காதலனை சந்திக்கிறாள். முதல்பார்வையிலேயே பிடிக்காமல் போய்விடும் அவன், மார்கரெட்டிடம் அவளுடைய மகனை விட்டுவிலகுவதற்கு பணம் கேட்கிறான். இதற்கு முன்னர் ஒருமுறை கார்விபத்தில் குடிபோதையில் இருந்த இவனும் மார்கரெட்டின் மகன் பூ (Beau)வும் சிக்கியதால், அவனைப்பற்றி நன்றாகவே தெரிந்திருந்த மார்கரெட் மறுத்துவிடுகிறாள்.

கல்லூரிகளில் அனுமதி வாங்க முயற்சித்துக்கொண்டிருக்கும் மகனிடம், அவனுடைய காதலனைப்பற்றி லேசாகப்பேச முயலுகிறாள். பூவோ இவளிடம் எதையும் பேசத்தயாராக இல்லை. ஆனாலும், அவனுடைய காதலன் தன்னிடம் பணம் கேட்டதை சொல்லிவிடுகிறாள். இவர்கள் இவ்வாறு முயற்சித்துக்கொண்டிருக்கும்போதே நேவியில் பணிபுரியும் கணவனிடம் இருந்து தொலைபேசி வருகிறது. மார்கரெட் அவரிடம் எதையும் சொல்லாமல் மறைக்கும்போதுதான் நமக்கு இந்தக்குடும்ப நபர்கள் ஒருவரிடம் மற்றவர் வெளிப்படையாக பேசுவதில்லையோ என்று யோசிக்கவைக்கிறது.

அன்றிரவு பூவைப்பார்க்க வரும் காதலனிடம் பணவிவகாரம் பற்றி விசாரிக்கிறான் பூ. மார்கரெட் சொன்னது உண்மையென்று தெரியவரும்போது பூவினால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சண்டையிட்டுக்கொள்கிறார்கள். பூ, வீட்டிற்கு திரும்பி விடுகிறான். அவனைத் தொடரமுயலும் காதலனோ எதிர்பாராத விதமாக சில மரப்பலகைகள் உடைந்து, ஏரியில் விழுகிறான். அங்கு நின்ற படகின் anchor(தமிழில் என்ன?) மீது விழுந்து இறந்து விடுகிறான். அவன் கையில் பூவின் ஷர்ட்டில் ஒரு பகுதி இருக்கிறது. அதிகாலையில் அந்தப்பக்கமாக வந்த மார்கரெட் அதிர்ச்சி அடைகிறாள். தன் மகந் தான் கோபத்தில் கொலைசெய்துவிட்டான் என்று நினைக்கிறாள். உடனே படகில் அவனைப்போட்டு ஏரியின் நடுப்பாகத்தில் போட்டுவிடுகிறாள். ஏதோ வேகத்தில் செய்துவிட்டாலும், அவள் மறுபடியும் வீட்டிற்கு திரும்புகையில் இறந்தவனின் காரைப்பார்க்கிறாள். கார்சாவி இறந்தவனின் பாக்கட்டிலேயே இருப்பதை உணர்ந்த மார்கரெட் மறுபடியும் ஏரிக்கு சென்று கார்சாவியை மீட்கிறாள்.

எதுவுமே நடக்காததுபோல வாழ்க்கையை நகர்த்துகிறாள் மார்கரெட். இதற்கிடையில் பத்திரிகையில் ஏரியில் ஒரு பிணம் கிடைத்தது பற்றிய செய்தியும் அதற்காக விசாரணை நடப்பதும் தெரியவருகிறது. இறந்தவன், தன்னுடைய முன்னாள் காதலந்தான் என்று அறியும் பூ, அவனைத்தன் தாய் கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறான். மார்கரெட், பூவைப்பற்றி பேசுவதற்காக அவள் கணவரைத்தொடர்பு கொள்ள முயற்சித்துக்கொண்டே இருக்கிறாள். இவ்வாறு இருவரும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கையில் இன்னொரு பிரச்சினை வருகிறது.

அலெக் ஸ்பெரா (கோரன் விஸ்ன்ஜிக்), மார்கரெட்டை பிளாக்மெயில் செய்கிறான். பூவையும் அவன் காதலன் பற்றியும் வெளியே சொல்லாமல் இருப்பதற்கு 50,000 டாலர்கள் கேட்கிறான். அதுவும் நாற்பத்தியெட்டு மணி நேரத்துக்குள் வேண்டுமென்று கேட்கிறான். அவன் பேச ஆரம்பித்ததுமே பயத்தினால் உறைந்துபோன மார்கரெட், பணத்தொகையையும் நேரக்கெடுவையும் கேட்டதும் மறுத்துப்பேசுகிறாள். ஆனால், அலெக் ஸ்பெரா, அவனிடம் இருக்கும் வீடியோ காசெட்டைப்போட்டு பூவும் அவன் காதலனும் நெருக்கமாக இருந்த காட்சியைக் காட்டுகிறான். விஷயம் தன் கணவருக்கு தெரிந்தால் என்ன நடக்குமென்று தெரியாது என்று அலெக்கிடமே சொல்லும் மார்கரெட், பணத்தை புரட்ட முயலுகிறாள். இதற்கிடையில் வீட்டிலும் எதுவும் நடவாதது போலவும் நடந்து கொள்கிறாள். கடைசிமகனை பள்ளிக்கு அனுப்புவது, மகளை கவனித்துக்கொள்வது, மாமனாருக்கு தேவையானதை செய்துகொடுப்பது என்று. ஒருவரிடமும் தன்மனப்போராட்டத்தையும் பிரச்சினையையும் பகிர்ந்து கொள்ளாமல் கிடந்து உழலுவது என்று இருக்கிறாள் மார்கரெட். அவள் பணத்தை புரட்டுவதற்கு செய்யும் முயற்சிகள் நமக்கே பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. நடுக்கடலில் இருக்கும் கணவரின் கையெழுத்து இல்லாமல் ஒன்றுமே செய்யமுடியாது என்றுணர்ந்த மார்கரெட் கடைசியில் வங்கியில் கடன் வாங்க செய்யும் முயற்சியும் தோல்வியடைகிறது. அவளிடம் இருக்கும் நகைகளை விற்றதில் இருபதாயிரம் டாலர் சேர்கிறது. அலெக் ஸ்பெராவை சந்திப்பதற்கு சில மணி நேரங்களே இருக்கும்போது, களைத்துப்போய் மாமனாரிடம் தயங்கித்தயங்கி கடன் கேட்கிறாள். அவரும் எவ்வளவு வேண்டும் இருபதா, நாற்பதா என்று கேட்டு பர்சை திறப்பதற்குள் சுதாகரித்துக்கொண்ட மார்கரெட் பணத்தை வாங்கிக்கொள்கிறாள். மறுபடியும் அவள் தொலைபேசியில் முயற்சிக்கிறாள்.

அப்போது மார்கரெட் வாங்கி வந்திருந்த இருபத்தி ஐந்து லீட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில்களை சொல்லச்சொல்ல கேக்காமல் தூக்கும் மாமனாருக்கு மாரடைப்பு வந்துவிடுகிறது. பள்ளியிலிருந்து அப்போதுதான் வீடு திரும்பி கடைசிமகன், காத்திருந்து களைத்துப்போய் மார்கரெட்டைத்தேடி அங்கே வந்த அலெக்கை வீட்டினுள் அனுமதிக்கிறாள். அங்கே, கூடத்தில் மாமனாருக்கு செயற்கை சுவாசம் அளிக்க முயற்ச்சித்துக்கொண்டிருந்த மார்கரெட், மகனிடம் ஆம்புலன்சை வரவழைக்க சொல்கிறாள். செயற்கை சுவாசம் பற்றித்தெரியாத மார்கரெட் கஷ்டப்படுவதைப்பார்த்த அலெக் உதவுகிறான். ஆம்புலன்ஸில் அனைவரும் மருத்துவமனைக்கு செல்ல அலெக் பினதங்குகிறான். மார்கரெட்டின் வீட்டினை சுற்றிப்பார்த்து, அக்குடும்பத்தைப்பற்றி அங்கிருக்கும் புகைப்படங்கள் மூலமாக அறிந்து கொள்கிறான். வீடு திரும்பிய பூ, முன்னமே பார்த்திருந்த அவனை, மார்கரெட்டின் காதலன் என்று நினைக்கிறான்.

மருத்துவமனையில் மாமனாரை அனுமதித்துவிட்டு, சகஜமாக இருந்துகொண்டே பணத்தை புரட்ட பிரம்மப்பரியத்தனம் செய்கிறாள் மார்கரெட். இதற்கிடையில் அவளை சிலதடவை சந்தித்துவிட்ட அலெக், மார்கரெட்டிடம் உண்மையாகவே பணம் இல்லையென்பதை தெரிந்து கொள்கிறான். தனக்குப்பணம் தேவையில்லை என்றும் ஆனால், தன்னுடைய பாட்னருக்கு பணம் தேவையென்றும் அவனுக்கு மட்டும் கொடுத்தால் போதுமென்று சொல்லுகிறான். அலெக் அவ்வாறு நடந்துகொள்வது ஏன் என்றும் யோசிக்கிறோம். இதற்கிடையில் போலீசார் இரண்டு தடவை அந்தப்பக்கம் விசாரணை நடத்துகிறார்கள். பூவின் காதலனை கொன்றது இன்னொருவன் என்று சொல்லி, அவனை கைதும் செய்கிறார்கள். அத்துடன் அப்பிரச்சினை முடிந்தாலும் அலெக்கின் பாட்னரின் தொல்லை தொடர்கிறது. முழுப்பணமும் வேண்டும் என்று மார்கரெட் வீட்டிற்கு வந்து மிரட்டுகிறான். விஷயம் தெரிந்த அலெக்கும் அங்கு வருகிறான். அங்கு நடந்த கைகலப்பில் அலெக்கின் பார்ட்னர் அலெக்கை காயப்படுத்த, அலெக் அவனைக்கொன்று விடுகிறான்.

அலெக்கின் காரும், அவனது பாட்னரின் காரும் அங்கு நிற்பது சரியில்லை என்பதால் அலெக்கும் மார்கரெட்டும் உடலை அப்புறப்படுத்த முயல்கின்றனர். அலெக்கின் காரை ஓட்டத்தெரியாத மார்கரெட் பூவை துணைக்கு அழைத்துக்கொண்டு, அலெக்கைப்பின் தொடர்ந்து ரெனோ செல்கிறாள்…

(படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என்பவர்கள், எனக்கு தனியே எழுதுங்கள்.)

deepend1.jpg

1940களில் Elisabeth Sanxay Holding என்பவரால் எழுதப்பட்ட கதையில் சில மாற்றங்களை செய்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் இயக்குநர்கள் Scott McGeheeஉம், டேவிட் சீகலும். இந்தப்படத்தையே தன் தோள்களில் தாங்கிக்கொள்வது டில்டா ஸ்விண்டன். கடந்த பதினைந்து வருடங்களாக நடித்துவந்தாலும், இவர் அவ்வளவு பிரபலமில்லை. படத்தில் விஷயம் முழுக்கத்தெரிந்தவர்கள் பார்வையாளர்களாகிய நாம்தான். மார்கரெட்டும் அவளுடைய மகன் பூவும் ஒருவரை மற்றவர் சந்தேகிக்கும்போதும், மார்கரெட் பணத்தை திரட்டுவற்கு திணரும்போதும் நமக்கும் பிளட்பிரஷர் எகிறுகிறது. தனியாக சிரமப்படும் மார்கரெட்டின் டென்ஷனை அருமையாக முக அசைவுகளிலும், உடல் அசைவிலும், குரலை சாதாரணமாக ஒலிக்கவைக்க முயற்சிக்கும்போதும் என்று பல இடங்களில் அநாயாசமாக நடித்திருக்கிறார். அலெக் ஸ்பெராவாக நடித்திருப்பது ER தொடரில் நடிக்கும் Goran Visnjic. இவருடைய வித்தியாசமான உச்சரிப்பு ஆரம்ப காட்சிகளில் இறுக்கத்தை அதிகரிக்கிறது. 1949இல் இதே கதை படமாக்கப்பட்டிருக்கிறது. அப்போது இருந்ததை விட சிற்சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள். மகள், மகனாகி இருக்கிறான். வயதான காதலன் அப்படியே இருக்கிறான். இப்படி சில. இயக்குநர்கள் இதற்குமுன்னர் ஒரு படம் இயக்கி இருந்தாலும் இதுவே இவர்களின் வெற்றிப்படமாகும். அமைதியான சூழலில் நடக்கும் அசம்பாவிதங்களை அருமையாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் Giles Nuttgens. இவர் தீபா மேத்தாவின் ‘·பையர்’, ‘ஏர்த்’ போன்ற படங்களுக்கும், Battlefield Earth போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கோல்டன் குளோப், Sundance திரைவிழா போன்ற சில விருதுகளையும் பெற்றிருக்கிறது இப்படம்.

July 21, 2003

Evelyn (2002)

பியர்ஸ் பிராஸ்னன், சோ�பி வாவசோர், ஜீலியானா மார்குவலெஸ், எய்டன் குவின், ஸ்டீபன் ரியா, ஆலன் பேட்ஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்கம் - புரூஸ் பெரெஸ்போர்ட்.

evelyn.jpg

1953ல் அயர்லாந்தில் நடக்கும் நிஜ கதை இது. குடிகார தச்சனொருவனுக்கு ஒரு பெண் குழந்தையும் இரண்டு ஆண் குழந்தைகளும். அக்குழந்தைகளின் தாய்க்கு குடும்ப வாழ்க்கை பிடிக்கவில்லை. அவள் குடும்பத்தோடு இருந்த நாட்களில் கூட குழந்தைகளை அவர்களின் அப்பாதான் கவனித்துக்கொள்வதை பார்க்கிறோம். கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் காதலனுடன் ஓடிப்போய் விடுகிறாள் அந்த தாய். தாய் எதற்கு வெளியில் போகிறாள் என்று தெரியாமல், கடைக்குப்போகிறாள் என்று நினைத்து துரத்திக்கொண்டு போகிறாள் ஈவ்லின். தாயார் இன்னொரு மனிதனுடன் மோட்டார் வண்டியில் செல்வதைப்பார்த்து தாயின் மீது மிகவும் கோபமாக இருக்கிறாள். இருந்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் மனைவி எடுத்துக்கொண்டு போய் விட்டதால் மிகவும் கஷ்டப்படுகிறான் டெஸ்மண்ட் டாயில். இதற்கிடையில் மனைவி இல்லாமல் டெஸ்மண்ட் மட்டும் குழந்தைகளை வளர்த்து வருகிறான் என்று சர்ச்சுக்கு தெரியவந்து விட்டது. அரசுக்கும். அந்நாட்களில் அயர்லாந்து சட்டப்படி தகப்பன் மட்டும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியாது. அவ்வாறு தகப்பன் மட்டும் குழந்தைகளை வளர்க்கும்படி நேர்ந்து விட்டால், அரசாங்கம் குழந்தைகளை எடுத்து, தேவாலயத்திடம் குழந்தைகளை வளர்க்கும்படி ஒப்படைத்துவிடும். டெஸ்மண்டுக்கும் அவ்வாறே நடக்கிறது. ஈவ்லினும் அவளது தம்பிகளும் கதறக்கதற தகப்பனிடமிருந்து பிரிக்கப்படுகின்றன. ஈவ்லின் அவள் தங்கும் இடத்திற்கு முதன்முறை வரும்போது அவளது தாத்தாவும் வருகிறார். டெஸ்மண்ட் ஈவ்லினின் தம்பிகளைக்கொண்டு போனான்.

குழந்தைகள் பறிபோனது டெஸ்மண்டிற்கு பெரும் மனவருத்தத்தை தருகிறது. இன்னமும் குடிக்கத்தொடங்குகிறான். ஆனால், அவன் பப்பில் சந்திக்கும் அங்கு பணிபுரியும் பெண், அவன் குடியை விட வேண்டியதன் அவசியத்தை சொல்லுகிறாள். குடியை விட்டுவிட்டு மும்முரமாக முயற்சித்தால்தான் குழந்தைகளை திரும்பப்பெற முயற்சிக்கலாம் என்று கூறுகிறாள். அவளது அண்ணன் ஒரு வக்கீல் அவனிடம் ஆலோசனை கேட்ட டெஸ்மண்ட் குழந்தைகளை மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறான். அவன் சந்திக்கும் நீதிபதி, டெஸ்மண்ட் குறிப்பிட்ட அளவு பணம் சம்பாதித்து வந்தால் குழந்தைகளை அவனிடம் ஒப்படைப்பது பற்றி யோசிக்கலாம் என்று சொல்கிறார்.

ஆனால், தகப்பனிடம் குழந்தைகள் வளரவேண்டுமென்றால், அதற்கு தாயிடமிருந்து கடிதம் வரவேண்டும். ஆனால், ஓடிப்போனவளை எங்கு பிடித்து எப்படி கடிதம் வாங்குவது? மேல்நீதிமன்றத்தில் முறையிட்டாலும், டெஸ்மண்டிற்கு சாதகமாக தீர்ப்பு வரவேண்டுமானால், சட்டமே மாற்றப்படவேண்டும். அதற்கு நிச்சயமாக தேவாலயமும் அரசாங்கமும் ஒத்துக்கொள்ளாது என்று டெஸ்மண்டுக்கு புரியவருகிறது. இதற்கிடையே அமெரிக்க-அயர்லாந்து வக்கீல் ஒருவரும், வக்கீல் தொழில் செய்து ஓய்வு பெற்றவரும் டெஸ்மண்டுக்கு உதவ முன்வருகின்றனர்.

அதே நேரத்தில் தேவாலயக்காப்பகங்களில் வளரும் ஈவ்லினதும் அவளது தம்பிகளினது நிலமையும் சொல்லிக்கொடுக்கும்படியாக இல்லை. துடுக்குத்தனத்தால் காப்பகத்தில் அடி வாங்குகிறாள் ஈவ்லின். குடியை அறவே நிறுத்திய டெஸ்மண்டின் கடும் முயற்சியால் வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. முக்கிய சாட்சியாக ஈவ்லின் சேர்க்கப்படுகிறாள். ஈவ்லினின் சாட்சியத்தை கேட்கும் முன்னர் நீதிபதி கூட்டணியில் இருந்த இருவர் டெஸ்மண்டிற்கு எதிராக தீர்ப்பு சொல்ல இருந்தனர். ஈவ்லினின் பேச்சும், காப்பகத்தில் அவளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கேட்ட பிறகு நீதிபதிகள் மனம் மாறினர். நாடு முன்னேறும்போது சட்டமும் அதற்கேற்றபடி மாறவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டனர். அன்று வழங்கிய தீர்ப்பால், அன்றிலிருந்து அயர்லாந்தில் தகப்பன்கள் தனியே குழந்தைகளை வளர்க்கமுடியாடு என்ற சட்டம் நீக்கப்பட்டது. செய்யப்பட்டது.

பெரிய திருப்பங்கள் ஏதுமில்லாத இந்த கதையை நகர்த்தி செல்பவர்கள் இருவர். ஈவ்லினாக அழகாக நடித்திருந்த சிறுமி சோ�பி, மற்றும் குடிகார தச்சனாக, குழந்தைகள் மீது பாசமிக்க தந்தையாக வருவது பியர்ஸ் பிராஸ்னன். ஆரம்பத்தில் பியர்ஸை பார்க்கும்போதெல்லாம் கண்ணுக்கு தெரிந்த ஜேம்ஸ் பாண்ட், கதையோட்டத்தில் காணாமல் போய்விடுகிறார். புத்தி அவ்வளவு இல்லாத சராசரி குடும்பஸ்தனாக, பப்பில் பாடி மேலதிகமாக பணம் சம்பாதிக்க முயலும் டெஸ்மண்ட் பாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆச்சரியப்படுத்தும் இன்னொரு விஷயம், வறுமை, இன்னோரன்ன பிரச்சினையிலும் நகைச்சுவை உணர்வை கைவிட்டுவிடாத அயர்லாந்துக்காரர்கள். பின்னணி இசை கதை நகர்வுக்கு மிகவும் உதவி புரிகிறது. எய்டான் குயின், ஸ்டீபன் ரியா, ஆலன் பேட்ஸ் போன்றவர்கள் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.

பார்க்கலாம். குறைந்தது ஸ்டைல் மன்னன் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் பிராஸ்னன், அதற்கு நேர் எதிரான பாத்திரத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதற்காகவேனும் பார்க்கலாம்.

July 14, 2003

Talk to her (2002)

பெத்ரோ ஆல்டொமோவார் இயக்கத்தில் ஜாவியர் கமாரா(Javier Camara), டாரியோ கிராண்டினெட்டி(Dario Grandinetti), ரொசாரியோ �ப்ளோரெஸ்(Rosario Flores), லொயோனொர் வாட்லிங்க்(Leonor Watling) ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

talktoher.jpg

இரண்டு பெண்கள் ஏதோ ஒரு சக்தியின் பிடியில் ஆட்பட்டவர்கள்போல மேடையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். மேடை முழுவதும் தளபாடங்கள் நிறைந்து கிடக்கின்றன. அவர்கள் அவற்றின்மேல் முட்டி விழப்போகிறார்கள் என்று நினைக்கும்போது ஒரு ஆண் வந்து அவற்றையெல்லாம் தள்ளித்தள்ளி விடுகிறான். அவர்களும் கண்ணிழந்தவர்கள்போல மேடையில் அலைகிறார்கள். பின்னணி இசையும் இந்த மேடை நிகழ்ச்சிக்கு வலுசேர்க்கிறது. இந்த மேடை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் இருவர் உணர்ச்சி வசப்படுகிறார்கள். அவர்களில் ஒருவரின் கண்ணில் கண்ணீர். மற்றவர் முதலாமவருடன் பேச நினைத்தாலும் தயங்கி பேசாமல் விடுகிறார்.

முன்பின் தெரியாத இந்த இருவரும் மறுபடியும் சந்திக்கிறார்கள். அப்போது முதலாமவரான மார்கோவின் காதலி ஒரு matador ஸ்பெயினில் மாடுகளுடன் சண்டை போடுவார்களே அவர்கள்தான். இவர்தான் முதல் பெண் மாடடோர். லிடியா புகழின் உச்சத்தில் இருக்கும்போது சந்திக்கிறார்கள். இவர்களின் உறவு கொஞ்சம் குழப்பம் நிறைந்ததுபோல தெரிகிறது. மார்கோவிடம் பேச வேண்டும் என்று சொல்லி விட்டுப்போன லிடியா சண்டையில் இருந்து சுயநினைவுடன் திரும்பவில்லை. மாடு முட்டி கோமாவிற்கு போய் விட்டாள்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மற்றவர் பெனிங்னியோ(Benignio). இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸ். நிகழ்ச்சியில் நடந்ததைப்பற்றி இவரின் நோயாளியிடம் விவரிக்கிறார். மார்கோவிடம் பேச வேண்டும் போலிருந்ததையும் கூறுகிறார். பெனிங்னியோ பார்த்துக்கொள்வது நான்கு வருடங்களாக கோமாவில் கிடக்கும் அலிசியாவை. அலிசியா பாலே நடனம் ஆடுபவர். பெனிங்னியோ அலிசியாவை காதலிக்கிறார். ஏறக்குறைய இருபத்திநான்கு மணிநேரமும் அலிசியாவுடனேயே செலவழிக்கும் பெனிங்னியோ இதற்கு முன் நோய்வாய்ப்பட்டு இருந்த அவரின் தாயை பராமரித்து வந்தார். தன் பெண்ணை இப்படி ஒருவன் பராமரிப்பதை விரும்பாத அலிசியாவின் தந்தையிடம் பெனிங்னியோ தன்னைப்பற்றி பொய் சொல்கிறார்.

லிடியாவும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அவளுடன் வந்த மார்கோ, பெனிங்னியோவையும் அலிசியாவையும் சந்திக்கிறார். பெனிங்னியோவும் மார்கோவும் நண்பர்கள் ஆகிறார்கள். பெனிங்னியோ, கோமாவில் இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தான், உணர்வுகள் இருக்கிறது என்று மார்கோவுக்கு சொல்லுகிறார். கூடவே லிடியாவுடன் பேசிக்கொண்டே இருக்குமாறும் சொல்லுகிறார். அலிசியாவுடன் தான் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதாகவும் சொல்லுகிறார்.

பெனிங்னியோ அலிசியாவைப்பற்றியும் தன்னைப்பற்றியும் மார்கோவிற்கு சொல்லும்போதுதான் நமக்கும் பல விஷயங்கள் தெரியவருகின்றன. அதுவரை, அலிசியாவை பெனிங்னியோவின் காதலியாக நினைத்த நமக்கு, அலிசியாவுக்கு பெனிங்னியோவை தெரியாது என்பதே மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. பெனிங்னியோவின் வீட்டிற்கு எதிரில் இருந்த பள்ளியில்தான் அலிசியா பாலே நடனம் கற்ற்வந்தாள். அவளை ஜன்னல் வழியே கண்டு மயங்கிய பெனிங்னியோ இரு முறை அவளை சந்தித்திருக்கிறான். அலிசியாவின் பர்சை வீதியில் கண்டெடுத்து ஒப்படைத்தபோது ஒரு முறை. அல்சியாவை காண்பதற்காக வீட்டிலேயே கிளினிக் வைத்திருக்கும் அலிசியாவின் சைகாலஜிஸ்ட் தந்தையிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அலிசியாவின் அறைக்குள் நுழைகிறான். அவன் வெளியே வரும்போது தற்செயலாக அவனைக்காணும் அலிசியா அலறுகிறாள். அலிசியாவின் தலைக்கிளிப்பை அங்கிருந்து எடுத்து வந்த பெனிங்னியோ, தன் வீட்டில் அவள் பள்ளிக்கு வருவதற்காக காத்திருக்கிறான். அவள் வரவில்லை. பிறகு, மருத்துவமனைக்கு வந்த அவனுக்கு புது நோயாளியை தன் கண்காணிப்பில் விட்டிருப்பது தெரிந்து பார்க்கப்போகிறாள். மழை பெய்ந்துகொண்டிருந்த போது நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி கோமாவிற்கு போய்விட்ட அலிசியாதான் அந்த நோயாளி. சுயநினைவில் இர்ந்த போது கிட்ட நெருங்க முடியாத அலிசியாவை, இப்போது முழுக்க முழுக்க கவனிப்பது பெனிங்னியோதான். அவளுக்காகவே வாழ்ந்து வருகிறான் அவன்.

அவ்வப்போது அலிசியாவை அவளது பாலே நடன ஆசிரியை வந்து பார்க்கிறாள். அந்த ஆசிரியைதான் நாம் முதலில் பார்த்த மேடை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இரு பெண்களில் ஒருவர். முதன்முறை அலிசியாவின் பர்சை எடுத்துக்கொடுத்து அவளுடன் பேசியபோது பெனிங்னோ அவளிடம் கேட்ட கேள்விகளில் ஒன்று அலிசியாவின் பொழுதுபோக்குகள் பற்றி. அவளுக்கு உலகநாடுகளுக்கு சுற்றுலா போக ஆசை, சைலண்ட் மூவிஸ் பிடிக்கும் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறான். இப்போது அவளுக்காக உலகநாடுகள் பற்றி வாசிப்பதும், அவளுக்கு படித்த படங்களைப்பார்த்து வந்து அலிசியாவிடம் கதைசொல்வதுமாக பெனிங்னோ இருக்கிறான்.

மார்கோவிற்கு மட்டுமல்ல நமக்கே பெனிங்னியோ அலிசியாமீது செலுத்தும் அக்கறை ஆச்சரியப்படுத்துகிறது. பெனிங்னியோவின் சொற்படி மார்கோவும் லிடியாவிடம் பேசுகிறான். ஆனால் மார்கோவிற்கு லிடியா தன்னிடம் முன்பு பேசவேண்டும் என்று சொன்னது அவளும் அவளுடைய பழைய காதலனும் திருமணம் செய்வதாக எடுத்த முடிவைப்பற்றி என்று தெரியவருகிறது. இதற்கிடையில் பெனிங்னியோ, அவன் பார்த்து விட்டு வந்த ஒரு படத்தைப் பற்றி அலிசியாவிடம் சொல்லுகிறான். அப்போது நடந்த ஒரு அசம்பாவித சம்பவம் நமக்கு படம் முடியும் தறுவாயிலேதான் தெரியவருகிறது.

கோமாவில் இருக்கும் அலிசியாவை தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக மார்கோவிடம் சொல்லுகிறான் பெனிங்னியோ. கோமாவில் இருக்கும் லிடியாவையும் அவளுடன் இருப்பதற்காக வந்த அவளின் பழைய காதலனையும் விட்டுவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறும் மார்கோ, பெனிங்னியோவை அப்படி எல்லாம் பேச வேண்டாம் என்று எச்சரிக்கிறான். அப்படி செய்யப்போவதில்லை என்று சொல்லவைக்கிறான். தன்னுடைய பழைய சுற்றுலா எழுத்தாளர் வேலையை தொடரும் மார்கோ, பல மாதங்களாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறான். இந்நிலையில் அலிசியாவின் உடலில் நிகழும் மாற்றங்கள் மருத்துவர்களை யோசிக்க வைக்கிறது. பரிசோதனையில் அலிசியா கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. விசாரணையில் பெனிங்னியோவை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று தெரியவருகிறது. பெனிங்னியோ சிறைச்சாலைக்குப்போக அலிசியா வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறாள். இதெல்லாம் லிடியா இறந்துபோனதை பத்திரியையில் பார்த்து மருத்துவமனையை தொடர்பு கொள்ளும் மார்கோவிற்கு தாமதமாகவே தெரியவருகிறது. பெனிங்னியோவை பார்ப்பதற்காக ஸ்பெயினிற்கு திரும்பி வரும் மார்கோ, பெனிங்னியோவின் வீட்டில் தங்குகிறான். பெனிங்னியோ அந்த வீட்டை அலிசியாவிற்காகவே தயார் செய்து வைத்திருப்பதையும் காண்கிறான்.

மூளை சரியில்லாதவன் என்று கருதப்படும் பெனிங்னியோ, மார்கோவிடம் அலிசியா எப்படி இருக்கிறாள் என்று கேட்ட படியே இருக்கிறான். அலிசியா இறந்து விட்டாள் என்று கருதும் மார்கோ, ஒரு நாள் பெனிங்னியோவின் வீட்டில் இருந்து நடனபள்ளியில் பயிற்சி செய்யும் அலிசியாவைப் பார்த்து ஆச்சரியம் அடைகிறான். பெனிங்னியோவின் வக்கீலையும் சந்தித்து என்னவேது என்று விசாரிக்கும் மார்கோ, அனைவரும் பெனிங்னியோவிடம் பொய் சொல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறான். குழந்தை பிறப்பின்போது அலிசியா சுயநினைவு அடைந்ததையும், குழந்தை இறந்தே பிறந்ததையும் தெரிந்துகொள்கிறான். ஆனால், பெனிங்னியோவின் வக்கீல் மார்கோவிடம், தான் பெனிங்னியோவிடம் அலிசியா இறந்து விட்டாள் என்று சொல்லப்போகிறேன் என்று சொல்வதை தடுக்க முடியவில்லை. ஒரு நாள் காலை செல்தொலைபேசியை ஆன் செய்யும் மார்கோ, அதில் பெனிங்னியோ, தான் அலிசியாவிடம் போவதாக விட்டிருக்கும் செய்தியை கேட்கிறான். அலறி அடித்துக்கொண்டு சிறைச்சாலைக்கு செல்லும் அவனுக்கு பெனிங்னியோ அளவிற்கு அதிகமாக மருந்துகளை சாப்பிட்டு இறந்து விட்டான் என்ற செய்தியே கிடைக்கிறது. பெனிங்னியோ வைத்திருந்த பொருட்களில் ஒன்று, அலிசியாவின் ஹேர் கிளிப்.
பெனிங்னியோ அவன் வீட்டை மார்கோவிற்கு விட்டுச்செல்கிறான்.

ஒரு நாள் மேடை நிகழ்ச்சிக்கு செல்கிறான் மார்கோ. அங்கே அலிசியாவையும் அவளது ஆசிரியையும் கண்டு அதிர்ச்சி அடைகிறான். மார்கோவை யாரென்று தெரியாத அலிசியா அவனை அவன் நலமா என்று கேட்கிறாள். மார்கோவை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியையிடம், பெனிங்னியோ இறந்து போன விவரத்தை தனியாக அழைத்துக்கூறுகிறான். தொடரும் மேடை நிகழ்ச்சியை அலிசியா ரசிக்க, அவளுக்கு முன்னால் இருந்த மார்கோ அடிக்கடி திரும்பி அலிசியாவைப் பார்ப்பதோடு படம் முடிகிறது.

Pedro Aldomovarஇன் ‘All about my mother’ படத்தை பார்த்திருந்ததனால், கொஞ்சம் எச்சரிக்கையோடே இந்தப்படத்தை பார்த்தேன். ஆனால், நான் பயந்த மாதிரி இல்லை. நன்றாக இருந்தது இந்தப்படம். நண்பர்களிடம் தைரியமாக பாருங்கள் என்று சொல்லக்கூடியதாகவும் இருந்தது. ஆல்டமோவரின் படங்களில் மேற்சொன்ன படத்தையும் இந்தப்படத்தையும் மட்டுமே பார்த்திருப்பதனால் இவருடைய பாணியை பற்றி நிறைய சொல்ல முடியவில்லை. ஆனால் உறவுகளில், நிகழ்சிகளில் சிக்கல்கள் இருக்கும் படங்களையே எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். சாதாரணமாக செல்லும் இந்தப்படம்கூட, பெனிங்னியோ, அலிசியாவை ஒருதலையாக மட்டுமே காதலிக்கிறான் என்று தெரியும் போது வித்தியாசப்படுகிறது. பிறகு சுயநினைவில்லாத அலிசியாவை கற்பழித்த பெனிங்னியோவின் மீது வெறுப்பு வரவில்லை என்பது இயக்குநரின் திறமை என்றே நினைக்கிறேன். அலிசியாவின் மீது வைத்த அன்பினால், அவள் இறந்துபோய் விட்டாள் என்று நினைத்து தற்கொலை செய்துகொள்ளும் பெனிங்னியோ மீது நமக்கு அனுதாபமே வருகிறது. வேறு உணர்வுகள் இருந்தாலும், அனுதாபமே முன்னிற்கிறது. மார்கோவைப்போல.

Talk_To_Her_02.jpg

பெனிங்னியோவாக நடித்த ஜாவியர் கமாரா நல்ல தேர்வு. நல்ல குரல். படம் நெடுக்க பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால் சலிப்படைய வைக்கவில்லை. அதேபோல மார்கோவாக நடித்த டாரியோ கிராண்டினெட்டி(Dario Grandinetti), ரொசாரியோ �ப்ளோரெஸ்(Rosario Flores), லொயோனொர் வாட்லிங்க்(Leonor Watling) என்று அனைவரும் அருமையாக நடித்திருந்தனர். இசையும், படத்தொகுப்பும், ஒளிப்பதிவும் படத்தின் வெற்றிக்கு வேறு காரணங்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்த இப்படத்தை நினைத்துப்பார்த்தால் மனதில் முதலில் வரும் உணர்வுகள், நட்பு, காதல், தனிமை, இழப்பு, பெனிங்னியோவின் அக்கறை அவன் அலிசியாவை பராமரிக்கும் ஒவ்வொரு அசைவிலும் தெரிவது. அந்த அக்கறைதான் அவன் மேல் அவ்வளவு கோபம் வராததற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

சாதாரணமாகவே நீட்டி முழக்கி கதை சொல்லும் நான், இந்தப்படத்தைப்பற்றி நிறையவே கதைத்திருக்கிறேன். முடிச்சுகளையும் சொல்லிவிட்டேன். இந்தப்பட்த்தை பற்றி எப்படி சொல்வது என்று இன்னமும் குழப்பமாகவே இருக்கிறது. எப்படி இருந்தது என்று சொன்னீர்கள் என்றால் உதவியாக இருக்கும். நீங்கள் சொல்வது உதவியாக இருந்தால், அதன்படி மாற்றி எழுதுகிறேன்.

July 7, 2003

The Insider (1999)

insider.gif

(About The Nicotine Delivery Business and A whistle Blower)

நான் இன்னிக்கு பேசப்போற படம் The Insider (1999). ரஸ்ஸல் குரோவும் ஆல் பச்சீனோவும் நடித்து மைக்கேல் மான் இயக்கியது. இந்தப்படத்திற்க்காக ரஸ்ஸல் குரோ எக்கச்சக்கமாக எடை போட்டார். எட்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Brown & Williamson சிகரட் கம்பெனிக்காக வேலை செய்த விஞ்ஞானி Jeffrey Wigand (ரஸ்ஸல் குரோ) வேலை நீக்கம் செய்யப்படுகிறார். கான்பிடென்ஷியாலிடி பத்திரத்தில் கையப்பம் இடுகிறார். அக்கம்பெனியில் முக்கிய ரிசேர்ச் விஞ்ஞானியாகவும் கார்ப்பரேட் வைஸ் பிரெசிடெண்டாகவும் இருந்த அவர் ஏன் திடீரென்று வேலை நீக்கம் செய்யப்பட்டார் என்று நாம் குழம்பும் அதே வேளையில் கம்பெனி கட்டடத்தில் இருந்து வெளியேறும் அவரது நடவடிக்கை அனைத்தும் கண்காணிக்கப்படுவதும் நமக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று உணர்த்துகிறது. உலகின் இன்னொரு மூலையில் அமெரிக்க தொலைக்காட்சியான CBSல் வரும் 60 Minutes நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான Lowell Bergman (ஆல் பச்சீனோ) அதற்கான செய்திச்சேகரிப்பில் ஈடுபடுகிறார். ‘60 Minutes’ நிகழ்ச்சியை நடத்தும் மைக் வாலஸ�ம் ( Christopher Plummer) பேர்க்மானும் மக்களுக்கு தெரியவேண்டும் என்று நினைக்கும் பல விஷயங்களை வெளிக்கொணர்கிறார்கள்.

சந்தர்ப்ப வசமாக சிகரெட்டை பற்றித்தெரிந்த ஆள் வேண்டும் என்று விசாரித்து கிடைத்த தகவலின்படி வாகண்டை தொடர்பு கொள்கிறார் பேர்க்மான். வாGகண்டின் நடவடிக்கைகள் பேர்க்மானின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. படத்தில் இருவரும் மாறி மாறி பாக்ஸ் செய்துகொள்ளும் காட்சி பல விஷயங்களை சொல்லாமல் சொல்லுகிறது. வாகண்டை சந்திக்கவேண்டும் என்பதற்காகவே கெண்டகி மாநிலத்திற்கு வருகிறார் பேர்க்மான். அப்போதும் வாகண்டின் நடவடிக்கைகள் பேர்க்மானின் ஆர்வத்தை கிளறுகிறது. பேர்க்மான் கேட்ட விஷயங்களுக்கு கன்சல்டண்டாக மட்டும் இருப்பதாக சொல்லி வெளியேறுகிறார் வாகண்ட்.

வாகண்ட் முதலில் கையப்பமிட்ட கான்பிடெண்ஷியாலிட்டி பத்திரம் போதாதென்று கூறும் ப்ரௌன் & வில்லியம்சன் கம்பெனி வாகண்டை மறைமுகமாக எச்சரிக்கிறது. தேவர் மகனில் நாசர் சொல்லுவாரே ‘என்ன ஆனாலும் கவலைப்படாதே. உன் பொண்டாட்டி புள்ளங்கள நான் பார்த்துக்குறேன்’னு. அந்த டைப் எச்சரிக்கை. கம்பெனி நடவடிக்கையினால் கோபம் கொண்ட வாகண்ட் பேர்க்மானிடம் பேர்க்மான் நினைத்தது சரியென்று சொல்லுகிறார். தன்னைப்பார்த்து தன் கம்பெனி பயப்படுவது நியாயமானது என்று சொல்லும் வாகண்ட் அதற்கு மேல் தன் கான்பிடென்ஷியாலிட்டி பத்திரத்தை காரணம் காட்டி ஏதும் சொல்ல மறுக்கிறார். $300,000 ஆண்டு வருமானம் நின்று போனதால் வீடு மாறுகிறார்கள். அவர்கள் சென்ற புது வீட்டிலும் கம்பெனிக்காரர்களின் தொந்தரவு தொடர்கிறது. படிப்படியாக அதிகரித்து வரும் தொந்தரவு தாங்க முடியாத வாகண்ட் பேர்க்மானிடம் தான் பேட்டிக்கு தயார் என்று சொல்லி நியுயார்க் நகருக்கு சென்று பேட்டி குடுக்கிறார். அவரது மனைவிக்கு அவர் பேட்டி கொடுப்பது குறித்து சம்மதம் இருக்கவில்லை.

பேட்டியில் அவர் சொன்ன விஷயங்கள் மிகவும் ஆச்சரியப்படக்கூடிய வகையில் இருந்தாலும், வாகண்ட் உண்மை சொல்லுகிறார் என்பதை அங்கிருந்த அனைவரும் உணர்கின்றனர். இதற்கிடையே அமெரிக்க சிகரெட் கம்பனிகளிலே 3வது இடம் பெற்ற ப்ரௌன் & வில்லியம்சன் கம்பனியின் பலம் பற்றி அனைவரும் பேசிக்கொள்கிறார்கள். சிபிஎஸ்ஸில் பேட்டி ஒலிபரப்பாவத்ற்கு முதல் ஏதாவது மாநில நீதிமன்றத்தில் வாகண்டின் சாட்சியம் குடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அப்படி நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கப்படும் விஷயங்கள் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக மாறி விடுவதால் கான்பிடென்ஷியாலிட்டி பத்திரம் செல்லுபடி ஆகாது என்றும் பிளான் பண்ணிக்கொள்கிறார்கள். அமெரிக்காவின் தென்மாநிலங்களிலேயே மிசிசிப்பி மாநிலத்தில்தான் அந்த பெரிய சிகரெட் கம்பனியில் செல்வாக்கு செல்லுபடியாக வில்லை. பலவித யோசனைகளுக்கு பிறகு சாட்சி சொல்வதற்கு சம்மதம் தெரிவிக்கிறார் வாகண்ட். அங்கும் எதிர்த்தரப்பு வக்கீலால் எச்சரிக்கப்படுகிறார்.

இதற்கிடையில் வாகண்டின் மனைவி விவாகரத்திற்கு மனுப்போடுகிறார். வேலை ஏதும் கிடைக்காத வாகண்ட் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கிறார். நேர்முகத் தேர்வின்ப்போது வாகண்ட் சொல்கிறார், புகையிலைக் கம்பெனியில் வேலை செய்தவனுக்கு சுகாதாரம் சம்பந்தப்பட்ட கம்பனிகள் வேலை கொடுப்பதில்லை என்று.

இத்தோடு விஷயம் முடிந்து விடவில்லை. சிகரெட் கம்பனி தன்னுடைய செல்வாக்கை வைத்து சிபிஎஸ் கம்பெனியை பலவாறு நிற்பந்தப்படுத்துகிறது. கூடவே வாகண்ட் செய்த சின்னச்சின்ன தவறுகளையெல்லாம் பெரிசு படுத்தி ஒருவித அழுகுணி ஆட்டம் ஆடுகிறது சிகரட் கம்பெனி. சிகரெட் கம்பெனி நிர்ப்பந்தத்தினாலும் ஏனைய சில காரணங்களினாலும் சிபிஎஸ் கம்பெனி வாகண்டின் பேட்டியை தவிர்த்து மீதியை ஒளிபரப்ப சொல்கிறது. அனைத்தையும் இழந்து ஒரு மோட்டல் அறையில் வாழ்ந்து கொண்டு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரியும் விஞ்ஞானி வாகண்ட் என்ன செய்கிறார்? ‘60 Minutes’ நிகழ்ச்சித் தயாரிப்பாளரான பேர்க்மான் என்ன செய்கிறார்? கடைசியில் என்ன நடக்கிறது?

சராசரி ஆங்கிலப்படங்களை விட கொஞ்சம் நீளமான படம். வாகண்டாக வரும் ரஸ்ஸல் குரோ வயதான அத்லெட் இல்லாத, விஷய ஞானம் இருந்தாலும் மக்களுடன் எப்படி பழக வேண்டும் என்பது தெரியாத விஞ்ஞானி வாகண்டாக மிக மிக அருமையாக நடித்திருக்கிறார். இப்படம் வெளிவரும்போது அவர் இப்போதிருக்கும் அளவு புகழ் பெறவில்லை. இந்தப்படமும், இதற்கு அடுத்து வந்த முற்றிலும் மாறுபட்ட கிளாடியேட்டர் படமும் இவரை மக்களுக்கு அடையாளம் காட்டியது. த இன்சைடர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் நாமினேஷன் கிடைத்தது குரோவிற்கு. இவரது நடிப்பை இன்னமும் சிலாகித்துப்பேசவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

அடுத்து பேர்க்மானாக வரும் ஆல் பச்சீனோ சமீப காலமாக நடித்த சில அபத்த கதாபாத்திரங்களில் நடித்ததைப்போல நடிக்கவில்லை. இன்னமும் கொஞ்சம் டோன் டவுன் பண்ணி இருந்திருக்கலாம் என்று சிற்சில சமயங்களில் நினைக்க வைத்தாலும் நன்றாக நடித்திருக்கிறார். உயிருடன் இருக்கும் ஒருவரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் மைக் வாலசாக நடித்த கிரிஸ்டோபர் ப்ளம்மர்.

இந்தப்படத்தை குறிந்த மட்டில் மிகவும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம். இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டது என்பதாகும். 1990களின் நடுப்பகுதில் நடந்த சம்பவங்கள் 1999ம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதற்கு இத்திரைப்பட திரைக்கதையாசிரியர்களில் ஒருவரும் இப்பட இயக்குநருமான மைக்கேல் மான் மிகவும் சிரமப்பட்டிருப்பார் என்பது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று. (சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டார்). பொதுவாக உண்மைச்சம்பவங்களை படமாக்கும்போது மற்ற திரைப்படங்களில் இருக்கும் விறுவிறுப்பு ஒரு பங்கு குறைந்தே இருக்கும் என்று சொல்வார்கள். இப்படம் ஒரு விதிவிலக்கு என்று தோன்றுகிறது. இது உண்மையான சம்பவம், அதுவும் 10 ஆண்டுகளுக்குள் நடந்த சம்பவம் என்பது நம்மை படத்தோடு ஒன்ற வைக்கிறது.

குறிப்பிட்டுக்கூற பட வேண்டிய இன்னொரு விஷயம் ஒளிப்பதிவு. பட ஓட்டத்திற்கு எத்தகைய ஊறும் விளைவிக்காமல் அருமையாக இருந்தது ஒளிப்பதிவு. அதே போல குறிப்பிட்டுக்கூறப்படவேண்டிய இன்னொரு அம்சம் இசை. கிளாடியேட்டர் பட இசையை சில இடங்களில் ஞாபகப்படுத்தியது. படத்தை விறுவிறுப்பாக செல்வதற்கு எடிட்டிங்கும் ஒரு காரணம்.

ஆல் பாசினோவின் படம் போல விளம்பரப்படுத்தப்பட்ட இப்படம் எல்லோராலும் பேசப்பட்டது. அவர்கள் பேசியது ரஸ்ஸல் குரோவின் நடிப்பை.

Sometimes the Truth is Much More Interesting!

உண்மை சம்பவம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்களுக்கு

High Speed Internet Users : http://www.jeffreywigand.com

Others: http://www.jeffreywigand.com/insider